புதன், 31 டிசம்பர், 2008

ஈழத்துச் சிதம்பரமும் திருவாதிரை உற்சவமும்

அலைகடல் சூழும் ஈழமணித் திருநாட்டின் தலை எனத்திகழ்வது யாழ்ப்பானம். அதற்கு வடமேற்கே 20கி.மீ தொலைவில் ஒரு தீவு உள்ளது. இங்குதான் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகிய "ஈழத்துச் சிதம்பரம்" உள்ளது. இந்த ஊரின் புகழுக்கு மேலும் வலுச்சேர்ப்பது அது தன்னகத்தே கொண்டுள்ள "கசூரினா பீச்". ஆமாம் அதுதான் காரைநகர்.

சைவம் தழைத்தோங்கும் இவ்வூரில் இருந்து திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப இவ்வூர் மக்கள் எங்கும் வியாபித்திருக்கிறார்கள். இதனால்தானன்றோ "காகம் பறவாத இடமும் இல்லை. காரைதீவான் போகாத இடமும் இல்லை" என செல்லமாக(?) சொல்வார்கள். கற்றோரும் சான்றோரும் வாழும் இவ்வூரின் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று திருவாதிரை உற்சவம் ஆரம்பமாகிறது.

இந்தியாவின் சிதம்பரத்தில் எவ்வாறு திருவாதிரை உற்சவம் நடைபெறுமோ அதே போன்று இங்கும் நடைபெறுவதால இந்த ஆலயம் ஈழத்துச் சிதம்பரம் என வழங்கலாயிற்று. கனகசபையில் வீற்றிருந்து நல்லாட்சி புரிகின்ற சிவகாமசுந்தரி சமேத சிதம்பர நடராஜப் பெருமான் இங்கும் அருளாட்சி புரிகிறார்.

அப்பர் பெருமானின் "ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொண்டது..." என்பதற்கேற்ப நடராஜப்பெருமானின் திருநடனம் புரிகின்ற அந்த திருமூர்த்தம் மிக அற்புதமானது. பலமுறை இங்கு விஜயம் மேற்கொண்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் "தான் இங்குள்ளது போன்ற அற்புதமான நடராஜர் திருவுருவத்தை எங்கும் கானவில்லை" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதே போன்ற கருத்தை தமிழகத்தின் மு. பாஸ்கரத்தொண்டைமானும் தெரிவித்திருந்தார்கள்.

மூல மூர்த்திகளாக சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானும், பூரணை புட்கலாம்பிகா சமேத ஆண்டி கேணி ஐயனாரும் இருக்கிறார்கள். ஈழத்தில் இன்றும் ஆதீனகர்த்தாக்கள் இருந்து நிர்வகிக்கின்ற ஒரு சில ஆலயங்களுல் இதுவும் ஒன்று. இவர்கள் ஆ.அம்பலவிமுருகன் மற்றும் மு.சுந்தரலிங்கம். இரண்டு மூலமூர்த்திகள். இரண்டு இராஜ கோபுரங்கள். இரண்டு ஆதீனகர்த்தாக்கள். இரண்டு கொடியேற்றத்துடன் கூடிய மகோற்சவங்கள் என ஆலயத்திற்கும் இரண்டுக்கு இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. இருந்தாலும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவம்தான் இங்கு பெரும் புகழ் கொண்டது. உலகத்தின் பல பாகத்தில் இருந்தும் காரைநகர் மக்கள் அந்த திருநடனத்தை கண்ணாரக் கண்டு களிக்க மார்கழி மாதம் அங்கு ஆஜராகி விடுவார்கள். உலக நாடுகளில் இருந்து வருகிறார்கள் எனும் போது ஈழத்தில் இருந்து....சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஆலயத்தில் பஞ்சரத பவனி வருடத்தில் இரண்டு தடவைகள் நடைபெறும். ஈழத்தில் பஞ்சரத பவனி ஒரு சில ஆலயங்களில் மாத்திரமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மார்கழி மாத பஞ்சரத பவனி மிக அற்புதமாக இருக்கும். காரணம் சில நேரங்களில் 1 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் தேங்கி நிற்கும். அதனூடாக தேர் பவனி வரும். அதேவேளை அடியவர்களின் அங்கப்பிரதட்சனையும் அடி அழிப்பும் தயக்கமின்றி நடக்கும்.

காரைநகர் சிவன் கோவிலில் திருவிழாவா? தவில் நாதஸ்வரக் கச்சேரிக்கு பஞ்சமே இல்லை. ஈழத்தின் அனைத்து பிரபல வித்துவான்களும் அங்கே நிற்பார்கள். இது மட்டுமா தமிழகத்தின் புகழ்பூத்த வித்துவான்களை அழைத்து சாமகாணப்பிரியனுக்கு நாதகாண மழையால் குளிர்விப்பார்கள்.


