செவ்வாய், 15 டிசம்பர், 2009

சைக்கிள் கனவு...!

அவன் தரம் 5 படித்துக் கொண்டிருந்தான். அந்த வருடத்தின் ஆவணி மாதத்தில் அவனுக்கு புலமைப்பரிசில் பரீட்சை. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை கல்விதான் மூலதனம். அத்திவாரமே மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என அவனின் பெற்றோர் நினைத்து அதிக ஆர்வத்தோடு கற்பித்தனர். காரணம் பல இருந்தது. பெரிய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வு. முதன்முதலில் சந்திக்கும் பெரும் பரீட்சை. இதில் சித்தியடைந்தால் தேசிய கல்லூரிகளில் அனுமதி கிடைக்கும். மாதந்தோறும் கல்விச்செலவுக்கு அரசின் ஊக்குவிப்புப் பணம். அவன் மனமோ சைக்கிள் வாங்க வேண்டும். இரண்டு கைகளையும் விட்டு விட்டு காற்றில் பறப்பது போல ஓட வேண்டும் என சதா எண்ணிக் கொண்டிருந்தது. தனது பெற்றோரிடம் கேட்டும் விட்டான். அவனுக்கு அவர்களின் பொருளாதார நிலைமை தெரிய வாய்ப்பில்லை. அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடும் ஒரு வறிய குடும்பம். ஆனால் அதனை அவனுக்கு தெரியப்படுத்தாமல், “நீ பரீட்சையில் சித்தியெய்தினால் உனக்கு புது சைக்கிள் நிச்சயம்” என தந்தை அவனுக்கு உறுதி மொழி அளித்தார்.

அவன் மனம், இப்போது மெதுவாக படிப்பில் கவனம் செலுத்தியது. ஓய்வு நேரத்தில் வந்து வீதியால் போய்வரும் சைக்கிள்களைப் பார்த்து தனது மனதைச் சாந்தப்படுத்துவான். இடைக்கிடை தகப்பனிடம் கேட்டு அவர் கொடுத்த வாக்கினை உறுதிப்படுத்திக் கொள்வான். பரீட்சையும் வந்தது. அன்றைய தினம் அவனை பரீட்சைக்கு தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக் கொண்ட சென்ற தந்தையிடம் “அப்பா வாங்கித்தருவீங்களா...?” என்று கேட்டுக் கொண்டே சென்றான். அவனிடம் தந்தையும் “ஓம் ஓம் ...” என்று பதிலளித்தார். பரீட்சை முடிந்தது. அவனுக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை...! அடிக்கடி எப்பொழுது பரீட்சை பெறுபேறு வரும் என்று அங்கலாய்த்தபடி இருந்தான். இப்போது தந்தைக்கு சிறு பயம் தொற்றிக் கொண்டது. மகன் சித்தியடைந்துவிட்டால் எப்படியும் வாங்கிக் கொடுக்க வேண்டும். சித்தியடையாவிட்டாலும் சைக்கிளை வாங்கிக் கொடுத்து அவனது கவலையை நீக்கவேண்டும். நண்பர்களிடத்திலும் தெரிந்தவர்களிடத்திலும் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

பரீட்சை மறுமொழி வரும் நாளும் வந்தது. அன்று அவன் கோவிலுக்கு சென்று விட்டு பாடசாலைக்குப்போய் அங்கே பெறுபேறுப் பட்டியலில் தன்னுடைய பெயரைத்தேடினான். 174 (200 இற்கு) புள்ளிகள் பெற்று அவன் முதலிடத்தில் தேறியிருந்தான். அவனுக்கு பரீட்சையில் சித்தியடைந்தது பெரிய விடயமாகத் தெரியவில்லை. தனக்கு சைக்கிள் வரப்போகுதே என்றே துள்ளிக் குதித்தான். அந்தச் சிறிய பாடசாலையில் அவன் மட்டுமே சித்தியடைந்தவன். ஆசிரியர்கள் தந்தையை பாராட்டினர். அவன் தந்தையின் கையைப் பிடித்து இழுத்து அவரை வேகப்படுத்தினான். தந்தையும் அவனை உச்சிமோந்து, தாயிடம் அழைத்துச் சென்று செய்தியைக் கூறிவிட்டு யாழ்நகரப் பட்டணம் சென்றார் சைக்கிள் வாங்க. தாயோ ஆனந்தக் கண்ணீர் மல்க அவனை கட்டியணைத்தாள்.

இவனும் வீட்டின் வாசலில் காத்திருந்தான். தந்தை வருவார். புதுச்சைக்கிள் தருவார். எல்லா இடமும் போய்வரலாம். முன்பு ஓடிப்பார்க்க சைக்கிள் கேட்டு தர மறுத்த நண்பர்கள் முன்னால் போய் ஓடிக்காட்டவேண்டும் என்று எண்ணி எண்ணி குதூகலித்திருந்தான். மாலையானது அப்பவைக் காணவில்லை. வருவார் வருவார் என்று பார்த்துக் கொண்டிருக்க அயலவர் ஒருவர் ஓடிவந்து “அக்கா....அக்கா...இப்ப பின்னேரம் யாழ்ப்பாணத்தில மேலால வந்து, சுப்பர் சொனிக் போட்ட குண்டில அண்ணை............” என்று இழுத்தான். அவனின் தாய் “அய்யோ.....” என அலறித்துடித்து கீழே விழுந்தாள். அவனோ அம்மா, அம்மா என்னம்மா என்னம்மா எனக் கேட்டு அழுதான். பின்னர் தெரிந்து கொண்டான் அப்பா இறந்து விட்டார் என்று. மனம் கல்லானான். அழவில்லை. தன்னால்தானே அப்பா இப்படி ஆகினார் என மனம் பொருமினான். அன்றிலிருந்து சைக்கிளை வெறுத்தான்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

வெல்லத்தமிழ் இனி மெல்லச்சாகுமா?

அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அவர்களின் நண்பர்களாக இரண்டு குடும்பங்கள். எல்லோரும் சேர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். முழுவதும் ஆங்கிலத்தில்தான். அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் நல்ல புலமையானவர்கள் போல இருந்தது. சரளமாக கதைத்தார்கள். ஒபாமாவின் ‘எபெக்’ வருகை முதல் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் வரை அலசினார்கள். ஆனால் எல்லாம் ஆங்கிலத்தில். அதுவும் அனைவரும் தமிழ்க் குடிமக்கள். இலங்கையில் இருந்து வந்து இங்கே குடியேறியவர்கள். நல்ல பதவிகளில் இங்கே வேலை செய்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் அவர்கள் பேசுவதைக் கண்டதும் மனதுக்கு கவலையாக இருந்தது. ஏன்தான் இவர்கள் இப்படியோ ? இரண்டு சீன மொழி பேசுபவர்கள் சந்தித்தால் அவர்கள் சீன மொழியில் பேசுகிறார்கள். இரண்டு மலாய் மொழி பேசுபவர்கள் சந்தித்தால் மலாய் மொழியில் பேசுகிறார்கள். இரண்டு சிங்கள் மொழி பேசுபவர்கள் சந்தித்தால் சிங்களத்தில் பேசுகிறார்கள். ஆனால் தமிழர்கள் நாமோ....? மொழி ஒரு ஊடகம். எமது மொழியை தெரியாதவர்களுடன் கதைப்பதற்கு அதனை உபயோகிக்கிறோம். அவ்வளவே. தமிழர்களுடன் தமிழில் கதைக்கலாந்தானே? எல்லோருக்கும் எல்லா வார்த்தைகளும் தெரியும் என்பதல்ல. அந்த தெரியாத வார்த்தைகள் ஆங்கிலத்தில் தெரியும் என்றால் அந்த மொழியில் பேசலாம். ஆங்கிலம் ஓரளவு கலப்பதில் தப்பில்லை. ஆனால் முற்றிலுமாக ஆங்கிலத்தில் இரு தமிழர்கள் கதைப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் சாகும் என்ற வாக்கியம் மெய்த்துப்போய் விடும்.

****************

உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) அண்மையில் நடாத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு - 2009 இல் சிங்கப்பூரில் இருந்து பலர் கலந்து கொண்டு தமது புதுமையான படைப்புக்களை - கணினி மூலம் எவ்வாறு தமிழினை மேம்படுத்தலாம் என்ற அடிப்படையில் - அங்கே வெளிக்கொணர்ந்திருந்தார்கள். தமிழ் செம்மொழியாகவும் சிறப்பாகவும் கையாளப்படுகின்ற ஒரு நாடு சிங்கப்பூர் என்றால் அது மிகையல்ல. அத்தகைய தேசத்தில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அங்கே சிறப்பாக தமது படைப்புகளை தெரியப்படுத்தினர். இது தொடர்பாக அவர்களிடம் சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியும் சிறப்பு பேட்டி எடுத்து ஒளிபரப்பினர். பின்னர் அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு சிறப்பு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே சென்ற எனக்கு ஏமாற்றமே. ஒரு 15 பேர் அளவில் வந்திருந்தார்கள். ஏற்பாடு செய்தவர்களும் ஒரு 20 அல்லது 25 பேர் இருக்க கூடிய ஒரு வகுப்பறையையே தெரிவு செய்திருந்தார்கள். ஏற்பாடு செய்தவர்கள் முன்னரே எதிர்பார்த்துத்தான் இருந்தார்களோ தெரியாது இவ்வளவு பேர்தான் வருவார்கள் என்று. ஆனாலும் அவர்களின் அக்கறையான, ஆரோக்கியமான முயற்சிக்கு முதலில் நன்றிகள். ஆனால் அங்கே ஏன் மற்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக தமிழ் கற்பிக்கின்ற “ஆசிரிய மணிகள்”. இந்த இணைய மாநாட்டின் முக்கிய நோக்கமே கணினி மூலம் எவ்வாறு தமிழை இலகுவாக கற்பிக்கலாம் அல்லது எல்லாத் தரப்பினருக்கும் எடுத்துச் செல்லலாம் என்பதே. ஆனால் அதனை கற்பிக்கின்றவர்கள் எவரும் புதிய விடயங்களில் ஆர்வம் காட்டாமை வருத்தத்துக்குரியதே. கற்பிப்பது அவர்கள் பிரச்சினை. ஆனால் இந்த ஆக்கங்களை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கி பணம் செலவழித்து அங்கே சென்று வெளிப்படுத்திவிட்டு வந்தவர்களை ஊக்கப்படுத்தவாவது அவர்கள் வந்திருக்கலாம். பலநூற்றுக்கணக்கான தமிழ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் வரவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம். இப்படியான சில புறக்கணிப்புக்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவு வளர்ச்சியினை மந்தகதியாக்கும். தமிழின் சாவையும் விரைவாக்கும்.

******************

சங்கீத இசைக்கச்சேரி மேடைகள் எல்லாவற்றிலும் அநேக தமிழ்ப் பாடகர்களால் வேற்று மொழிப்பாடல்கள் பாடுவது என்பது வழமையான ஒன்றாகிவிட்டது. இசைக்கு மொழியேது என்பது உண்மைதான். ஆனால் சபையறிந்து பாடுவது என்பது ஒரு நல்ல பாடகருக்கு அழகு. அப்போதுதான் அந்த அரங்கினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இல்லையேல் அரங்கம் சலசலக்கத் தொடங்கிவிடும். முற்றிலும் தமிழர்கள் நிறைந்த அரங்கிலே பிற மொழிக் கீர்த்தனைகளை பாடுகின்ற சங்கீதப் பெருமக்களை என்ன சொல்வது? பிறநாடுகளை விடுங்கள். இலங்கையில் கம்பன் கழகம் நடாத்துகின்ற இசைவேள்வியில் பாடுவதற்கு வருகின்ற இந்திய கர்நாடக சங்கீத வித்துவான்கள் எல்லாம் தெலுங்கு கீர்த்தனைகள் உட்பட பிற மொழிப்பாடல்களை பாடுவதற்கு தயங்குவதில்லை. அந்த அரங்கம் முழுவதும் தமிழ் பேசும் நல்லுள்ளங்கள் மட்டுமே இருக்கும். சிறிது நேரத்தில் அவர்கள் குசுகுசுக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனை ஏன் அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல ஏற்பாட்டாளர்களும் இதிலே சிரத்தை எடுப்பதில்லை. பெரிய வித்துவான் வந்து இசைநிகழ்ச்சி நிகழ்த்தினால் போதும் எப்படி, எதை பாடவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதில்லை. இதற்குமப்பால் முன் வரிசையில் இருந்து தாம் ஏதோ பாரிய இசை ஞானத்துடன் இருப்பதாக நினைத்து தலையாட்டி, தாளம் போடுவது அவர்களை இன்னும் அங்கீகரிப்பதாகவே இருக்கும். இப்படி தமிழ்ப் பாடல்களை மறந்து சென்றால் தமிழ்ப் பாடல்கள் காலப்போக்கில் காணாமலே போய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு யார் மணிகட்டுவது. கலைஞர்களும் திருந்தவேண்டும். ஏற்பாட்டாளர்களும் இதிலே முன்னின்று உழைத்து தமிழ்ப் பாடல்களைப் பாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மெல்ல இனிச்சாவதை எவரும் தடுக்க முடியாது.
இந்தப் படத்தினை உருவாக்கி அனுப்பி உதவிய நண்பர் கு. அசோக்பரன் அவர்களுக்கு நன்றிகள்..!

செவ்வாய், 27 அக்டோபர், 2009

இதயம் வலிக்கும் ஒரு இடப்பெயர்வு....!

எமது வாழ்வில் ஒரு பெரும் சோகத்தை தந்தது, 1995 இன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு. ஒக்ரோபர் 30, வலிகாமம் வலிகளை தாங்கிக் கொண்டு ஒரு இரவுக்குள் தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்தது. வார்த்தைகள் கொண்டு இதனை வடித்துவிட முடியாது. அனுபவித்தவன் ஒவ்வொருவனும் ஒரு பெருமூச்சோடு அதனை நினைவு கூர்ந்து கொள்வான். 'சூரியக்கதிர்’ என்ற ஒரு இராணுவ நடவடிக்கை யாழ். தீபகற்பத்தினை விழுங்க ஆரம்பித்தது. மிகச்செறிவான எறிகணைகள்....! பலமான வான் தாக்குதல்கள்...!! கவச வாகனங்களின் குண்டு உமிழ்தல்...!!! என குடாநாடு அதிர்ந்த வண்ணமே இருந்தது. இதன் உச்சக்கட்டமாக நடந்ததுதான் அந்த பாரிய இடப்பெயர்வு. இன்று இலகுவாக 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. எத்தனை மாற்றங்கள். அதனை விட இப்போது எத்தனை கொடிய வலிகள்.

எல்லா இடத்திலும் பதட்டம். எல்லோர் முகத்திலும் கலக்கம். இப்படியான பல இடப்பெயர்வுகளை முன்னரே சந்தித்திருந்தாலும் இது ஒரு வித்தியாசமாக இருந்தது. காரணம் ஒரு சொற்ப பொழுதுக்குள் எல்லோரும் அகதியாக்கப்படுகிறோம் என்ற ஆதங்கம் தெரிந்தது. ஒரு இரவுக்குள் யாழ். குடாநாட்டின் வலிகாம பிரதேச மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து தென்மராட்சிக்குள் புகுந்தனர். ஏறத்தாழ அனைத்து மக்களும் ஊரோடின் ஒத்தோடு என புறப்பட்டே விட்டனர். தேடிய சொத்துக்கள், பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்த முதுசங்கள், சொந்த வீடு, காணி, வயல், தோட்டம், கால்நடைகள் எல்லாம் கண் முன் தெரியவில்லை. அரக்கர் கூட்டத்தின் கைகளில் அகப்படக்கூடாது என்பதும், எறிகணைகளுக்குள் அகப்பட்டு அநியாயமாக சாகக் கூடாது என்பதும் உடைமைகள் பற்றி எண்ண முடியாமல் போய்விட்டது. கையில் அகப்பட்டவற்றுடன் புறப்பட வேண்டிய ஒரு சூழல். ஆண்டாண்டு காலமாக வசித்த பூமியை விட்டு கணப்பொழுதில் அகல வேண்டிய ஒரு இக்கட்டான நிலை. இருந்தும் புறப்பட்டே தீரவேண்டும் என்பதால் அனைவரும் அகன்றனர்.

தென்மராட்சிப் பிரதேசத்துக்குள் நுழைய இரண்டு பாதைகள் மட்டுமே. அதுவும் பெரிய அளவில் இல்லை. இரண்டு வாகனங்கள் சமாந்தரமாக போக முடியும். இடையில் கடல் நீரேரிகள். அந்த சாலையில் பாலங்கள் வேறு. இலட்சக்கணக்கான மக்கள் இரவோடிரவாக புறப்பட்டனர். கால்கள் போகும் பாதையில் பயணம். இருளும் சூழ்ந்து கொண்டு விட்டது. எங்கே போகிறோம் என்பது தெரியாது. என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாது. எமக்கு என்ன நிகழப்போகிறது என தெரியாது. கர்ப்பினி, நிறைமாதக் கர்ப்பினி, கைக்குழந்தை, சிறுவர், இளைஞர்கள், வயது வந்தவர்கள், முதியவர்கள்....என எல்லோரும் ஏதிலிகள் போல் நடந்தனர்.

"பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடமறியாமல் - இங்கே
சாகும் வயதினில் வேரும் நடக்குது
தங்கும் இடம் தெரியாமல்............”

என்ற வரிகளை இங்கே தவிர்க்க முடியவில்லை. செம்மணி சுடலை தாண்டியவர்களில் சில பேரிற்கு நாவற்குழி சவக்குழியானது. கைதவறி விடப்பட்ட முதியவர்கள் நீரூள் மூழ்கினர். இருட்டுக்குள் எதுவும் தெரியவில்லை. பாதை எது தண்ணீர் எது என்று எண்ணுவதற்குள் சிலரது வாழ்வு முடிந்து விடுகிறது. ஒரு பத்து மீற்றர் தூரம் நடக்க ஒரு மணி நேரக் காத்திருப்பு. வாகனங்களும் அதற்குள்ளே. அழுகுரல்கள், அய்யோ, கடவுளே, என்ற ஓசைகள் தான் எங்கும். தரையில் தமிழனின் அவலம் கண்டு வானமும் கண்ணீர் சொரிந்தது... ! அது தாகமாக இருந்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. குடைகளில் தண்ணீரை ஏந்தி குழந்தைகளுக்கு பருக கொடுத்தனர். அண்ணாந்து வாய் திறந்து ஆகாயம் தந்த நீர்த்துளிகளை குடித்து பசி முடித்தனர். நினைத்துப் பார்க்க முடியாத அவலம். ஆனால் அந்த மழையும் மக்களை வதைத்ததாகவே தோன்றுகிறது. தெப்பமாக நனைந்து விறைத்து போனது பலரது உடல். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. பசிக்கு உணவில்லை. ஒரு வெட்ட வெளிக்குள் நின்றது போன்ற உணர்வு.

கைதடிச் சந்தி தாண்டியதும் ஒவ்வொருவரும் கிடைக்கின்ற இடங்களில் இருந்தனர். மரத்தடி, கோவில், பாடசாலை, சனசமூக நிலையம், உறவினர் வீடு, வீதியோரம் என கால் கடுக்க நடந்தவர்கள் களைப்பாறினர். ஆனால் பின்னர் அதுவே அவர்களின் நிரந்தர குடியிருப்பு பிரதேசங்களாக மாறிவிட்டன. மாளிகை வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மரநிழலில் இருந்தனர். கணப்பொழுதில் வாழ்வின் தத்துவம் விளங்கியது. ஒரு இரவில் எல்லாம் நடந்து முடிந்தது. அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருந்தவர்களும் வெளியேறினர். தமக்கான இடங்களை ஓரளவு தெரிவு செய்தபின்னர் மீண்டும் சென்று சில பொருட்களை எடுத்துவந்தனர். பலவீடுகளில் 50 பேர் 60 பேர் என இருந்தனர். இவை எல்லாம் 5 பேர் வாழ்ந்த வீடு. ஆனால் எல்லோரையும் தாங்கி நின்றது. குழந்தைகளும் முதியோருமே அவதிப்பட்டனர். படுக்கை விரிப்புகள், சாரம் (லுங்கி), சாக்கு, சேலை என்பன கூரைகள் ஆகின. முட்கள், குப்பை, சுகாதாரம் பற்றி எந்தவித கவலையுமின்றி இடம்பெயர்ந்த வாழ்வு தொடங்கியது. வழிமாறி உறவினர்களைத் தேடி அலைந்தவர்களின் அவஸ்தை சொல்லிமாளாது. பெற்றோரை தவறவிட்ட குழந்தைகள். முதியவர்களைத் தவறவிட்ட உறவினர்கள். இன்னார் அவரைத்தேடுகிறார். அவர்கள் இவர்களைத்தேடுகிறார்கள். அறிந்தவர்கள் தகவல் தரவும் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்தும் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். பத்திரிகைகள் கூட ஒரு வாரம் கழித்தே வெளிவந்தது. கடைகளில் சாமான்கள் இல்லை. இருந்தவை கூட பதுக்கப்பட்டது.

முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு உணவு என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்தது. உணவுப் பொருட்கள் இல்லை. இருந்தாலும் சமைப்பதற்கு பாத்திரங்களோ அல்லது வசதிகளோ இருக்கவில்லை. முதல் நாள் மாலைப் பொழுதிலேயே சனம் வெதுப்பகங்களுக்கு (பேக்கரி) முன்னால் காத்திருக்க தொடங்கிவிடும், அடுத்தநாள் காலை விற்க இருக்கும் பாண் வாங்குவதற்கு. அதுவும் ஒருவருக்கு ஒரு இறாத்தல் (450கிராம்) அல்லது அரை இறாத்தல். சில பொதுமக்கள், தன்னார்வ ஊர் அமைப்புகள், ஆலயங்கள் தாமாக முன்வந்து சமைத்த உணவுகளை பொதிகளாக்கி வழங்கினர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயம் சுதாரிப்பதற்கு நீண்ட காலம் எடுத்தது. அதன் பின்னரே ஓரளவு நிலைமைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் 1996 ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்துக்குள் காலடி எடுத்து வைத்தோம். ஆனால் அதற்குள் நிறைய பட்டு விட்டோம். படித்து விட்டோம். முகத்தில் அறைந்தது போல் சில யதார்த்தங்களை ஏற்றுக் கொண்டோம். காலம் நிறையவே கற்றுத்தந்தது. சில மனிதர்களை அடையாளம் காட்டியது. சில மனித வேடம் தாங்கிய ஜீவன்களை அடையாளம் காட்டியது. செம்மணி கடக்கும் போது அதிலே இடப்பெயர்வின் போது இறந்தவர்களின் கனமான நினைவு வந்தது. ஆனால் அதே செம்மணிக்குள் யாழ்ப்பாணம் திரும்பிய பின் நடந்த அந்த படுகொலைகளும் புதைகுழிகளும் என்றென்றும் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிக்கொண்டே இருக்கும்.

இன்றளவும் நாம் சந்தித்த இடப்பெயர்வுகள், அவலங்கள் என நிறைய இருந்தாலும் இந்த வலிகாமத்தின் வெளியேறல் ஒரு சரித்திர புள்ளியே. ஒரு இரவுக்குள் சுமார் 4.5 லட்சம் மக்கள் வெளியேறியது என்பது அராஜகப் பிடிக்கு எதிரான ஒரு கிளர்ச்சியே. அன்று 1995 ஒக்ரோபர் 30 ந்திகதி வெளியேறிய எத்தனையோ மக்கள் இன்னமும் சொந்த ஊர் போகவில்லை. தாய் மண்ணில் சாகாமல் வாழ்வை முடித்தவர்கள் பலர். காலங்கள் மாறும். ஆனால் அது தந்த வடுக்கள் மாறாது.

திங்கள், 19 அக்டோபர், 2009

வாழ்க ”தமில்” - தீபா”வலி”

மூன்று நாட்களிற்கு முன்னர் முகப்புத்தகத்தில் ஒரு நண்பர் இரண்டு நிழற்படங்களை தன்னுடைய முதல் பக்கத்திலே போட்டிருந்தார். பார்த்ததும் ஒரு புறம் சிரிப்பு மறுபுறம் வேதனை. ஏன் என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள் புரியும்.
இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்பான “வெண் தாமரை இயக்கம்” என்ற அமைப்பே இந்தப் பிரசுரத்தினை வெளியிட்டிருக்க வேண்டும். அமைப்பினைப் பொறுத்தவரை அது ஒரு தேசிய அமைப்பு. இலங்கையிலே இருக்கின்ற அனைத்து தேசிய மக்களையும் இணைத்துத்தான் (பெயரளவில்)அது உருவாக்கப்பட்டது. அவர்களுடைய அசட்டைத்தனம் இந்தப் பிரசுரத்திலே அப்பட்டமாக தெரிகிறது. இதன் உள்நோக்கம் (உள்குத்து) என்ன..? என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் தமிழ் மொழியில் பிழையாக, பிரசுரம் ஒன்றை வெளியிட்டால் அதிலே பிழை இருந்தால் எவரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம்தான் மேலோங்கி நின்றிருக்க வேண்டும். ஒரு தேசிய அமைப்பிலே தமிழ் தெரிந்த ஒருவர் இல்லாது இருக்க வேண்டும். அப்படி என்றால் அது ஒரு தேசிய அமைப்பு அல்ல. தமிழர் ஒருவர் இருந்திருந்தால் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான பிரசுரங்கள் வெளியிடும் நேரத்தில் தன்னும் அவர்கள் அந்த தமிழ் அன்பரை நாடியிருப்பார்கள். ஆகவே எதுவாயினும் வேண்டும் என்றே செய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இப்படியான தமிழ் கொலை வெறும் அனாசயமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஏன் தமிழர் கொலையே அவ்வாறு நடக்கும் போது தமிழ் கொலை என்பது பற்றி கதைப்பது அர்த்தமில்லைத்தானே.
ஆனால் இப்படியான சம்பவங்கள் நிறைய இன்னமும் நடந்து கொண்டே இருக்கின்றன. இதனை கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் பார்த்தும் மௌனிகளாக இருக்கிறார்கள் என்று எண்ணும் போது வருத்தமே அதிகமாகிறது. இந்து சமுத்திரத்தின் முத்து என்ற அந்த அழகிய தீவின் அழிவுகளுக்கு காரணங்களில் முக்கியமானது மொழி மீதான வல்லாதிக்கமே.
சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா? திருந்தாவிட்டால்....இந்த பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

******************

தீபாவளி பற்றி அனைவரும் பதிந்தாகிவிட்டது. அடுத்தவர்களுக்கு தீபாவளி ஈழத்தமிழனுக்கோ அது தீபா’வலி’ என்று சொல்லி வலிக்களை தந்த வடுக்களை மீண்டும் ஒருதடவை வருடியாகி விட்டது. ஆனால் தீபாவளி தந்த வடுக்களில் முக்கியமானது. 1987 ம் ஆண்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மீது இந்திய அமைதி காக்கும் படையினரால் (?) நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான ஒரு படுகொலை. அங்கே வைத்தியர்கள், தாதியர்கள், அப்பாவி பொது மக்கள் என பலதரப்பட்டவர்களும் குண்டடி பட்டு கீழே வீழ்கிறார்கள். உயிரையும் விட்டுவிடுகிறார்கள். காலநதி உருண்டோடி கரைசேர்ந்தாலும் ஆறாமல் மனதில் இருக்கக்கூடிய வடுக்கள் இவை. ஆனால் இந்த இந்த வடுக்கள் என்றும் மாறதவை....அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் நினைக்காமல் இருக்கவும் முடியாது. இது தொடர்பாக வலைப்பூவில் உலாவிய போது இந்த இணைப்பு கிடைத்தது. உங்களுடனும் பகிர்ந்து கொகிறேன். அவலங்கள்

புதன், 7 அக்டோபர், 2009

மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

“கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா...” இந்தப் பாடலை உச்சரிக்காத நா இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பெற்ற ஒரு அருமையான பாடல். ஆனந்த பைரவி இராகத்தில் ஆரம்பமாகி அமைந்த ஒரு ராகமாலிகா. இந்தப் பாடலை பாடியவர் தென்னிந்திய பிரபல பின்னனிப் பாடகர் ரி.எம்.சௌந்தரராஜன். இதை எழுதியவர் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர்.
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்....பாடல்
இன்றுதான் அவர் எம்மை பிரிந்த நாள் ( 08.10.2003 ) இசையுலகும் நடன உலகும் அதிர்ந்து நின்ற நாள். ஈழதேசம் மிகப்பெரிய ஒரு மஹாவித்துவானை இழந்த நாள். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் மூழ்கி அதிலிருந்து முத்துக்களை மட்டுமே எமக்கு தந்த இயலிசைவாரிதி மறைந்தநாள். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடல்கள் இயற்றுவதாகட்டும் எல்லாத்துறையிலும் தனது பன்முக ஆளுமையை வெளிப்படுத்திய சாகித்ய சாகரம் வீரமணி ஐயாவின் நினைவுதினப் பதிவு இது.


சைவமும் தமிழும் தழைத்தோங்கும் இணுவையம்பதியில் 1931ம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ம் திகதி இந்த பூவுலகில் கால் பதித்தார். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். படிக்கும் காலத்திலேயே தன்னுடைய கலைத்திறமையை வெளிக்காட்டி மிகவும் ஆணித்தரமாக தன்னுடைய காலை கலை உலகில் பதித்தார். 1947 ம் ஆண்டு 16 வது வயதில் பாடசாலையில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் “மனோகரா” நாடகத்தில் பெண்வேடமிட்டு நடனமாடி பல முகபாவங்களை காட்டி நடித்தார். அரங்கத்தில் இருந்தோர் எல்லாம் மெய்சிலிர்த்து பார்த்துக் கொண்டு இருந்தனர். பார்த்துக் கொண்டு இருந்த கல்லூரி அதிபர் உடனேயே அலுவலகத்திற்கு சென்று “சகல துறைகளிலும் மிளிர்ந்த மாணவன்” என்ற ஒரு வெள்ளிப்பதக்கத்தை அந்த மேடையிலேயே வீரமணி அய்யாவிற்கு சூட்டி மகிழ்ந்தார். வளர்ந்து பட்டப்படிப்புக்காக சென்னை வந்தார். விஞ்ஞான மானி பட்டம் படிக்கவே வந்தார். ஆனால் புலன்கள் எல்லாம் இசையிலும் நடனத்திலும் சென்றது. உலகமே போற்றும் இசை மேதை பாபநாசம் சிவன் மற்றும் எம்.டி. இராமநாதன் ஆகியோரை தனது இசைக்கான குருவாகவும், கலாஷேத்திரத்தில் புகழ்பூத்த நாட்டிய மேதை ஸ்ரீமதி ருக்மிணி தேவி அருண்டேல், சாரதா ஆகியோரை நாட்டியத்துக்கான குருவாகவும் வரித்து கொண்டு இசையிலும், நடனத்திலும் தனது திறனை செவ்வனே வெளிப்படுத்தினார்.
சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயா

இவ்வண்ணம் பயின்று வரும் காலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வர ஆலய கற்பாகம்பாள் மீது கொண்ட பக்தி காரணமாக உருவானதுதான் ”கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..” என்ற சாகித்தியம். மிகப்பிரபல்யமான ஒரு பாடல். வெளிவந்த ஆண்டு 1956. ரி.எம்.எஸ் அவர்களின் குரல் கேட்பவரை நெகிழச்செய்யும். இந்தப் பாடலிற்கு வயலின் வாசித்தவர் உலகம் போற்றும் குன்னக்குடி வைத்தியநாதன். இவ்வளவு காலமாகியும் பாடல் இன்றுவரை இதயத்துள் கூடாரமிட்டு ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு முறை வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள் வீரமணி ஐயா அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். நீங்கள் இயற்றிய பாடல்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ரி.எம்.எஸ் பாடிய எத்தனையோ பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன், ஏன் நீங்கள் இயற்றிய இந்தப்பாடல் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று. வீரமணி ஐயா அவர்கள் ஒரு கணம் ஆடிப்போனார். பின்னர் சுதாரித்துக் கொண்டு சொன்னாராம் இவ்வாறு... “நான் அந்தப் பாடலை இயற்றி என்னுடைய குருநாதர் பாபநாசம் சிவனிடம் காட்டினேன். அவரும் ராகத்திற்கு ஏற்றாற்போல் பாடிப் பார்த்துவிட்டு... ‘சிற்பம் நிறைந்த சிங்கார கோயில் கொண்ட...’ என்ற வரியில் ஏதோ ஒன்று தவறவிடப்பட்டது போன்ற உணர்வு வருகிறது. நான் ஏதாவது மாற்றம் செய்யலாமா? என்று கேட்டார். நானும் அதற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க பாபநாசம் சிவன் அவர்கள் “சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோவில் கொண்ட..” என்று ‘உயர்’ என்ற சொல்லை சேர்த்தார். சேர்த்த அந்த உயர் என்ற சொல்லால் பாடலை யாத்த எனக்கு உயர்வைத் தந்தது. பாடலைப் பாடிய ரி.எம்.எஸ் ற்கு உயர்வைத்தந்தது. பாடலுக்கு வயலின் வாசித்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு உயர்வைத்தந்தது”. குருவின் அந்த ஆசீர்வாதமே அவரை இந்தப் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது என்றால் மிகையல்ல. இதனை இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றும் போது சொல்லி மகிழ்ந்தார். நேரடியாகவே என் காது பட கேட்டேன். அநேகமாக அதுதான் அவர் கலந்து கொண்ட இறுதி விழாவாக இருந்திருக்க வேண்டும்.
டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் தம் கைப்பட வீரமணி ஐயர் பற்றி எழுதியது

வீரமணி ஐயா அவர்கள் பலதுறை கலைஞர். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடலாக்கம் ஆகட்டும் இவர் இறுதிக்காலம் வரை அதில் புதுமைகளை செய்து கொண்டு இருந்தார். நடனத்தில் புதிய புதிய முத்திரைகளை உருவாக்குவதிலும், இசையில் புதிய ராகங்கள், சாகித்தியங்கள் இயற்றுவதிலும், இராகங்களுக்கு பாடல்கள் இயற்றுவதிலும், கோவில்களுக்கு பாடல்கள் என அவர் எப்பொழுதும் தான் சார்ந்த கலைக்கு தொண்டாற்றி கொண்டே இருந்திருக்கிறார். இராகங்களுக்கு பாடல் இயற்றுவதை தமிழில் “வாக்கேயகாரர்” என்று சொல்லுவார்களாம். யாழ்ப்பாணம் தந்த மிகப்பெரும் வாக்கேயகாரரை நாம் இழந்து இற்றைக்கு 6 வருடங்கள் ஆகிவிட்டன. கர்நாடக இசையிலே 72 மேளகர்த்தா ராகங்களுக்கான பாடல்கள் இயற்றி இசை உலகை தன்பக்கம் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்தார். காரணம் இப்படி 72 மேளகர்த்தா இராகங்களுக்கும் பாடல்கள் இயற்றியவர்கள் கோடீஸ்வர ஐயர், ராமசுவாமி தீக்‌ஷிதர், மகாவைத்தியநாதர், போன்ற சிலரே. இதனால்தான் இவர்பால் அனைவர் கண்ணும் திரும்பியது.
கர்நாடக சங்கீத மேதை டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா வீரமணி ஐயர் பற்றி அனுப்பிய வாழ்த்து

கர்நாடக சங்கீத உலகில் பாலமுரளிகிருஷ்ணா ஒரு சகாப்தம். அவர்கள் ஒருமுறை 1980 ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் வந்த போது இவரது வாக்கேயகாரத் திறனை அறிந்து வியந்து நாலு சுரத்தில் இராகம் அமைத்துப் பாடமுடியுமா என கேட்டார். அடுத்த கணமே வீரமணி ஐயா ‘ஸகமநிஸ’ என்ற ஆரோகணத்தையும் ‘ஸநிமகஸ’ அவரோகணத்தையும் கொண்ட ‘ஜெயம்’ என்ற இராகத்தை உடனேயே ஆக்கி ஆதி தாளத்தில் “ஜெயமருள்வாய் ஜெகதீஸ்வரா / ஜெயகௌரி மணாளா - தயாளா” என்ற கீர்த்தனையை உடனே இயற்றினார். வாயடைத்து நின்ற பாலமுரளிகிருஷ்ணா பாராட்டுப்பத்திரம் வழங்கி விட்டு சென்றார்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரமணி ஐயர் பற்றி இயற்றிய வெண்பா

தான் ஒரு மேம்பட்ட கலைஞன் என்று அவருக்கு வித்துவச்செருக்கு என்றைக்குமே இருந்ததில்லை. சிறுவர்களுடன் சேர்ந்து பரராஜசேகரப்பிள்ளையார் வீதியில் ஆடி மகிழ்வார். அவர்களை கைகளால் தாளம் போட வைத்து ஆட்டுவித்து மகிழ்வார். இதைவிட பெரிய பண்பு இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் தன்மை. சக கலைஞனை மதிக்கும் தன்மை. நான் தான். தான் தான். என்ற மமதை அற்ற மாமனிதர். இதற்கு சிறந்த உதாரணமாக, இவர் தொடர்பாக நல்லூர் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களுடன் உரையாடிய சமயம் அவர் பகிர்ந்து கொண்டது. ஒருநாள் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்தில் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி மற்றும் உதயநாதன் குழுவினருடன் பாலமுருகனும் வாசித்து கொண்டிருந்தார். ‘கனகாங்கி’ இராகத்தை நாதஸ்வரத்தில் வாசித்துக் கொண்டிருந்தாராம். அந்த இராகத்துக்கான கீர்த்தனை தொடர்பான சகல நெளிவு சுளிவுகளை முன்னரே வீரமணி ஐயா அவர்களிடம் படித்திருந்தார் பாலமுருகன். அன்று அந்த கடினமான இராகத்தை வாசித்து கொண்டு இருக்க, திடீரென ஆலயத்துக்குள் குளித்து உடல் துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட வீரமணி ஐயா நுழைந்து கையில் கொண்டு வந்த ஒரு பதக்கத்தை பாலமுருகனுக்கு அணிவித்து விநாயகரில் சாத்தி இருந்த அறுகம்புல் எடுத்து கையில் கொடுத்து.. “நீ நீடுழி வாழணும் நல்லா இருக்கணும்டா கண்ணா, இன்னும் இன்னும் நிறைய வாசித்து புகழ் அடையணும்” (அவர் சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அவரோடு பழகியவர்கள்) என்று வாழ்த்திவிட்டு அந்த இடத்தை விட்டும் நீங்கிவிட்டார். அந்த நாதஸ்வர இசை அவரை ஈர்த்துவிட்டது. அடடா இப்படி வாசிக்கிறானே என்று தான் நின்ற கோலத்தையும் மறந்து ஈர வேட்டியுடன் வந்து வாழ்த்திய பண்பு எந்தக் கலைஞனுக்கும் வராது. கலைஞனை அவனது நிகழ்ச்சி முடியும் முன்னர் வாழ்த்துவது அல்லது விமர்சிப்பது என்பது அந்தக் கலைஞன ஊக்கபடுத்துவதோடல்லமால் மேன்மேலும் வளர உதவும். அந்த வாழ்த்திய தருணத்தை கண்டு பாலமுருகன் திகைத்து போனாராம். இன்றும் அதை நினைக்கும் போது நெகிழ்ந்தும் உணர்ச்சி வசப்பட்டும் போய்விடுகிறார்.

இவர் பெற்ற பட்டங்கள் ஏராளம். இங்கே அவற்றை தருவதற்கு போதிய இடம் இல்லை. ஆனால் அவரை யாழ்ப்பாணப் பல்கலைகழகம் சிறுமைப்படுத்தி விட்டது என்று என்னுடைய சிற்றறிவு சொல்கிறது. அவரை சிறுமைப்படுத்தி தன்னையே தாழ்த்திக் கொண்டு விட்டது. காரணம் உலகம் போற்றுகின்ற ஒரு ஒப்பற்ற கலைஞனுக்கு இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 1999 ம் ஆண்டு வெறும் கௌரவ முதுகலைமாணி(M.A) பட்டம் மட்டுமே வழங்கியிருந்தது. என்னைப் பொறுத்த வரை, எந்தவிதத்தில் அவர் குறைந்தவர் ‘கலாநிதி’ பட்டம் பெறுவதற்கு என தெரியவில்லை. இதே அடிப்படையில் கௌரவிக்கப்படாத ஒரு கலைஞன் அளவெட்டி நாதஸ்வர வித்துவான் கலாசூரி என்.கே பத்மநாதன். அவர் இறந்த பின்னர் அவருக்கு அந்த கலாநிதி பட்டத்தை வழங்கி மேலும் ஒரு முறை தான் இன்னமும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிற்கிறேன் என்று நிரூபித்தது. நான் சிந்திப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அதற்கான காரணத்தை அறியத்தந்தால் நன்றாக இருக்கும்.

2002 ம் ஆண்டளவில் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒன்றினை நடாத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த வீரமணி ஐயர் அவர்கள் மெய்மறந்து அந்த நிகழ்ச்சியினை ரசித்தார். அந்த நிகழ்ச்சிக்கு அனுசரனையாளர்களாக இருந்த இலங்கை வங்கியினர் தமது வங்கி பற்றி ஒரு பாடலை எழுதித்தருமாறு கேட்டனர். நீங்கள் எழுதித்தந்தால் தாங்கள் அதனை நித்யஸ்ரீ மூலம் பாடுவிப்போம் என்று கூற, வீரமணி ஐயரும் தமக்கே உரித்தான விதத்தில் உடனடியாக பாடலை எழுதிக்கொடுத்தார். நித்யஸ்ரீ அவர்களும் சவாலாக எடுத்து அதனை மேடையிலேயே உடனே பாடி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதுதான் வீரமணி ஐயா. சீர்காழி அவர்களுடன் சுட்டிபுரம் அம்மன் கோவிலில் நிகழ்ச்சிக்காக சென்ற போது காருக்குள்ளேயே பாடல் எழுத அதனை சீர்காழி மேடையில் பாடினார். இப்படியான நிகழ்வுகள் ஐயா அவர்களுக்கு அடிக்கடி நிகழ்ந்தது.

ஒரு கலைஞனை கௌரவிக்கும் பண்பு வளர்ந்து சென்றால் கலைகள் காக்கப்படும். அதனை பலரும் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து இப்படியான நிகழ்வுகளுக்கு ஆதரவு நல்க வேண்டும். 1971 காலப்பகுதிகளில் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழக உருவாக்கம் தொடர்பான ஒரு கூட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நடனம், இசை, சித்திரம் என்பன சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தி அதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வீரமணி ஐயா என்று யாழ்ப்பாணப் பல்கலைகழக சமஸ்கிருதத் துறை தலைவர் கலாநிதி.வி.சிவசாமி ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். இன்று அவர் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கடைசிவரை தான் சார்ந்த கலைகளை தன் தாய்மண்ணிலே பரப்புவதற்கு அவர் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருந்தார். இன்றும் அவற்றை அவருடைய துணைவியார் ஸ்ரீமதி சுசீலாதேவி தனித்து நின்று செய்து கொண்டு இருக்கிறார்.

அழகு தமிழில் புகுந்து விளையாடி அற்புதமான படைப்புக்களை தந்ததோடு மட்டுமல்லாமல் நடனத்துறையிலும் தமக்கென ஒரு தனியிடத்தை அமைத்து அந்த பாதையில் நிறைய மாணாக்கர்களை பயணிக்கவைத்து தமிழ் பேசும் நல்லுலகிற்கு அரும்பெரும் சேவையாற்றியுள்ளார். அவர் வழி வந்த பலர் இன்றும் பேரும் புகழோடும் இசையுலகில் இருக்கின்றார்கள் என்பது ஐயா அவர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய புகழே. சாகித்திய சாகரம் இன்று எம்மோடு இல்லை. அவர்களை நினைவு கூர்ந்து அவரது படைப்புக்களை நாம் பேணிப் பாதுகாத்து அதனை இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படியான ஒரு நேரத்தில் அவர்களது பாடல்களை உள்ளூர் கலைஞர்கள் தவிர்ப்பது ஏன் என்று விளங்கவில்லை. அப்படி ஒரு பாடலை பாடி மேடையை அலங்கரிப்பதில் அவர்களுக்கு என்ன இடைஞ்சல் என்றும் தெரியவில்லை. நாமே அவற்றை வளர்ப்பதற்கு முன்னிற்கவில்லை என்றால் மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும். இந்த விடயத்தை வட-இலங்கை சங்கீத சபையினருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

வீரமணி ஐயா பற்றி குறிப்பிடுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் பதிவு நீண்டு விடும் என்ற காரணம் ஒருபக்கம் இருக்கிறது. மீண்டும் ஒருதடவை ஒரு அந்தப் பெரும் கலைஞனை மனதிலே போற்றி, மண்ணிலே கலை வளர்க்க எம்மாலான காரியங்களை செய்ய வேண்டும்.

வாழ்க ஐயா நாமம்..!! வளர்க அவர் புகழ் !!!

நன்றி : திருமதி சுசீலாதேவி வீரமணி ஐயர் , வசந்தி வைத்திலிங்கம், பூலோகநாதன் கோகுலன்

வெள்ளி, 2 அக்டோபர், 2009

வானொலியே வரம்....!!

இது 1995 ற்கு முற்பட்ட காலத்தின் கண்ணாடிப்பதிவு. பொருளாதாரத்தடை என்ற அரக்கன் எம்மை நசுக்கிய துன்பமான காலம். மின்சாரம் என்பதை கண்ணால் காணமுடியாத கொடுமையான காலம். மெழுகுதிரி, மண்ணெண்ணை, ஜாம் போத்தல் விளக்கு, தேங்காய் எண்ணை விளக்கு என்பவைதான் எமது இருளினை விரட்டிய வேதனையான காலம். மின்சாரம் இல்லை என்பதால் தொலக்காட்சிகள் எல்லாம் வடிவாக பெட்டிகளில் அடைக்கப்பட்டு அறைகளில் பேணப்பட்ட சோகமான காலம். செய்திகளுக்காக சில அச்சு ஊடகங்கள் தவிர வேறு எதுவும் எமக்காக இல்லை என்ற வருத்தமான காலம். இந்த காலத்தில் எல்லாம் எமக்கு வானொலிதான் நண்பன். உறவினன். உற்ற சகோதரன். ஏன் எல்லாமே வானொலிதான். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு சைக்கிளாவது நிற்கும். அதே போலத்தான் அநேகமாக எல்லோர் வீட்டிலும் வானொலியும் இருந்தது.

செய்திக்காக மட்டுமல்ல எமது பொழுது போக்கு அம்சமாக, எமது மனங்களை ஓரளவு சாந்தப்படுத்த கூடிய ஒரு சாதனமாக வானொலி விளங்கியது என்றால் மிகையல்ல. பாட்டு கேட்பதுதான் பிரதானமான ஒரு பொழுது போக்கு. ஒலிப்பேழை (கசெற்) வாங்கி கேட்குமளவிற்கு வசதிகள் எல்லோரிடமும் கிடைக்கவில்லை. எனவே வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள்தான் எமக்கு கண்கண்ட தெய்வம் போல விளங்கியது. மத்திய அலைவரிசைகளில் தவழ்ந்து வரும் இசைதான் எம்மை எல்லாம் பரவசப்படுத்தும். பன்பலையில்(FM) வலம் வந்தது ஒரே ஒரு தாயக வானொலி புலிகளின் குரல் தான். இதே நேரத்தில் செய்திகளுக்காக பிலிப்பைன்ஸ் மணிலாவில் இருந்து ஒலித்த வெரித்தாஸ் வானொலி, இலண்டன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாகிய பிபிசி போன்றவைதான் எமக்கு தஞ்சம். இதைவிட நாம் பெரிதும் ரசித்தது சிங்கப்பூர் ஒலி 96.8 . இவைதவிர அகில இந்தியா வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்தோம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளை சிற்றலைவரிசைகளிலும், சர்வதேச வானொலியை மத்திய அலைவரிசை 882 அதிர்வெண்ணிலும், சிங்கப்பூர் வானொலி, பிபிசி மற்றும் வெரித்தாஸ் வானொலிகளை நாம் சிற்றலை வரிசையிலும் கேட்க கூடியதாக இருந்தது எமக்கு. இந்திய வானொலிகளின் நிகழ்ச்சிகள் எல்லாம் மத்திய அலைவரிசையில் தெளிவாக கேட்க முடியும். அந்தக் காலத்தில், இப்பொழுது புளுத்து போயிருக்கும் தனியார் வானொலிகள் எதுவும் இருக்கவில்லை. இலங்கை வானொலிதான் கொடி கட்டி பறந்தது. அவர்களுடைய செய்தியை தவிர மற்ற எல்லாவற்றையும் மக்கள் கேட்க தயாராகவே இருந்தனர்.