உலகப்புகழ் பெற்ற ஈழத்தின் தவில் வித்துவான் விசுவலிங்கம் தெட்சனாமூர்த்தி இந்த ஆலயத்தின் ஐயனார் வாசலில் இருந்துதான் சிறு வயதில் தவில் கற்க ஆரம்பித்தார். புகழின் உச்சிக்கு சென்றாலும் ஆண்டி கேணி ஐயனாரை மறக்காமல் அவர் அடிக்கடி ஆலயம் வருவார். இந்த தெட்சனாமூர்த்தி சிறுபராயத்தில் ஒருதடவை ஆலய தீர்த்தக்கேணிக்குள் (சித்தாமிர்த வாவி)மூழ்கிவிட்டார். உடனே ஆதினகர்த்த பரம்பரையை சேர்ந்த ஒருவர் குளத்தில் குதித்து அவரைக்காப்பாற்றினார். இதை உலகநாடுகளுக்கு கச்சேரிக்கு சென்ற திரும்பிய ஒவ்வொரு தடவையும் உடன் அவரை சந்தித்து கரம் கூப்பி வணங்கி மகிழ்வாராம். இதற்காகத்தான் மகன் உதயசங்கர் எப்பொழுதும் சிவன் கோவிலில் திருவிழா என்றால் மறுக்காமல் வந்து வாசிப்பார்.

தமிழகத்தின் பிரபல தவில் வித்துவான்கள் வலையப்பட்டி சுப்பிரமணியம், அரித்துவரமங்கலம் பழனிவேல், கலியமூர்த்தி தற்போது பிரபலமாக இருக்கும் திருப்புன்கூர் முத்துக்குமாரசுவாமி, வாசுதேவன் ஆகியோரும் நாதஸ்வர வித்துவான்களாகிய நாமகிரிப்பேட்டை கணேசன், காருக்குறிச்சி அருணாசலம், ராஜரத்தினம்பிள்ளை, மாம்பழம் சிவா சகோதரர்கள் என பலரும் இந்த ஆலயத்தில் நாதகாணமழை பொழிந்திருக்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார்கள் எல்லோரும் முன்னர் குளக்கோட்ட மன்னனால் திருவுத்தரகோச மங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட அந்தணர் பரம்பரையே. இதன் படி இப்போது இருப்பது 27வது பரம்பரையை சேர்ந்த சிவஸ்ரீ.வி.ஈஸ்வரக்குருக்கள் அவர்கள்.

இந்த ஆலயத்தில் தேவார திருவாசகம் பாடுபவர் ஆலயத்தின் ஆதீனகர்த்தாக்களில் ஒருவராகிய திரு.மு.சுந்தரலிங்கம் அவர்கள். அவர் தனக்கேயுரித்தான பாணியில் மிக அற்புதமாக பாடுவார். இதைக்கேட்கவே அடியவர் கூட்டம் அலைமோதும். இது கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் அற்புதமாக இருக்கும்.

அவர் பாடிய திருவெம்பாவை பாடலில் இருந்து ஒரு பாடல்......!



ஊர் இப்பொழுதே சுத்தமாக்கப்பட்டு மிக நேர்த்தியாக அழகாக இருக்கும். இனி பத்து நாளும் எல்லோரும் சைவம்தான். ஈழத்துச் சிதம்பரம் நோக்கி விசேட போக்குவரத்து சேவை நடைபெறும். இந்த பத்து நாட்களும் ஆலய மாணிக்கவாசகர் மடாலயத்தில் குறைவின்றி போதுமென திருப்திப்படும் அளவிற்கு அன்னதானம் வழங்கப்படும். இது பிறவூரில் இருந்து வரும் அடியவர்களுக்கு சௌகரியமாக இருக்கும். இப்போது முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டவருமான இந்த காரை மண் பெற்றெடுத்த மைந்தன் தியாகராஜா மகேஸ்வரன் கோவிலுக்கு என கட்டிய மண்டபத்திலும் மகேஸ்வரனின் செலவில் அன்னதானம் வழங்கப்படும். (இன்றைய தினத்திலேதான் கடந்த வருடம் கொழும்பு பொன்னம்பலவானேச்சரம் ஆலயத்தில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது இந்த இடத்தில் ஈண்டு குறிப்பிடத்தக்கது.)