வானொலி என்றதும் இப்போதுள்ள டிஜிற்றல் தொழில் நுட்பத்தோடு வந்த வானொலிகள் அல்ல. சாதாரண றேடியோக்கள் தான். National Panasonic றேடியோதான் எல்லோர் வாயிலும் வரும் பெயர். சின்ன றேடியோ பெரிய றேடியோ என எல்லா வகையிலும் மக்கள் பாவித்தனர். ஆனால் அந்தக்காலத்தில் யாரிடமாவது RX செற் (இப்படித்தான் அழைப்பார்கள்) இருந்தால் அவர்கள் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கப்படுவார்கள். சரி வானொலி இருந்து மட்டும் போதுமா அதற்கு மினசார முதல் தேவை இல்லையா? தேவைதான். அப்படி என்றால் கரண்ட் இருந்ததா? இல்லை. அப்படி என்றால் பற்றறி இருந்ததா? அது கூட மிகப்பெரும் தட்டுப்பாடு. பெரிய பற்றரி ஓரளவு வந்து கொண்டு இருந்தது. ஆனால் சிறிய பற்றரிக்குத்தடை (ஏன் தெரியும்தானே). இதையெல்லாம் சவாலாக எடுத்து சமாளித்தோம். சைக்கிள் டைனமோ வில் இருந்து வரும் ஆடலோட்ட மின்னை(AC Current) நேரோட்ட மின்னாக(DC Current) மாற்ற இருவாயி என்ற சொல்லப்படுகின்ற டயோட் (Diode) பயன்படுத்தப்பட்டது. ஒரு சைக்கிளை கவிழ்த்து வைத்துவிட்டு அதன் கால்மிதியை - பெடல் - கையால் சுற்றுவோம். அல்லது இரட்டைத் தாங்கி (டபுள் ஸ்ராண்ட்) யில் சைக்கிள் நிற்கும் போது அதன் மேலே ஏறி இருந்து சுற்றுவோம். டைனமோவில் உருவாகும் மின் இரவாயி கொண்ட பொறிமுறை ஊடாக றேடியோவை வந்தடையும். பிறகென்ன றேடியோ உயிர் பெற்று கத்த ஆரம்பித்து விடும். இவைகள் தான் எமக்கு அந்தக்காலங்களில் சொர்க்கம். புலிகளின் குரல் செய்திகள் அந்தநாட்களில் எல்லோர் வீடுகளிலும் பலமாக ஒலிக்கும்.

ஒலிப்பேழைகளிலே பாட்டு கேட்பதும் நடக்கும். அதற்கும் மேற்படி செயற்பாடுதான். பாடல்கள் பதியப்பட்ட ஒலிப்பேழைகள் நண்பர்களிடத்தில் வாங்கி கேட்போம். பாடல்களை அன்று பதிந்து கொடுப்பதில் யாழ் நகரினுள் சண் றெக்கோடிங் ஸ்பொட், சுப்பஸோ, நியூ விக்ரேஸ் என பிரபலமான கடைகள் இருந்தன. கடைகளுக்கு போய் அங்கே இருக்கும் இறுவட்டுகளை பார்த்துவிட்டும், அந்தக் கடையில் இருக்கும் பாட்டுக் கொப்பியை பார்த்துவிட்டும் திரும்புவதே எங்கள் வாடிக்கை. இந்தக் கடைகளில் பாடல் ஒலிப்பதிவு செய்ய கொடுத்தால் கூடுதலாக 7 நாட்கள் எடுப்பார்கள். அவ்வளவு அவர்கள் பிஸி.
வானொலிகள் பாட்டுகளுக்கு மட்டுமன்றி சிலருடைய திறமைகளை படைப்புகளாக வெளிக்கொணர்வதிலும் அவை அளப்பரிய சேவையே செய்தனர். கவிதைகள், கதைகள், கதையும் கானமும் அல்லது இசையும் கதையும் அத்துடன் பலதரப்பட்ட பட புதிய பாடல்கள் , பழைய பாடல்கள், இடைக்காலப் பாடல்கள் என் அனைத்தையும் எமக்கு அள்ளி வழங்கின. பாடல்களுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் சுவார்ஸ்யமாக இருக்கும். "கை வலிக்குது கை வலிக்குது மாமா, கவலை வேண்டாம் கண்ணே, இதோ வந்து விட்டது போலார் ஹை பவர் லோ வோல்ட்டேஜ் கிறைண்டர் மோட்டர்" என்ற விளம்பரம் தாங்கி வரும் சர்வதேச வானொலியும், "உடம்பைக் குறை உடம்பைக் குறை என்று சொன்னால் கேட்கிறாயா நீ, நான் என்ன குறைக்க மாட்டேன்னா சொன்னேன் அது குறைய மாட்டேங்குதே" என்ற விளம்பரத்துடன் உலா வந்த சிங்கப்பூர் ஒலி96.8 உம் எமக்கு மகிழ்வைத் தந்த வானொலிகள். அந்த விளம்பரங்கள் எல்லாம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. தமிழக மக்களுக்கு இலங்கை வானொலி மீது தீராத காதல். அதனால்தான் இலங்கை வானொலியின் சர்வதேச வானொலி தமிழக மக்களுக்காக தனது சேவையை வழங்கியது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் சர்வதேச வானொலி காலை 10 மணியுடன் நிறைவுறும். ஞாயிற்களில் மட்டும் 11 மணியாகும். மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி 6 மணிக்கு நிறைவுறும். தமிழக மக்களின் வணிக விளம்பரங்களைத் தாங்கித்தான் பெரும்பாலும் வரும். சில நிறுவனங்களின் அனுசரனையுடன் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்னமும் சாகா நிகழ்ச்சிகளே. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. இதைத் தொகுத்து வழங்கிய பெருமகன் பி.எச்.அப்துல் ஹமீது. உலகறிந்த ஒரு அறிவிப்பாளர். இவர் தொகுத்து வழங்கிய இன்னொரு நிகழ்ச்சி “இசையும் கதையும்”. லீ.வீ யின் சினிமாப்பாடல், ஸ்ரீராம் சிப்ஸ் நிறுவனத்தாரின் ஒரு நிகழ்ச்சி, என பல நிகழ்ச்சிகளைச் சுமந்து வந்தது அந்தக்கால வானொலிகள்.

இந்த இடத்திலே குறிப்பாக ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதமாகிய தூத்துக்குடி வானொலி எம்மை நிறையவே பாதித்தது. காரணம் இரவு 8.45 மணியில் இருந்து 9.00 மணிவரை 3 பாடல்களை ஒலிபரப்புவார்கள். அந்த மூன்றும் முத்தான பாடல்கள். இந்த பாடலை பற்றி அடுத்த நாள் நாம் நண்பர்களை சந்திக்கும் போது "நேற்று தூத்துக்குடி கேட்டாயா? சுப்பர் பாட்டுகள் மச்சான்" என்று கேட்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி எல்லோர் மனதிலும் இடம்பெற்றதை மறுக்க முடியாது.

வானொலி நிகழ்ச்சிகளைப் படைக்கும் அறிவிப்பாளர்கள் மக்கள் மனதிலே நிறையவே இடம் பிடித்தார்கள். குறிப்பாக இந்த இடத்திலே இலங்கை வானொலி அறிவிப்பாளர் குரல் வளம், அவர்களின் மொழி ஆளுகை, கடைசிவரை அந்த நிகழ்ச்சியை சேர்க்கும் திறன் என்பவற்றில் ஆட்சி செலுத்தினர் என்றால் மிகையாகாது. 'லலிதாவின் பாட்டுக்கு பாட்டு', 'கதையும் கானமும்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பி.எச்.அப்துல் ஹமீத் எல்லோர் இதயத்திலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார். அவரை வானொலி நிகழ்ச்சிகள் கேட்டவர்கள் மறக்க மாட்டார்கள். கம்பீரமான குரல். அழகான தமிழ். பிசிறில்லாத உச்சரிப்பு. வார்த்தைகள் பாயும் விதம். அவருக்கு நிகர் அவரேதான். ஏ.ஆர்.எம்.ஜெப்ரி, ஜெயகிருஷ்ணா போன்றவர்களின் குரலும் மிக அழகானவை. இவர்களோடு பெண் அறிவிப்பாளினிகளாக 'வானொலிக்குயில்' இராஜேஸ்வரி சண்முகம், புவனோலஜனி நடராஜசிவம், றேலங்கி செல்வராஜா, சற்சொரூபவதி நாதன் (இவர் வர்த்தக துறைக்குள் தலை காட்டவில்லை என எண்ணுகிறேன்) இப்படிப்பலர். அதே போன்று ஒலி 96.8 இல் பாலசுப்ரமணியன், சோமு, பிரேமா, மீனாட்சி சபாபதி. பிபிசி யில் ஆனந்தி அக்கா. அவர்கள் தொகுத்து வழங்கிய “பாலியல் விவேக பக்குவப் பயிற்சி” இதனை நாம் வீட்டுக்காரருக்கு தெரியாமல் ஒளித்துக் கேட்டோம். எல்லோர் நெஞ்சங்களையும் பிழிந்த ஒரு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைகளில் ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்கள் வெரித்தாஸ் வானொலியில் செய்த பிரார்த்தனை.....நெக்குருக வைத்துவிடும்.

குறிப்பாக ஒலி 96.8 இன் மூலமே நாம் முதன் முதலில் தொலைபேசி மூலம் நேயர்கள் பாடல்களை விரும்பி கேட்கலாம் என்று அறிந்தோம். அதனைப் பற்றி அடுத்தநாள் பாடசாலையில் சிலாகிப்போம். எப்படி செய்வார்கள்? எப்படி பாடல்களை ஒலிபரப்புவார்கள்? இதன் போது என்ன செயன் முறை? அந்தளவிற்கு அது எம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. 1994 இல் உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு RX செற் கொண்டு வந்து சைக்கிளை வகுப்பறைக்குள்ளே வைத்து டைனமோவை சுற்றி பாட்டு கேட்டோம். அந்தக் காலத்தில்தான் ”காதலன்” வந்து இளைஞர் பட்டாளத்தை உலுப்பி எடுத்த காலம்.

இன்னும் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஆனால் பதிவு நீண்டு விடும். காலங்கள் கரைந்தோடி விடுகின்றன. ஆனால் அவை தந்த அந்த இனிமையான நினைவுகள் இன்னும் அழியாத பாதச்சுவடுகளாய் வாழ்க்கைப்பயணத்தில் இன்னும் மனங்களில் வியாபித்தே நிற்கின்றன. காலம் கனிகின்ற போது இந்த நினைவுகள் மீண்டும் வருடப்படும்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

அன்னை மண்ணை அவனும் பிரிந்தான்..!!!

2006.09.25 திங்கட்கிழமை...அன்றைய அவன் பொழுதும் அமைதியாகத்தான் விடிந்தது. வழமைபோல காலையில் பரபரப்பு இல்லை. காரணம் அந்த பொழுதுகள் எல்லாம் யுத்தம் தொடங்கி யாழ்ப்பாணம் சல்லடையாக்கப் பட்டு கொண்டு இருந்த காலம். ஆனால் அன்று இவன் சற்று சிக்கீரமாகவே எழுந்து குளித்து விட்டு அவனது அப்பா வாங்கி வர இருக்கும் ‘உதயன்’ மற்றும் ‘தினக்குரல்’ பத்திரிகைகளுக்காக காத்து இருந்தான். அதில் இன்று கப்பல் புறப்படும் என்ற செய்தியை தேடினான். எங்கும் இல்லை. அப்போது இவனின் நண்பன் வந்தான். அவன் ஒரு மருத்துவன். அவன் சொன்னான். ‘மச்சான் இண்டைக்கு கப்பல் போகுது, நீயும் வாற எண்டால் வா’ என அழைத்தான். இன்றும் அந்தக் கப்பல் பயணத்துக்கென அவன் புறப்பட்டால் அது அவனுடைய 10 வது முயற்சியாக இருக்கும். இதுவரை 9 தடவைகள் முயன்று முயன்று தோற்ற களைப்பு அவனை சோர்வடையச் செய்தது. நண்பன் உறுதி படத்தெரிவித்தான் கப்பல் புறப்படுவதாக. இவனும் புறப்பட தீர்மானித்தான்.

பயணப் பொதியுடன் யாழ்.புகையிரத நிலையம் நோக்கி விரைந்தான். அங்கு ஏராளமான பயணிகள். எப்படி வந்தார்கள் என்று அவனுக்கு வியப்பு. இம்முறை அவன் புதிதாக உத்தியோகத்தர்களுக்கான நிரையில் நின்றான். இதுவரை கப்பல் பயணம் அவனுக்கு அளித்த ஏமாற்றங்கள் , இந்தமுறையும் அவனை நம்பிக்கை இழக்கவே செய்துவிட்டது. இருந்து சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல முயன்றான். அவனது நிரையில் நின்றவர்களை உள்ளே எடுக்கத்தொடங்கி விட்டார்கள். இவனது முறை வந்தது. இதுவரையில் அவனைத் தடுத்து நிறுத்திவந்த இராணுவ மேலதிகாரிகளில் ஒருவரிடமே இம்முறையும் மாட்டிக் கொண்டான். அவர் எங்கே போவதாக சிங்களத்தில் கேட்க இவன் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கண்டி என்று பதிலளித்தான். ஏன் என்று கேட்க மேற்படிப்புக்காக பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற ஒரு கடிதத்தை காட்டினான். இம்முறை அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். துன்பம் என்னவென்றால் இதே கடிதத்தை பல முறை காட்டிய போது அவர்கள் அவனுக்கு சொன்ன பதில் இது புகைப்படப் பிரதி உன்னை எப்படி நம்புவது என்று கேட்டார்கள். இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது போல உனர்வு. அதுவும் பிரபல பேராதனைப் பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதம். என்ன செய்வது எல்லாம் அங்க பிறந்த குற்றம் என்று மனதுக்குள் நினைத்து தன்னை தேற்றி கொண்டு முன்னே நடந்தான். நான்கு பிரதான கொட்டில்கள். ஒவ்வொன்றிலும் வரிசையாக நின்று நின்று முன்னே போக வேண்டும். இப்படி நத்தை போல நகர்ந்து நகர்ந்து இரண்டாவது கொட்டிலுக்கு விரைந்தான். அங்கே பயண அனுமதிப் படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். சகல விபரங்கள், அலைபேசி இலக்கம், எங்கே போகிறான், ஏன், யாருடன் தங்க போகிறான், இப்படி பல விடயங்கள். எல்லாம் அறிந்து படிவம் ஏற்றுக்கொள்ளப் பட்ட உடன் அடுத்த கொட்டில் இராணுவ புலனாய்வுத் துறையினரது. அவர்கள் எல்லோரையும் வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களோடு சில தமிழ்க் குழுக்களும் இருந்தது அவனை கடுப்பாக்கியது. அதிலும் அவர்களது கேள்விகள் அவனை சினத்துக்குள்ளாக்கின.

எல்லாம் விதி என்று நினைத்துக் கொண்டு அவர்களிடம் முகத்தை கொடுத்தான். அவர்களும் அவனைப் போட்டு துளைத்தெடுத்தனர். அந்த பெரிய தடையை தாண்டி அவன் அடுத்த கொட்டிலுக்குள் நகர்ந்தான். அதில் நின்று பார்க்கும் போது அருகே ஓ.எல்.ஆர் சேர்ச் மாதா கோவில் ஒன்று இருந்தது. அவளிடம் இறைஞ்சினான் இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறாயே என.....! அவளும் எம்மைப் போல் ஏதும் செய்ய முடியா நிலையோ என பேரூந்துக்குள் ஏறினான். எல்லோர் முகங்களிலும் ஏதோ ஒரு மகிழ்ச்சி. அவன் மட்டும் அசையவில்லை. ஏனெனில் இதற்கு முன்னர் போனவர்களில் பலபேர் காங்கேசன்துறையில் வைத்து இடம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவன் பொறுமையாக இருந்தான். இதயம் முழுவது குலதெய்வம் நாமம் இரகசியமாக ஒலித்த வண்ணமே இருந்தது. 6 பேருந்துகள் தொடராக பயணித்தது தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை நோக்கி. காலையில் இருந்து எதுவும் இல்லை. வயிறு வாட்டத்தொடங்கியது.

1200 பயணிகள் வரும் வரை யூனியன் கல்லூரிதான். இரவு முழுவதும் அங்கே தங்க வேண்டும். அடுத்தநாள் தான் பயணம். வந்திறங்கியவுடன் மீண்டும் ஒரு பதிவு. அதிலே ஒரு கொடுமை என்னவென்றால், கடலில் பயணம் செய்யும் போது தமக்கு ஏதாவது நடந்தால் தாமே பொறுப்பு என ஒப்பமிட வேண்டும். நமது நாடாம். நமது கடலாம். ஆனால் நாம் போகும் போது எமக்கு ஏதும் நடந்தால் நாமே பொறுப்பு என்ற கையொப்பம். அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். என்னடா இழவு இது. எங்காவது இப்படி இருக்குதா? எல்லாம் போகட்டும். இதுதான் காலம். இரவு ரொட்டியும் பிளேன் ரீயும் தான் உணவு. கண்டபடி உண்ணவும் பயமாக இருந்தது அவனுக்கு. காரணம் மலசல கூட வசதிகள். 1200 பேர் , 6 மலசல கூடம் பெண்களுக்கும் சேர்த்து. இதுதான் தமிழ் மக்களை கவனிக்கும் பண்பு. எம்மவர்களோ இதற்குள்ளும் லக்ஸ் போட்டு குளிப்பது...சிக்னல் போட்டு பல் துலக்குவது என எந்த சலனமும் இல்லாமலும் இருந்தனர். அவனுக்கு இவைகள் மனதிற்குள் சிரிப்பைத்தந்தன. தன்னுடன் வந்த நண்பர்களுடன் சற்று நேரம் கதைத்து விட்டு ஓரமாக கிடந்த ஒரு வாங்கில் படுக்கத்தயாரானான். தீடிரென காதைப்பிளக்கும் சத்தத்துடன் வெடிகுண்டுச்சத்தம். திகைத்து போனான். அவனுக்கு தெரியும் அது யுத்தம் தீவிரமான காலம். ஆனால் அந்த் ‘ஆட்டிலறி’ அடிகளின் ஓசையில் பல குழந்தைகள் வீரிட்டு அழுதன. என்னால் மட்டும் என்ன எவராலும் எதுவும் செய்ய முடியாது என பொருமி விழித்திருந்தான்.

அடுத்தநாள் விடியலுடன் பேரூந்துகளில் பயணிகள் அடைக்கப்பட்டு துறை முகத்தை நோக்கி நகர்ந்தனர். பேரூந்துகளின் பக்கம் எல்லாம் கறுப்பு மெழுகு சீலைகளால் அடைக்கப்பட்டு இருந்தது. காரணம் அது உயர்பாதுகாப்பு வலயம். எவரும் எதையும் பார்க்க கூடாது என்பதற்காக. எல்லாம் எமது விதி என எண்ணி புறப்பட்டான். இன்னமும் அவன் மனது சமாதானம் அடையவில்லை. தனக்கு இன்று கூட கப்பலில் ஏற வாய்ப்பு கிடைக்குமா என எண்ணினான். பேரூந்தால் இறங்கிய உடன் மீண்டும் ஒரு சோதனையும் பதிவும். தமிழன் என்றாலே பதிவு சோதனையும் கலந்த வாழ்வுதானா என்றாகி விட்டது. அலைபேசியை ‘சிம் கார்ட்’ வேறாகவும் ‘பற்றறி’ வேறாகவும் பிரித்து வைக்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவை ஏற்று செய்தான். எல்லாம் பிரித்து மேய்ந்தார்கள். தன்னை அனுமதித்துவிட்டார்கள் என்றதும் கொஞ்சம் சந்தோஷப்பட்டவன், கப்பலில் இடம் இல்லை என்று தன்னை திருப்பி அனுப்புவார்களோ என்று மனதிற்குள் பயந்தான். காலை 7.30 மணியளவில் இருந்து காத்திருக்க தொடங்கினான்.
அனல் பறக்கும் வெய்யில். வெட்ட வெளி. பெண்கள் குழந்தைகளை ஒரு தகர கொட்டகைக்குள் இருக்க அனுமதித்தனர். குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. கொண்டு சென்ற சாரம்(லுங்க்) தான் அவனுக்கு உதவியது குடையாக. அவனது பொதியில் எல்லாம் வெயிலில் உருகிய தாரின் அடையாளம். எவ்வளவை பொறுத்தோம். இதை பொறுக்கமாட்டோமா. தண்ணீரை கூட தராமல் காத்திருக்க வைக்கப்பட்டோம். மதியம் 2.30 மணிக்குத்தான் அவர்களுக்கான கப்பல் கரையைத்தொட்டது. அதிலிருந்து வேக வேகமாக பயணிகள் இறக்கப்பட்டனர். அவர்களோடு சீருடையினரும் இறக்கப்படுவதை அவன் அவதானித்தான். இவர்களையும் ஏற்றத்தயாராகினர். பொதிகளைத் தூக்கிக் கொண்டு நிரையில் நின்று நடந்தான். இவர்களோடும் சீருடையினர் ஏற்றப்பட்டனர்.

4500 பேர் பயணிக்கும் கப்பல். 1200 பேர் பயணிகள். மிகுதிப்பேர் இவங்களா என வியந்தான்? எங்களை ஏற்றுகிறோம் என்ற பெயரில் அவங்கள் தங்களை அல்லவா ஏற்றுகிறார்கள். அவர்களை அனுப்ப வேண்டும். அதற்கு பாதுகாப்புக்கு நாம் தேவை போல..! எவரோடு இதைக் கதைக்க முடியும். மனதிற்குள் புழுங்கினான். கடலில் அவனுக்கு இப்படியான கப்பலில் புதிய பயணம். முன்னர் கிளாலி கடல்நீரேரியூடாக பலதடவைகள் சென்று வந்தாலும் இது அவனுக்கு புதியதே. ஆனால் இதையெல்லாம் அனுபவிக்கும் மனநிலையில் அவன் இல்லை. தனது தாய் மண்ணைப் பிரிகிறோம் என்ற கவலையே....! இனி எப்போது மீண்டும் கால் பதிப்பேன் என்ற ஏக்கமே...! கனத்த நெஞ்சத்தோடு நின்ற இவனையும்
சேர்த்து சுமந்து கொண்டு கடலில் நின்ற கப்பல் புறப்பட்டது.

‘விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா...!’

மூன்று வருடங்கள் கடந்தும் இதே ஏக்கத்தோடும்...மனக்குமுறலோடும் அவன் இன்றும் இருக்கிறான்...என்றாவது அன்னை மண்ணில் அடி வைப்பேன் என்ற எண்ணத்தோடு...!!! காத்திருப்புத்தானே வாழ்க்கை.

புதன், 9 செப்டம்பர், 2009

முதிர்கன்னி.....!

அண்மைக்காலமாக மனதில் அடிக்கடி ஒலிக்கின்ற ஒரு பாடல், ‘சொல்லாயோ வாய்திறந்து...வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய்திறந்து....’ மோகமுள் படத்தில் வரும் ஒரு அருமையான பாடல். ஜானகியின் குரல் மனதை பிழிகிறது. பல விருதுகளைக் பெற்றாலும் நாவல் படமாக்கப்பட்ட விதத்தில் சில விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு பெண்ணின் அதுவும் முதிர்கன்னி ஒருவரின் மனநிலையை, அவளின் உணர்வலைகளை வெளிக்காட்டுகின்ற ஒரு அற்புதமான பாடல். வாலியும் தன்பங்கிற்கு வார்த்தைகளில் கோலம் போட்டு அந்த உணர்வுகளின் விம்பமாக வரிகளை வடித்திருக்கிறார்.




முதிர்கன்னி...இன்று எமது சமூகத்தில் இருக்கின்ற ஒரு பிரச்சினை. ஒரு பெண் தன்னுடைய உணர்ச்சிகளுடன் போராடும் போராட்டம். எவருக்கும் தெரியாத இரகசிய வேதனை. வெளியே சொல்லமுடியாததும் உள்ளே எதுவும் செய்ய முடியாததும் ஆன ஒரு உளவியல் யுத்தம்.

‘கோயிலை இடிச்செண்டாலும் குமரை கரை சேர்க்க வேண்டும்’ இது அந்தநாட்களில் எம்மவரிடையே உலாவந்த ஒரு சொல்லாடல். இந்த ஒன்று போதும் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது எவ்வளவுதூரம் முக்கியம் என்பதற்கு. எங்கள் ஊரில் சொல்வார்கள் அக்கா இருக்க தம்பி மணம் செய்து கொண்டால்....குமர் வீட்டுக்க இருந்து மூச்சு விட இவன் ஏன் இப்படி செய்தவன்.. இப்படி எல்லாம் சொல்வது எங்கள் ஊரில் இருக்கின்ற பெண்கள்தான். அவர்களுக்குத்தானே எம்மை விட வலிகளின் வேதனை அதிகம் தெரியும். அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணலாம்...அல்லது அந்தக் கற்பனை மூலம் காட்சிப்படுத்தலாம்.. ஆனால் எப்பொழுதும் எம்மால் உணரமுடியாது.

எனக்கு தெரிந்த ஒரு இலட்சாதிபதி, தன்னுடைய பணத்தை முன்வைத்து தன்னுடைய மகளுக்கு டாக்குத்தர் அல்லது எஞ்சினியர் அல்லது அக்கவுண்டன் அல்லது படித்த மாப்பிள்ளை தேடித்திரிந்தார். இதுவரை அகப்படவில்லை. இது 30 வருடங்களாக தொடர்ந்து, இன்று அந்த பெண் 50 வயதை கடந்துவிட்டாள். விடயத்தை ஊன்றிப் பார்த்தால், அவருடைய வரட்டு கௌரவமும், அந்த பணத்திமிரும் தான் காரணமாக தெரிகிறது. அவருடைய அந்த நினைப்பால் இன்றும் அந்தப் பெண் மணவாழ்வின் சுகம் அனுபவிக்காமல் இருக்கிறாள்.

சில இடங்களில் பெண்களின் அழகு, குறைபாடுகள், ஊனம் என்பன இவற்றிற்கு காரணமாக இருந்தாலும் அதையும் தாண்டி எந்த ஒரு குறையும் இல்லாதவர்கள் கூட இன்றும் முதின்ம வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் முன்வைக்கப்படுகின்ற ஒரு முக்கியமான குற்றச்சாட்டு ஆண்கள் கேட்கும் சீதனம். ஆனால் அதை கொடுக்கின்ற அளவிற்கு வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் சில விட்டுக்கொடுக்காத தன்மைகளால் அந்த திருமணங்கள் தள்ளிப்போய் பெண்கள் காணும் திருமணம் என்ற கனவு சிதைந்து விடுகிறது.

நன்றி : ஷீ-நிசி கவிதைகள் வலைப்பூ

தற்காலத்தில் வேலைக்கு போகின்ற பெண்கள் தங்களுடைய சொந்தக்காலில் நிற்கிறார்கள். வேலைகளில் பதவி உயர்வு மற்றும் சில சலுகைகள் காரணமாக திருமணங்களை தள்ளிப் போடுகிறார்கள். அது அவரவர் விருப்பம். அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் இவர்கள் நாலு இடங்களுக்கு சென்று படித்து, நாலு இடம் பார்த்து ஒரு பட்டறிவு பெற்ற நிலையில் உதிர்க்கும் வார்த்தைகளில் முக்கியமானவை ‘திருமணம் மட்டுமா வாழ்க்கை, எங்களால் திருமணம் இல்லாமல் வாழமுடியும்....’ என்பதாக அமைகிறது. இந்தக் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால் கிராமத்தில் பாமரனாக இருந்து கல்வியறிவு போதாத நிலையில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலைகளை மட்டும் செய்து கொண்டு நான்கு சுவர்களுக்குள் தங்களையும், தங்கள் எண்ணங்களை மட்டும் அகன்ற வானில் சிறகடிக்க விட்டு விட்டு இன்றும் மணநாளிற்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், வேலைசெய்பவர்கள் தங்கள் புலன்களை வேறு இடத்தில் செலுத்தி சில உளப்பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வார்கள். இவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது மிகப்பெரிய விடயம். அதைக் கனவாக நினைத்தே வாழ்கிறார்கள்.

சில இடங்களில் தாய், தந்தையர் ஒவ்வொரு காரணங்களை சொல்லி திருமணங்களை தட்டிக்கழிக்கின்ற போது அவர்கள் தாங்களாகவே தங்கள் மனதுக்கு பிடித்த ஒருவரை பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டு போய்விடுவார்கள். சமூகம் அவனுக்கோ அல்லது அவளுக்கோ மிக உயரிய விருதான ‘ஓடுகாலி’ விருதை வழங்கிவிடும். திருமணம் எனக்கு வேண்டாம் என்ற அந்தப் பெண்கள் சொல்லியிருந்தால் எவராலும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் பெற்றோரின் சில அசமந்தப் போக்கும், அவர்களின் வீணான பிடிவாதங்களும் இளம் கன்னிகளை முதிர்கன்னி என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. வீட்டுக்காரரை நம்பியோ அல்லது இந்த சமூகத்தை நம்பியோ எந்த வாழ்வுக்குள்ளும் புக முடியாத பெண்கள் இறுதியில் சாதி, மத, வயது எந்த வேறுபாடுமின்றி ஒரு ஆண்மகனுடன் சென்று தன்னுடைய புதிய வாழ்வை தொடங்கும் சந்தர்ப்பங்கள் எங்கள் கண் முன்னே நாம் பார்த்திருக்கிறோம்.

ஆண்களும் இந்த இடங்களில் நிறையவே பிழைவிடுகிறார்கள். தேவையற்ற முறையில் சீதனம் கேட்பது. அது கிடைக்கவில்லை என்றால் எந்த சமரசமும் இன்றி திருமணம் வேண்டாம் என்பது. இவைகள் எல்லாம் அந்தப் பெண்களின் உளவுரணை வெகுவாக பாதிக்கின்றது. பெண்ணைப் பெற்றவர்கள் வறுமையானவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களிடம் அதிகமாக சீதனம் கேட்டு அவர்களை மேலும் சிக்கலாக்குகிறார்கள். இந்த விடயங்களில் அந்த பெண்ணோ அல்லது அவர்களைப் பெற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. ஆண்களாக திருந்தாவிட்டால் இந்த சீதனப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நண்பன் ஒருவனிடம் இது சம்பந்தமாக உரையாடிய போது, அவன் பகிர்ந்து கொண்டான், தன்னுடைய உறவினர் ஒருவர் காலம் பிந்தி செய்து கொண்ட திருமணம் மூலம் பெற்றுக் கொண்ட குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்ததாகக் கூறினான். மருத்துவரிடம் இது தொடர்பாக ஆராய்ந்தால் அது பிந்திய திருமணத்தால் ஏற்பட்டது என்று தெரிவித்துவிட்டாராம். இன்னொரு நண்பனின் மனக்குமுறல் இது...இது சரியா அல்லது பிழையா என்பது பற்றி இங்கு நான் விவாதிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அது சரி என்றே சொல்வேன். அவனின் மணமகாத ஒரு உறவுக்காரப் பெண். அந்தப்பெண் யாருடனாவது களவாக உறவு வைத்திருக்கிறார் என்பதை அறிந்தால் நான் மகிழ்வடைவேன் என்றான். அவனின் எண்ண ஓட்டத்தை என்னால் ஊகிக்க முடிந்தது. காரணம் அந்தப்பெண்ணின் திருமணத்திற்காக அவனின் குடும்பம் அலைந்த அலைச்சல். ஒவ்வொரு திருமண முயற்சியிலும் தோல்விகள். அதனால் அந்தப் பெண் சந்தித்த திருமண ஏமாற்றங்கள். இவை எல்லாம் அவனின் மனதில் இப்படி ஒரு எண்ணத்தை தோற்றுவித்துவிட்டது.

==நிலாரசிகனின் கவிதைகள்
வலைப்பூவில் இருந்து ஒரு சில காட்டமான வரிகள்...======

முப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு
தெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு

மூணுமுடிச்சு மட்டும் கிடைக்கலையே
ஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே

பூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்
பூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்?

===
ஆறாம் திணை தந்த இன்னொரு வலி......
மார்கழி தோறும்
நோன்புகள் இருந்து
மணாளன் நோன்பைத்
தொடர்கிறாயே அக்கா..!

அகவை நாற்பதைத்
தாண்டியபின்னுமா
புரியவில்லை
நோன்பின் சிறப்பு.?

இது எனது நண்பர்கள் மூலமாக நான் கேட்டறிந்த கதைகளும், எனது உறவுகளிலே இன்னும் முதிர்கன்னியாக இருக்கும் அந்த பெண்களுமே எண்ணத்தில் எழுந்த கருக்கள். மனதிலே ஆழமாக கிடந்த ஒரு ஆதங்கம். ஆங்காங்கே இவற்றை பார்த்துப் பார்த்து வளர்ந்திருக்கிறோம். சாத்திரம் பார்த்து திருமணம்...குறிப்பு பொருந்தவில்லை அதனால் ஒன்றும் சரிவருதில்லை என்ற எண்ணம்....இந்த வட்டத்துக்குள் இருந்து வெளியே வர நாம் முயற்சிக்காத வரைக்கும், சீதனம் என்ற சமூக வியாதி அழியாத வரைக்கும் இந்த வேதனைகளை நாம் கண்டுகொண்டே வாழ வேண்டும்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

பகிடிவதை - ராகிங்

வந்தியர் 'ராகிங்' தொடர்பாக உளறியது (தப்பாக எண்ண வேண்டாம், அவரது வலைப்பூவின் பெயர் 'என் உளறல்கள்')கண்டு அது தொடர்பாக எனது எண்ண அலைகளையும் பதிவிடலாம் என்று நினைத்து வரைந்தது இது.

அது 1997 ம் ஆண்டின் ஒரு நாள். பத்திரிகைகள் எல்லாம் பல்கலைக்கழகங்கள் மீது வசைமாரி பொழிந்த நாள். பகிடிவதையின் உச்சக்கட்டமாக பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வரப்பிரகாஷ் என்ற ஒரு மாணவன் 1000 தோப்புக்கரணம் போட பணிக்கப்பட்டு முடியாது போக இடையில் மயக்கமுற்று விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட, அங்கே சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக வைத்தியர்கள் அறிவித்து சில நாட்களில் அவன் இவ்வுலகை விட்டு நீங்குகிறான்.

என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிலை. ஒரு சில மாணவர்களிடையே எழும் ஒரு வக்கிரபுத்திதான் இதற்கு காரணமா? இல்லை இதை ஒரு உளரீதியான பாதிப்பு என்று அணுகுவதா? என்று பார்த்தால் இரண்டும் கலந்த கலவை என்றே சில சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஏன் இவ்வாறு நடக்கிறார்கள். இதனால் சாதிக்கப்போவது என்ன? 'ராகிங்' என்ற நிகழ்வுக்கு நான் முற்றிலும் எதிரானவன் அல்ல. உடல் ரீதியாக இழைக்கும் தீங்கு, சில வார்த்தைப் பிரயோகங்கள் என்பன தவிர்க்கப்பட்டு, பகிடிவதையாக இல்லாமல் பகிடியாக இருக்கவேண்டும் என பிரயாசைப்படுபவன். அதில் இருக்கும் சுகம் தனிசுகம் அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

எனக்குத்தெரிந்த எமது கல்லூரி மாணவன் நல்ல புள்ளிகள் எடுத்தும் சந்தர்ப்பவசத்தால் யாழ்ப்பாண் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு தெரிவு செய்யப்படுகிறான். அவன் புகுமுக மாணவனாக அங்கே சென்றதும் நடந்த சம்பவங்கள் அவனை வெறுப்புக்கு உள்ளாக்குகின்றன. அவன் உள்ளம் உடைந்தவனாக சொன்னான் "காத்திருப்பு பட்டியலில் உள்ளே சென்றவன் எல்லாம் எனக்கு ராகிங் தாறானடா..இதைவிட என்ன கொடுமை வேண்டிக்கிடக்கு". இவனின் உளப்பாங்கு இப்படி இவனை சிந்திக்க தூண்டுகிறது. காத்திருப்புப் பட்டியலில் பல்கலைக் கழகம் சென்றால் அங்கே நடக்கும் செயற்பாடுகளில் பங்கெடுக்க கூடாதா? அது சரி பிழை என்பது அடுத்த நிலை. இந்த மனப்பாங்கு மாறவேண்டும் என்பது எனது அவா.

பொதுவாக சொல்வார்கள் "நல்லா ராகிங் வாங்கினவனும், ராகிங் வாங்காதவனும் ராகிங் கொடுக்க மாட்டார்கள் என்று". இது ஒரு குறிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உண்மைதான். ஆனால் நான் ராகிங் வாங்கினான் கட்டாயம் கொடுப்பேன் என்போரும் உள்ளனர். நான் குறிப்பிட்ட அந்த மாணவன் பின்னர் தனக்கான சந்தர்ப்பம் வரும்போது கண்டபடி ராகிங் கொடுத்து பிரச்சினைகளைச் சந்தித்து ஒரு வாரம் பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார். வேதனையான ஒரு விடயம்.

'ராகிங்' - இது மாணவர்களிடையே கூச்ச சுபாவத்தை போக்குவதற்கும், வரும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வினை போக்கி ஒரு சீராக அவர்களிடத்தில் நெருக்கத்தினை பேணுவதற்கும், ஈகோ போன்ற அற்ப உளப்பிரச்சினைகளை அகற்றுவதற்குமாக உருவாக்கப்பட்ட ஒன்று. அந்த காலப்பகுதியில் காலில் பாத்ரூம் ஸ்லிப்பர்ஸ் மட்டும் அணிய வேண்டும். சேர்ட். உள்ளே பனியன் இல்லை. கையில் மணிக்கூடு இருக்காது. எந்த ஆபரண அணிகலன்களும் இருக்க முடியாது. இது ஒரு நல்ல விடயம்.காரணம் ஒரு வறிய மாணவன் இந்த நிலையில் தான் பல்கலைக்கழகம் புகுவான். அவன் அங்கே வந்து வசதிபடைத்தவர்கள் முன்னால் கூனிக்குறுகி நின்று (காதல் கொண்டேன் தனுஷ் நிலையை காட்சிப்படுத்தலாம். அது கொஞ்சம் ஓவராக இருந்தாலும்..நல்ல உதாரணம்) என்னால் எதையும் செய்யமுடியாது என்ற ஒரு மோசமான முடிவெடுக்க அவன் உந்தப்படலாம். இவ்வாறு அந்தஸ்துகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு வருவது அவர்களுக்கு இடையிலான இடைவெளியினை அதிகரிக்குமே தவிர குறைக்காது. எனவேதான் இப்படியான சில உப்புச்சப்பற்ற பிரச்சினைகளைக் களைந்து மாணவர்கள் எல்லோரும் சரிசமமாக மதிக்கப்பழகுவதற்காக இப்படியான 'ராகிங்' என்ற கரு உருவானது. ஆனால் இதனை புரிந்துகொள்ளாமல் அதனை காட்டுமிராண்டித்தனமாகவும் வன்முறையாகவும் சிலர் மாற்றியமைத்து விட்டார்கள்.

சிங்கள மாணவர்களில் பெம்பாலானோர் 'ராகிங்' இல் ஈடுபடுவதில்லை என்ற ஒரு கருத்து இருக்கின்றது. அது பெரும்பாலும் உண்மையே. ஒன்று அவர்களில் ஒரு சதவீதம் காதலோடும், பெண்களோடும் பொழுதைப் போக்கும். சிலர் வார இறுதிநாட்களில் வீடு சென்று திரும்புவர். அவர்களிலும் சிலர் இந்தக் கொடுமையை செய்யத் தவறுவதில்லை.

ஒரு மூத்த மாணவன் ‘ராகிங்’ இன் போது எமக்கு உடல்ரீதியாக (அடி.......)தாக்குகிறார் என்றால் எமக்கு எவ்வளவு கோபம் வருகிறது. அதை நாம் இன்னொருவருக்கு செய்ய எப்படி எங்கள் மனம் விழைகிறது. அவன் திருப்பி அடிக்க மாட்டான் என்ற நப்பாசை. இப்படி வன்முறையோடு பழகும் அந்த சிரேஷ்ட மாணவனோடு எவ்வாறு சிரித்து கதைக்க மனம் வரும். அவர்கள் அந்த ’ராகிங்’ காலம் முடிந்த பின்னர் அவர்களிடம் சென்று “இது ராகிங் ற்காக மட்டும்தான்...மனசில வச்சிருக்க கூடாது...இதையெல்லாம் மறந்து இனி நண்பர்களாக இருப்போம்...என்று பாசக்கரம் கூட நீட்டுவதில்லை..! சில மாணவர்கள் அப்படி செய்வார்கள். சிலர் அப்படி நான் எதுவுமே செய்யவில்லை என்பது போல திரிவார்கள். பல்கலை வாழ்வு முடிந்த பின்னர்....நாம் ‘ராகிங்’ கொடுத்த ஒரு மாணவன் நமக்கு மேல்திகாரியாக இருந்தால், அவருக்கு கீழே வேலை செய்ய மனம் இடம் கொடுக்குமா....!

என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சிரேஷ்ட மாணவர்கள் ஒரு 10 பேர் அளவில் அறைக்குள் பூட்டி போட்டு அடித்தனர். எவ்வாறு அவர்களுடன் நட்பு பாராட்ட மனம் வரும்...! இதே போல இன்னுமொரு நண்பனுக்கு அவன் இருந்த வீடு புகுந்து தாக்கினார்கள். அடுத்தநாள் அவனின் சிவந்த மேனியில் கன்னத்தில் கறை. முஷ்டியால் இடித்த கறை அது. அந்த நண்பன், ”அண்ணா எனது 22 வருட வாழ்வில் எனது அப்பா அம்மா கூட ஒருதடவை அடித்ததில்லை” என்றான் அழுது கொண்டு. நட்போ அல்லது எந்தவிதமான உறவோ மலரும் என எவ்வாறு எதிர்பார்க்கலாம்...?

என்னுடைய சக பிரிவு தோழன், அவன் ‘ராகிங்’ கொடுத்த பின்னர், கனிஷ்ட மாணவர்கள் அதை எண்ணி பிற்காலங்களில் சிரித்து மகிழ்வார்கள். அவனுடன் அவர்கள் நட்பு பாராட்டிய விதம் அல்லது அந்த உறவு எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ‘ராகிங்’ தான்.

வரப்பிரகாஷ் என்ற மாணவன் எம்மைப் பிரிந்த நேரம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் தான் இதனை செய்தது என்று சாரப்பட அன்றைய ‘உதயன்’ பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. உடனே எங்களுக்கு எல்லாம் ரோசம் வர, எமது நண்பன் ஒருவன் ’கண்டிக்கின்றோம்’ என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் எழுதி...அதில் 1000 பிரதிகள் அளவில் அச்சடித்து எல்லா இடங்களிலும் விநியோகித்தோம். காரணம், அந்த மாணவன் செய்த தவறுக்கு கல்லூரி எவ்வாறு காரணமாக முடியும்..? அது அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு..அவரின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினை...!

அன்றைய தினம் எமக்கு கற்பித்து கொண்டிருந்த பௌதிகவியல் ஆசான் திரு. ரவீந்திரநாதன் தங்களுடைய காலத்தில் இருந்த ‘ராகிங்’ தொடர்பாகவும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இரண்டு பாடவேளையும் இதுதான் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருந்தது. அப்படியான ‘ராகிங்’ இருந்திருந்தால் வரப்பிரகாஷை இழந்திருக்க மாட்டோமல்லவா?

ஒரு சில மாணவர்கள் தங்களது மேலாதிக்கத்தை காட்ட நினைப்பதும், தம்முடைய பலத்தை காட்ட நினைப்பதும், தாங்கள் ஒரு நாயகனாக வலம் வரவேண்டும் என நினைப்பதும்..இதற்கு காரணமாக அமையலாம். இது என்னைப் பொறுத்தவரை எல்லாம் அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சினையே தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் ‘ராகிங்’ என்ற ஒன்றை நான் எப்போதும் எதிர்ப்பவன் இல்லை. மீண்டும் சொல்கிறேன் அது பகிடி ‘வதை’ யாக இல்லாமல் பகிடியாக நடந்தால் நல்லது.

புதன், 19 ஆகஸ்ட், 2009

தேரேறி வருகிறான் நல்லைக் கந்தன்...!

"வெள்ளை மணல் மீதுருண்டு
வேலவனே என்றழுதேன்
எங்கயடா போய் ஒழிந்தாய் முருகா...!"

நல்லூர்....நாவினில் உச்சரிக்கும் போதெல்லாம் உடலில் ஓர் பரவசம். தன்னையறியாமலே உள்ளம் பூரிக்கும். ஏனோ தெரியவில்லை அந்தக்கந்தனை எண்ணும் போதெல்லாம் என்னுள் ஒரு கிறக்கம். இதை அனுபவித்தவர்கள் ஏராளம்.
இன்று நல்லைக்கந்தன் தேரேறி வருகிறான். பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் இந்த தருணம் அலங்காரக்கந்தனாம் ஆறுமுக சுவாமிக்கு வசந்த மண்டப பூசை நிறைவுற்றிருக்கும்.

வசந்த மண்டப பூசை.......வார்த்தைகள் இல்லை விபரிக்க. அற்புதமாக இருக்கும். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கே ஆலயத்துக்கு வந்து அந்த வசந்த மண்டபத்தில் கூடி கந்தவேள் பெருமானின் பூசை பார்க்க காத்திருப்பர். அது சன சமுத்திரம். அழித்தல் தொழில் குறிக்கும் சிவப்பு நிறத்துடன் இருக்கும் சாத்துப்படி. ஆலயக் குருக்கள் மற்றும் ஏனைய அந்தணப்பெருமக்களும் சிவப்பு நிற வேட்டியுடன் நின்றிருப்பர்.

வெள்ளிப்பீடத்தில் வேலவன் எழுந்தருளி அடியவர்களின் தோளில் அசைந்து வருகின்ற காட்சி....காணக் கண் கோடி வேண்டும். அழகனைக் காண கோடி அல்ல பல கோடிக் கண்கள் வேண்டும். தங்கம் தகதகவென மின்னும். சுவாமியின் அருகே நின்றவர்களுக்கு தெரியும் 'சிலிங் சிலிங்' என்ற மெல்லிய ஒலியுடன் பன்னிருகரத்தான் வந்து கொண்டிருப்பான்.

எந்தக் கணமும் பிசகாத சரியாக 7.00 மணிக்கு கோபுர வாசலினூடாக வெளியே வரும் அந்தக்காட்சி அனைவரையும் நெக்குருக வைத்து விடும். தாமரை மலர்கள் சொரிய , அரோகரா ஓசை வானைப் பிளக்கும். மங்கள் வாத்தியங்கள் முழங்கும்.

சனசமுத்திரம் மத்தியில் முருகப்பெருமான் அசைந்து அசைந்து வருவார். "உன்னையல்லாது துணை எவருமுண்டோ வையகம் புகழ் நல்லை வாழ் வடிவேலனே....நீதான் உய்ய வழி காட்ட வேண்டும்" என்ற அடியவர்களின் மனக்குமுறல் மௌனமாகவே இருக்கும். அங்கப் பிரதட்டனை செய்பவர்களும் அடி அழிப்பவர்களும் கற்பூரச்சட்டி எடுப்பவர்களும் காவடிகளும் என அடியவர்களின் நேர்த்திக்கடன் வேலவனின் வீதியில் தீர்க்கப்படும்.

இவ்வளவு அழிவிற்கு பின்னமும் இந்த திருவிழா ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்ற சிலரின் கேள்வி மனதை நெருடாமல் இல்லைத்தான்.

ஆனாலும் கந்தனே நீ " வந்திருந்து பூச்சொரிந்து வாசலிலே கையசைத்தால் வல்ல வினைகள் எல்லாம் அகன்று விடும்". எம்மக்கள் அவலமற்ற அமைதி வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் எமது பிரார்த்தனை இருக்கும். அதுதான் அங்கிருக்கும் அடியவர்களின் இதயத்தில் அடியில் இருக்கும் ஒரு எண்ணமாக இருக்கும்.

ஒருமுறை வானொலி அஞ்சல் நிகழ்வில் இளையதம்பி தயானந்தா அற்புதமாக சொல்லுவார். தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. கற்பூரங்கள் எரிக்கப்படுகின்றன. உடைக்கப்பட்டதும் எரிக்கப்பட்டதுமான எண்ண அலைகளோடு அடியவர்கள் அங்கே காணப்படுகிறார்கள் என....!

உண்மைதான் கண்ணீரோடும் அவலங்களோடும் அலையும் ஈழத்தமிழன் இப்போது தண்ணீருக்குள் முகாம்களில் மிதக்கிறான். அவலம் அழிவில்லாமல் தொடர்கிறது. ஒன்றும் வேண்டாம் கந்தவேளே....! அது வேண்டாம் இது வேண்டாம் எமக்கு எதுவும் வேண்டாம்...! எம் கண் முன்னால் நிகழும் இந்த அவலம் அகலட்டும். "கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம்...' இன்று கூற்றுவர்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் எம்மினத்தவரை காப்பாற்றாதா? என்றே எண்ணுகிறோம்.

முருகா காப்பாற்று...! முழுவினைகளும் அகலட்டும்....!! அவலமற்று அமைதி வாழ்வு மலரட்டும்!!!

தேர்த்திருவிழா பற்றிய ஒரு அருமையான பாடல்......
பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்
இசை : இசைவாணர் கண்ணன்
பாடல் : புதுவை இரத்தினதுரை

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஈழத்துச் சதன் - பல குரல் - மிமிக்ரி

விஜய் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. பெயர் "கலக்கப் போவது யாரு". இது ஒரு வெறும் நகைச்சுவைக்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் உள்ளூர், வெளியூர் கலைஞர்கள் , இலை மறை காயாக சமூகத்திற்குள் ஒளிந்திருந்த சில கலைஞர்களை வெளிக்கொணரும் ஒரு முயற்சி. இதில் விஜய் தொலைக்காட்சி இலாபத்துக்காக செய்கிறதா என அலசும் அபத்தத்தை தவிர்ப்போம். அது தேவையற்ற ஒன்றே. இதை விடுத்து அவர்கள் 10 பெண்களை நடனமாட விட்டு பிழைத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு சமூக அக்கறையோடு இப்படியான நிகழ்ச்சிகளை தயாரிக்கின்றனர். அந்த நிகழ்ச்சிகள் தரமாகவும் இருக்கின்றன. இவைதான் இன்றளவும் இதயத்துள் 'விஜய் ரீவி' இருப்பதற்கான காரணங்கள். இவர்களைப் பின்பற்றி சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளும் இப்படியான நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடாத்தி வருகிறது.

மிமிக்ரி - பலகுரலில் பேசுவது. இந்த கலை எவ்வாறு ஆரம்பத்தில் உருவானது என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் எழுதினால் அறிய ஆர்வம். ஆனால் இந்தக்கலை மீது ஏனோ தெரியவில்லை ஒரு அபரிமிதமான காதல் இருக்கிறது. எங்காவது மிமிக்ரி நிகழ்ச்சி இருந்தால் அதை தவறவிடாமல் பார்ப்பது வழக்கம். இந்த பலகுரல் நிகழ்ச்சிகளை தமிழகத்தை சேர்ந்த கலைஞர்கள் நடாத்தி அதனை நான் பார்க்கும் முன்னர், நான் பார்த்த, ரசித்த , பிரமித்த ஒரு கலைஞன் "ஈழத்துச் சதன்".

ஈழத்தின் யாழ்ப்பாண வலிகாமத்தை சேர்ந்த ஒரு குள்ளமான மனிதன். சிறிய முகம். மிக மிக சிறுவனாக இருந்த போது (8 வயது) எமது ஊர் பாடசாலையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்காக இந்த மனிதரை முதலில் பார்த்தேன். அவரது நடவடிக்கைகளே நகைச்சுவையாக இருந்தது. அதிலும் சிறுவர் என்றால் சிறிய விடயங்களிற்கே சிரிப்பு வரும். அந்த நிகழ்ச்சியில் தான் அவர் பல மிருகங்களின் குரல்களை தனது வாய் மூலம் எமக்கு தெரியப்படுத்தினார். நிச்சயமாக அப்போதுதான் பல மிருகங்கள் எவ்வாறு கத்தும் எனத் தெரிந்தது. யானை பிளிறும் என படித்திருந்தாலும் பிளிறல் எப்படி இருக்கும் என தெரியாது. இப்படி பல மிருகங்களின் குரலை தெரியப்படுத்தியது ஈழத்துச் சதனே. அதேபோல பறவைகள். காகம், கிளி, மைனா, குயில் போன்ற சில குரல்களைத்தவிர எமக்கு வேறு ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அன்று பல பறவைகளின் குரல்களையும் அறிந்து கொண்டோம்.

புரட்டாதிச்சனி, அமாவாசை போன்ற தினங்களில் அல்லது விரத தினங்களில் காகத்துக்கு உணவு வைத்து விட்டு உண்ணுவது வழக்கம். அதற்காக உணவை ஒரு இடத்தில் வைத்து 'கா கா கா கா...' என அழைத்து அந்த காகம் உணவு உண்ணும் வரை காத்திருந்து உண்ணுவோம். அன்றும் ஈழத்துச்சதன் பல்வேறு விதமாக காகம் கரைவதை வெளிப்படுத்தி இருந்தார். உணவுக்காக அழைப்பது, ஒரு காகம் இறந்தால் அதற்கு எப்படி அழைப்பது என காகத்தின் கரைதலில் உள்ள வேறுபாடுகளை தெரியப்படுத்தினார். நிறைய காகங்கள் அந்த இடத்தில் கரைந்தபடி சூழ்ந்து கொண்டன. பிரமிப்பாக இருந்தது. விரத நேரங்களில் அழைக்கும் போது ஐந்திற்கு உட்பட்ட காகங்களே வரும். இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சி அவரது வெறும் வாய் மூலம் வந்த குரல்தான். ஒலிவாங்கியோ (மைக்) ஒலிபெருக்கியோ இல்லை. அப்படித்தான் எமது வாழ்வும் வசதிகளும் இருந்தது. ஆனாலும் நிம்மதியும் இருந்தது.

பல வாகனங்களின் ஓசை எவ்வாறு இருக்கும் என எமக்கு ஒலி எழுப்பி காட்டினார். அவர் செய்ததிலேயே இரண்டு விடயங்கள் அசத்தலானவை. ஒன்று குரங்கு செய்யும் சேட்டைகள். மிக மிக தத்ரூபமாக இருந்தது. அதன் நடவடிக்கைகள் , அதன் உடல் அசைவுகள் என எல்லாவற்றையும் அனாசயமாக செய்து காட்டினார். அடுத்தது ஒரு பெண் எப்படி தன்னை அலங்கரிப்பாள் என்பது. அவரின் அந்த நிகழ்ச்சிகளை பார்த்தவர்களுக்கு தெரியும். உன்னதமான ஒரு அபிநயமாக இருக்கும். மிக மிக இலாவகமாக இருக்கும் அவரது செய்கைகள். தலை முடி வாருவது, வாரும் போது தலையில் இருந்து ஒரு பேன் அல்லது ஈர் வந்தால் அதை எடுத்து விரல் நகங்களுக்கு இடையில் வைத்து நசுக்குவது. நசுக்கும் போது 'ஸ்ஸ்..' என்று சத்தமிடுவது என எல்லா நுணுக்கங்களையும் உன்னிப்பாக அவதானித்து எம்முன்னே படைத்தார். அதிலும் தலைமுடியை பின்னுவது, முடிவது என அப்படியே அச்சொட்டாக ஏன் பெண்களிலும் பிரமாதமாக செய்வார். இன்னும் இன்னும் நிறைய.

பின்னர் ஒரு தடவை கல்லூரிக் காலத்திலும் கண்டு களித்தேன். கல்லூரியில் இயங்கும் ஒரு கழகம் தன்னுடைய வளர்ச்சி நிதிக்காக (எமது கல்லூரியில் வளர்ச்சி நிதி என்பது சிரிப்பான விடயம்) ரூபா5 வாங்கி எமக்கு அந்த நிக்ழச்சியை வழங்கினர். நான் நினைக்கிறேன் இந்த ஈழத்துச் சதன் இரணடாயிரம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் (2003 அல்லது 2004) அளவில் மரணமடைந்திருக்க வேண்டும். நிஜமாக சொல்வேன் மிக அற்புதமான ஒரு கலைஞன். ஒழுங்கான சந்தர்ப்பங்களும் களங்களும் கிடைக்காமல் எம்மோடு மட்டும் வாழ்ந்த மறைந்த ஒரு கலைஞன்.

நாம் செய்த அல்லது செய்கின்ற ஒரு வரலாற்றுத்தவறு என்னவென்றால் எமக்குள் இருக்கும் கலைஞர்களை ஊக்குவிக்காமலும், பாராட்டாமலும் அந்தக் கலைஞர்கள் பறிய பதிவுகளை பேணாமலும் விட்டு பெரும் குற்றத்தை இழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

தயவுசெய்து இந்த "ஈழத்துச் சதன்" பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாம். அவர் சம்பந்தமான தகவல்கள், படங்கள், ஒலிப்பேழைகள் இருந்தால் kidukuveli@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அல்லது நீங்களாகவே உங்கள் வலைப்பூவில் பதிவிடலாம். அல்லது ஏதாவது இணையத்தில் ஏற்றலாம். எவர் செய்தாலும் நல்லது நடக்கட்டும். தகவல்களை பேணுவோம்.

இந்த ஈழத்துச்சதனுக்கு பின்னர்தான் இப்படியான பலகுரல் நிகழ்ச்சிகளில் பல கலைஞர்களை தெரிந்து கொண்டேன். தாமு, சின்னி ஜெயந்த், படவா கோபி,சேது, ஜெயராம், விவேக், மயில்சாமி பலரும் இருந்தனர். இவர்கள் பல ஒலிகளோடு மட்டும் இல்லாமல் நடிகர்களின் குரலை தமது குரல் மூலம் வெளிப்படுத்தி கைதட்டல்கள் வாங்கினர். சின்னி ஜெயந்த் இதிலே எனக்குப் பிடித்த ஒரு கலைஞர். அவரது மிமிக்ரி கேட்டு பார்த்து பலதடவை மகிழ்ந்திருக்கிறேன்.

இப்போது விஜய் தொலைக்காட்சி கலக்கபோவது யாரு அறிமுகப்படுத்தியவுடன் ஏராளமான கலைஞர்கள் வெளியே தெரிந்தனர். இதனால் குரல் என்பதற்கு அப்பால் உடல் அசைவுகள், கருத்துக்கள், படைக்கும் பாணி என வேறுபடுத்தி பரிசில்கள் வழங்கினர். சன் தொலைக்காட்சியின் 'அசத்தப் போவது யாரு', பின்னர் கலைஞர் தொலைக்காட்சிலும் இது இருந்தது(பெயர் நினைவில்லை). கோவை குணா, ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன், குட்டிப்பையன் அர்ஜுன் என பலரும் கலக்கி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் விஜய் தொலைக்காட்சி மூலம் வெளியே வந்தவர்கள். இப்படி ஏனைய தொலைக்காட்சிகளும் ஒளிந்து கிடக்கும் கலைஞர்களை வெளியே தருவிக்கிறார்கள். நல்ல முயற்சியே.

எமது மண்ணிலே பிறந்த ஒரு கலைஞன் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் அந்தக்கலைஞனை நாம் சரிவரக் கையாளாமல் விட்டு விட்டோமோ எனத் தோன்றுகிறது. அந்தக் கலைஞன் மறைந்தாலும் என்றும் எமது நெஞ்சத்துள் வாழ்வான்.

கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் வீரர்களை அப்படியே பிரதிபலிப்பாக செய்யும் ஒரு கானொளிக்காட்சி இது. பார்த்து மகிழுங்கள்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பங்களாதேஷின் பாய்ச்சல்...!

ம்ம்ம்...டெஸ்ட் போட்டித்தொடர் கோப்பை எம் வசம்.....!

இந்தியா வென்றால் இணையம் எல்லாம் அலறும். தோற்றால் கதறும். அதோடு நக்கல் பதிவுகளும் பளிச்சிடும். ஆஸ்திரேலியா வென்றால், மீண்டும் அசத்தல் என்று அதிரடி பதிவுகள் வரும். இலங்கை வென்றால், அவர்களுக்கு என்னவோ இப்ப வெற்றிகள்தான் அடிக்கடி என்பது போல கட்டுரைகள் வரும். ஆனால் பங்களாதேஷ் வென்றுவிட்டது. எங்கும் எதிலும் பதிவுகளோ ஆர்ப்பாட்டங்களோ இல்லை. காரணம் ஒன்று அது பங்களாதேஷ் தானே என்கிற இளப்பம். இரண்டாவது அது பெற்ற வெற்றி மேற்கிந்தியரின் இரண்டாம் தர அணியுடன் தானே என்ற ஏளனம்.

பங்களாதேஷ் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் மேற்கிந்தியரை வாரிச்சுருட்டி விட்டது. டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்றும் ஒருநாள் போட்டிகளில் 3-0 என்றும் WHITE WASH அடிப்படையில் மேற்கிந்தியரை மண்கவ்வச் செய்தது.

ஒரு காலத்தில் கிரிக்கட்டின் ஜாம்பவான்கள் மேற்கிந்தியர்கள். அதுவும் அவர்கள் மண்ணில் அவர்களை அசைப்பது கடினம். அவர்களின் எகிறுப்பந்துகளுக்கான ஆடுகளங்களில் ஆசிய அணிகள் உட்பட அனைத்து அணிகளும் தடுமாறித்தான் இருந்தது. விக்கட்டுகளை வீச்சாளர்கள் பதம்பார்க்கிறார்களோ இல்லையோ துடுப்பாட்டக்காரர்களை பௌன்சர் பந்துகளால் மிரட்டுவர். இதனால்தானோ என்னவோ விக்கட்டுகள் எடுப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. துடுப்பாட்டமும் அதிரடிதான். அவர்கள் ஆடும் பாணி எல்லோரையும் விட வித்தியாசமானது. எல்லோரும் ஜாம்பவான்கள். அடித்து நொருக்கும் வல்லமை படைத்தவர்கள்.
ம்ம்ம்...ஒருநாள் போட்டித்தொடர் கோப்பையும் எம் வசம்.....!!

ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழ். குறிப்பாக 1990 களின் ஆரம்பத்தில் இருந்து இந்த சரிவினை மேற்கிந்தியர்கள் சந்தித்து வருகின்றனர். பந்துவீச்சில் ஓரளவு அசத்தினர். அதுவும் அம்புறோஸ், வோல்ஷ், பிசப் ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் அதிலும் அவர்களுக்கு சரிவே. ஆங்காங்கே லாரா தனி ஒருவராக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அவர்களின் துடுப்பாட்டம் இன்னமும் மறையவில்லை என காட்டுவார். அவரோடு சந்தர்போல் உம் தம்பங்கினை சரிவர செய்தார். இப்போதும் செய்தும் வருகிறார். இவைகளைத் தவிர மேற்கிந்தியரின் சாதனைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லைத்தான். காரணம் தேடிப்போனால் நிறைய இருக்கிறது. அவர்களுடைய கட்டுப்பாட்டுச்சபையினுடைய அக்கறையின்மை காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன். அதேவேளை அந்த அணி வீரர்கள் அனைவரும் விளையாட்டாய் விளையாட்டாய் விளையாடுவது. இதுதான் அவர்களின் பலமும் பலவீனமும். இன்னும் நிறைய காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது பற்றி பின்னர் ஒருமுறை பார்க்கலாம்.

பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை எதிர்பார்ப்புகளோ அழுத்தங்களோ அற்ற அணி. அவர்கள் தோற்றாலும் அவர்களுக்கான விமரிசனங்கள் குறைவாகவே இருக்கும். அது அவர்களைப் பொறுத்தவரை ஒரு கவலையற்ற விடயம். ஆனால் பெரிய அணிகள் அவ்வாறில்லை. தோற்றால் போதும் ஊடகங்களோ ரசிகர்களோ வறுத்தெடுத்துவிடுவார்கள். மிகுந்த அழுத்தம் அவர்களுக்கு சிறிய அணிகளுடன் விளையாடும் போது இருக்கும். ஆனால் அவர்கள் இலகுவில் வெற்றி பெற்றுவிடுவார்கள் காரணம் அவர்களின் அனுபவம். கத்துக்குட்டிகளாக இருக்கும் சிறிய அணிகள் பெரும் அணியுடன் விளையாடுகிறோம் என்ற பயத்திலேயே விளையாடுவார்கள். வெற்றிக்கான ஒரு வாய்ப்பு இருந்தால் என்ன விலை கொடுத்து என்றாலும் பெறத்தயங்காமல் விளையாடுவார்கள். இதற்கு நல்ல உதாரணமாக அமைந்த போட்டிகள் தான் அண்மையவை.

இந்த போட்டிகளை கவனித்தவர்களுக்கு தெரியும். முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடி மேற்கிந்தியரை அசத்தலான பந்துவீச்சில் துவைத்தெடுத்துவிட்டது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் விரட்டினார்கள் அவர்களின் ஓட்ட எண்ணிக்கையை. இரண்டும் பெரிய இலக்குகள். அவரவர் தங்கள் தங்கள் பங்கிற்கு துடுப்பெடுத்தாடி அணியை கரைசேர்த்தனர் வெற்றியை நோக்கி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அணியை வழிநடத்தி ஒருநாள் போட்டித்தொடரிலும் வெற்றிக்கனியைத் தேடித்தந்த பெருமைக்குரிய அணித்தலைவராக ஸகிப் அல் ஹசன் திகழ்கிறார். மிக இளம் வயதிலே இப்படி ஒரு வெற்றியைத் தேடிகொடுத்திருக்கிறார். முன்னாலே இருந்து வழிநடத்தி சகலதுறைகளிலும் பிரகாசித்தார்.
இப்போதைக்கு பங்களாதேஷில் நானே ஹீரோ....!

பங்களாதேஷ் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது 2000ம் ஆண்டில். இன்று வரை அது 61 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கின்றது. இதில் கடைசியாகப் பெற்ற வெற்றிகளுடன் அது மொத்தம் 3 போட்டிகளில் வென்றுள்ளது. அதில் இறுதியாக பெற்ற வெற்றி ஒரு தொடர் வெற்றி. அதுவும் வெளிநாட்டு மண்ணில். பொதுவாக ஆசியர்கள் வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்வது மிகவும் சவாலான விடயம். இப்போது பங்களாதேஷ் அணி அதனை சாதித்துவிட்டது. அவர்களுக்கு இப்போ உளவுரன் அதிகாமாகி இருக்கும். இது அடுத்துவரும் போட்டித்தொடர்களில் நிறைய எதிர்பார்ப்புகளைக் கூட்டும். அடுத்து வரும் தொடர்களை அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது சவாலான விடயமே.

மேற்கிந்திய அணியைப் பொறுத்தவரை அந்த அணி இரண்டாம் தர அணி என்ற ஒரு நிலை இருக்கிறது. ஆனால் அதில் அனேகம் பேர் முன்பு தேசிய அணிக்காக விளையாடி இருக்கிறார்கள். அனுபவம் குறைவுதான். அதுவும் வங்க தேச அணிக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதை அவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். எது எவ்வாறாகினும் பங்களாதேஷ் வென்றுவிட்டது. அவ்வளவுதாங்க. இனி எவ்வாறு இந்த வெற்றி முகத்தை தக்கவைக்கிறார்களோ என்று பார்ப்போம்.

திங்கள், 27 ஜூலை, 2009

நல்லூர் கந்தனுக்கு கொடி...!


அலைகடல் சூழும் ஈழநாட்டின் தலையெனத் திகழும் யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற பதியில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம்தான் நல்லூர்க் கந்தசுவாமி கோவில். தமிழ்க்கடவுள் முருகன். யாழ்ப்பாண அரசாட்சி காலங்களில் எல்லாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சிறப்பு மேலோங்கித்தான் இருந்தது. இது தொடர்பாக கானாபிரபா 2007 ம் ஆண்டு 25 நாட்களும் சிறப்பு பதிவிட்டிருந்தார். அதனை பார்வையிட......!

ஏனோ தெரியவில்லை நல்லூர்க்கந்தனுக்கு திருவிழா என்றதும் மனது குதூகலிக்கிறது. இனி 25 நாட்களும் ஒரே கொண்டாட்டம்தான். அனைத்து மக்களும் பால் வயது என எந்த வர்க்க பேதமுமின்றி ஒன்று கூடும் ஒரு ஈழநாட்டு கலாசார நிகழ்வுதான் நல்லூர்க் கந்தனின் வருடாந்த உற்சவம். ஒரு படி மேலாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்களும் இங்கே அதிகமாக ஒன்று கூடுவார்கள்.

ஆலயச் சூழல் எங்கும் ஒரே பக்திமயமாகத்தான் இருக்கும். அப்படித்தான் ஆலய சுற்றாடலும் அமைந்து இருக்கிறது. அதிகாலை 4 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை ஆலயம் அமைந்த பகுதிகள் பெரும் அமளியாகவே இருக்கும். அங்க பிரதட்சனை, அடி அழிப்பு என அதிகாலையிலேயே பக்தர்கள் கூடிவிடுவர். காலை நேரம் மிக ரம்மியமாகவே இருக்கும். அலுவலகங்கள் செல்வோர், பாடசாலை மாணவர்கள் என எல்லோரும் காலைப் பூசையில் கலந்து கொள்வர். காரணம் அவர்களால் பகற் திருவிழாவினை கண்டு களிக்க முடியாது. ஆனால் மாலைநேரம் எல்லோரும் அங்கே கூடுவர். மனதிற்கு இதமான பொழுதில் முருகவேற் பெருமான் தன் துணைவியர் வள்ளி தெய்வயானை சமேதராக திருவீதியுலா வருகின்ற காட்சி அற்புதமாக இருக்கும்.

நல்லூர் ஆலயத்தினை எல்லோரும் ரசிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நேரத்தினை கடைப்பிடிக்கும் பாங்கு. எல்லாமே சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தேறிவிடும். இதையெல்ல்லாம் நெறிப்படுத்துபவர் ஆலயத்தின் ஆதீன்கர்த்தாவாக இருக்கின்ற மாப்பாண முதலி மரபில் வந்த சண்முகதாச மாப்பாண முதலியார் அவர்கள். அவர் மூப்படைந்தாலும் மகனின் உதவியுடன் ஆலயத்தினை திறம்பட முகாமைத்துவம் செய்து வருகிறார்.

மாலை வேளைகளில் ஆலய வீதிகளில் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கங்கள், இசைக்கச்சேரிகள் என கலை கலாசார நிகழ்வுகள் ஒரு புறம். மறுபுறம் சிறிய சிறிய பெட்டிக் கடைகள், சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், குளிர்களி (ஐஸ்கிறீம்) நிலையங்கள் என எங்கும் மக்களை கவரக்கூடிய வகையில் வணிக நிறுவனங்கள் அமைந்திருக்கும்.

இன்று காலை சரியாக பத்து மணிக்கு கொடித்தம்ப மரத்தில் வேலவனின் கொடி ஏறிவிடும். இனி 25 நாட்களும் கோலாகலமும் குதுகலமும்தான்.

கடந்த வருட திருவிழாவிற்காக கிடுகுவேலி தாங்கிய பதிவு
இங்கே....!

"பஞ்சம் படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி.."

வியாழன், 23 ஜூலை, 2009

ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

காலப்பெருவெளியின் ஓட்டத்தில் நாம் கட்டுண்டு அதனோடு அடித்துச் செல்லப்படுகிறோம். கடுகதி வாழ்க்கை. கண்டவருடன் கதைக்க முடியாத நிலை. காரணம். காலத்தின் வேகம். நேற்று நடந்தது போல் உள்ளது ஆனால் இன்று ஒரு வருடம் ஆகிவிட்டது. இரு வருடம் ஆகிவிட்டது என்றெல்லாம் புலம்புகிறோம். எல்லாமே காலம் எம்மை தன்னோடு கடத்தியதால் வந்த மாயம். ஆனாலும் அவ்வப்போது நாம் அன்றாட வாழ்வில் நடந்தவற்றை நினைவு கூறுகின்றோம். சிலவற்றை தவறவிடுகிறோம்.

எங்கே போனாலும், எதை செய்தாலும் இன்றும் பசுமரத்தாணி போல இருப்பது நமது பராய வாழ்வு தந்த பலாச்சுளை நினைவுகள் தான். தனியே இருந்து வானம் பார்த்து அல்லது இயற்கையோடு அளவளாவி நினைத்து பார்க்கின்ற போது அவை கனத்த நினைவுகளாகவும் இருக்கலாம் அல்லது கனிவான நினைவுகளாகவும் இருக்கலாம். அந்த இனிய நினைவுகளால் சிரிப்பும் வரும். சில வேளை விழியோரம் சிறு துளி எட்டியும் பார்க்கும்.

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா....?" இந்தப்பாடல் கேட்காத தமிழ்க்காது இருக்கவே முடியாது. அதுவும் ஈழத்தமிழர்களில் அநேகம்பேர் இந்தப் பாடலை கேட்காவிட்டாலும் இந்த வரிகளை சொல்லி இருப்போம். காரணம் எமது மக்களின் இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளுமே.

வரலாறு படிக்கின்ற பாடசாலைக்காலங்களில் ஒரு பாடம் இருக்கும் தென்மேற்கு நோக்கிய இராசதானி நகர்வு. அதாவது அந்தக்காலங்களில் இலங்கையில் ஆண்ட மன்னர்கள் தமது அரசாட்சியை பல்வேறு காரணங்களுக்காக தென்மேற்கு நோக்கி நகர்த்தினர். ஆக அந்தக்காலத்திலும் இடப்பெயர்வுகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஈழத்தமிழர் கண்ட இடப்பெயர்வுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

சொந்த வீடு, சேர்த்த சொத்து, காலம் காலமாக கட்டிகாத்து வந்த பல முதுசங்கள் எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை. இப்படி இடம்பெயர்ந்து மரங்கள், பாடசாலைகள், உறவினர் வீடு என சென்று இருந்தாலும் நாம் எமது வீட்டில் வசிப்பது போன்று வருமா. இன்றும் உயர்பாதுகாப்பு வலயம் என எமது தாய்நிலங்கள் அபகரிக்கப்பட , அதனை இழந்த அப்பாவி மக்கள் வெறும் குடிசைகளில் தமது வாழ்வைக் கழிக்கின்றனர். குடியிருக்கின்றனர். கேட்பார் எவரும் இல்லை. இவர்கள் செய்த பாவம்தான் என்ன? சொந்த நிலம், தமது உழைப்பு பணத்தில் கட்டிய சொந்த வீடு எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத ஏதிலி நிலை.

--------

அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படப்பாடல். நெஞ்சை நெக்குருக வைத்துவிட்டது. "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டொழிய அருள்வாயோ....." பம்பே ஜெயஸ்ரீ அவர்களின் தேனான குரல். பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் இறவனை இறைஞ்சும் குரல் மூலம் அற்புதமாக அமைந்துள்ளது. மனதைப் பிழியும் ஒரு பாடல். படத்தின் கதைக்கு இந்தப்பாடல் பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது. ஈழத்தமிழனின் துயர் சொல்லும் அருமையான பாடல். இந்தப் படைப்பை எமக்கான படைப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்!
வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ!
புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்!
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

சோறில்லை! சொட்டு மழை நீரில்லை!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்!
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே!

வேராகி, ஐம்புலனும் வேறாகி,
பொன்னுலகம் சேறாகி போகமாட்டோம்!
எம் தஞ்சை, யாம் பிறந்த பொன்தஞ்சை,
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும், சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே! வெம் புலித்தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ!
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வைரமுத்துவின் வைர வரிகள். வைரமுத்து இந்தப் பாடலை எழுதுவதற்கு அருகதை உடையவரே. ஏற்கனவே "கன்னத்தில் முத்தமிட்டால்.." படத்தில் வந்த 'விடை கொடு எங்கள் நாடே...' பாடலை ஈழத்தமிழ் இனத்தின் அவலத்திற்காக எழுதியவர். மீண்டும் அவருக்கு அரிய சந்தர்ப்பம். நான் நினைக்கிறேன் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக இந்தப்பாடல் எழுதிக் கொண்டிருந்த சமயம் ஈழத்தில் தமிழினம் சொல்லொனாத் துன்பத்தை சந்தித்துக்கொண்டிருந்தது. அந்த பாடலுக்கு மனதில் ஈழ அவலமும் சோழநாடும் கருவாக வைரமுத்து அவர்களுக்கு தோன்ற பாடல் பிறந்திருக்க வேண்டும். இப்போது கேட்கும் போதெல்லாம் இதயத்தை பிசைகிறது.

அதே 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் வருகின்ற மற்றொரு பாடல் 'தாய் தின்ற மண்ணே...' எனத்தொடங்குகிறது. வைரமுத்துவின் வைர வரிகளுக்கு குரல் விஜய் யேசுதாஸ். அருமையான இசை. விழியோரம் கசியும் நீரை தவிர்க்க முடியவில்லை.

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா........!
------------------
ஒவ்வொரு இடப்பெயர்வும் ஆறாத ரணம்தான். பெரும் வலிகளையே தந்தது.
'வைகைல ஊர் முழுக
வல்லோரும் சேர்ந்தெழுக
கைப்பிடியாய் கூட்டி வந்து
கரைசேர்த்து விட்டவளே'
என வைரமுத்து பாடி ஒருமுறை மேடையிலேயே கண்ணை கசக்கி நா தளுதளுத்தார். அவரைப்போலவே எமக்கு ஒன்றல்ல, நூறு இருக்கின்றன. எதை சொல்வது. ஏன் இப்பொழுது இறுதியாக இந்த வன்னி மக்கள் பட்ட அவலம் உலகில் வேறு எவனும் பட்டிருக்க முடியாது. அந்த மக்களின் மனோபலத்திற்கு முன்னால் நான் மண்டியிடுகிறேன். வானிலே இரண்டு மழை. ஒன்று எறிகணை மழை, இரண்டு விண்ணில் இருந்து வருண பகவானின் கண்ணீர் மழை. எல்லாம் தாங்கி இன்றும் ஏதிலிகளாக யாருமற்ற அனாதைகளாக முட்கம்பி முகாமுக்குள் வாழும் அந்த மக்களுடன் ஒப்பிடும் போது நாம் என்ன சந்தித்தோம். அந்த அவலங்களுடன் ஒப்பிடும் போது எமக்கிருந்த சொந்தப் பிரச்சினைகள் எல்லாம் சொத்தைப் பிரச்சினைகள்.


பிறந்த மனிதன் வாழும், ஏன் உண்ணும் உரிமை கூட மறுக்கப்பட்ட ஒரு கேவலமான இனமாக இந்த தமிழினம் இருக்கிறது. இவர்களின் இதயம் எவ்வாறு இருக்கும். எத்தனை கொடுமைகளை சந்தித்து இருக்கிறார்கள். எத்தனை வலிகளை தாங்கி கொண்டு இருக்கிறார்கள். சென்னை மரீனா கடற்கரையில் அண்ணா சமாதியிலே ஒரு வரி உண்டு. "எதையும் தாங்கும் இதயம் இங்கே அமைதியாக உறங்குகிறது". அண்ணாவை தெய்வமாக மதிப்பவர்கள் என்னை மன்னியுங்கள். ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் தன்னுடைய இதயத்தில் தாங்கியதை விடவா அண்ணா தாங்கிவிட்டார்.

முகாமில் வாழும் இல்லை இல்லை வாடும் மக்களே உங்களுக்கு முன்னால் நாம் கால் தூசிக்கு சமன். உங்கள் முகங்களை நேருக்கு நேர் பார்க்கும் அருகதை அற்றவர் நாம். விடியாத இரவென்று வானில் ஏதும் உண்டா என்ற அதே வைரமுத்துவின் வரிதான் மீண்டும் நினைவில் நிழலாடுகிறது.