இது தவிர இந்த உற்சவத்தை முன்னிட்டு காரைநகர் மணிவாசகர் சபை அந்த ஊர் மாணவர்களிடையே சமய அறிவை வளர்க்கும் நோக்குடன் பல் போட்டிகளை நடாத்தும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் கடைசி மூன்று நாள் நடக்கும் மணிவாசகர் விழாவில் வழங்கப்படும். இந்த மணிவாசகர் விழாவில் ஈழ அறிஞர்கள் மட்டுமல்ல தமிழக அறிஞர்களும் கலந்து கொண்டு சமய, தமிழ் அறிவை போதித்திருக்கிறார்கள்.

இம்முறையும் திருவிழா களைகட்டும் என எதிர்பார்க்கிறேன். இம்முறை ஆலயத்தில் நிறைய புனருத்தாரணம் நடைபெற்றுள்ளது. தில்லைக்கூத்தன் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.

"நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!!"

செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஆடிப்போனது ஆஸ்திரேலியா...!

ஆஸ்திரேலியாதான் உலகின் முதல்தர அணி என்ற மகுடம் மெதுவாக சரிந்து கொண்டிருக்கிறது. இப்போது தென்னாபிரிக்காவின் கை ஓங்கியே வருகிறது.

தென்னாபிரிக்காவிற்கு இமாலய தொடர் வெற்றி. மெல்பேர்ன் மைதானத்தில் இன்றைய வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு பேரிடியாக மாறி உள்ளது. பெரும் தலைகள் உருளும் அபாயம் தோன்றியுள்ளது. குறிப்பாக மத்யூ ஹைடன். இவரின் கடைசி 15 இன்னிங்ஸ்சில் வெறும் 313 ஓட்டங்களே பெற்றார். இது ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்க்க முடியாத பெறுதி. இப்பொழுதே விமரிசனங்கள் பலவாறாக எழத்தொடங்கிவிட்டன. இப்போது ஹைடன் தலைவிதி தேர்வாளர்களின் கைகளில். வயதும் 37ஐத் தாண்டி விட்டது. பார்ப்போம்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்சில் சற்று பலமாக இருப்பதாகவே பட்டது. பொண்டிங் பெற்ற வேகமான சதம் (101), கிளார்க்(88) மற்றும் கட்டிச்(54) பெற்ற அரைச்சதங்கள் 394 என்ற ஓட்டங்கள் பெற உதவின. டேல் ஸ்ரைன் தன் பங்கிற்கு 5 விக்கட்டுக்களை சாய்த்தார். தென்னாபிரிக்க துடுப்பாட்டத்தில் சொதப்பியது. கிறீம் ஸ்மித் பெற்ற 62 ஓட்டங்கள் தவிர மற்றவர்கள் சோபிக்கத்தவறினர். 184-7 என்ற ஒரு மோசமான நிலையில் இருந்தனர். களத்தில் இருந்த போல் டும்னி பின்னால் வந்த வீரர்களை தன்னோடு சேர்த்து அனாசயமாக விளையாடினார். ஆஸ்திரேலியா பந்து வீச்சுகளை துவம்சம் செய்து மெதுவாக முன்னேறினர்.


யாருமே எதிர்பார்க்க முடியாத இணைப்பாட்டம் ஒன்றினை டும்னியும் டேல் ஸ்ரைனும் ஏற்படுத்தி ஆஸ்திரேலியாவிற்கு தலையிடி கொடுத்தனர். இருவரும் தம்மிடையே 180 ஓட்டங்களை பகிர்ந்தனர். டும்னி தன்னுடைய கன்னி சதத்தைப் பெற்றார். ஸ்ரைனும் தன்னுடைய கன்னி அரைச்சதத்தைப் பெற்றார். ஒரு ஆஸ்திரேலியர் CricInfo இணையத்தளத்தில் எழுதியிருந்தார். ஸ்ரைன் சதம் அடித்தால் தான் ஆஸ்திரேலியாவிற்கான தந்து குடியுரிமையை கைவிடப்போவதாக. அந்தளவு கடுப்பில் ஆஸ்திரேலியர் இருந்தனர். ஆனால் தூரதிஷ்டவசமாக ஸ்ரைன் சதம் பெறாமல் 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டும்னியும் 166 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா இப்போது 459 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பந்துவீச்சில் சிடில் 4, ஹோரிட்ஸ் 3. ஆஸ்திரேலியவின் இரண்டாவது இன்னிங்ஸ் முதலாவதை விட மோசமாக இருந்தது. விக்கட்டுகள் ஒரு சீரான இடைவெளிகளில் வீழ்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் முதல் இன்னிங்ஸ்சில் சதமடித்த பொண்டிங் இம்முறையும் பொறுப்பாக விளையாடினார். ஆனால் மனிதர் தன்னுடைய 38வது சதத்தை வெறும் ஒரு ஓட்டத்தால் தவறவிட்டார். இப்போ ஆஸ்திரேலியா 247 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. வெற்றி இலக்கான 183 இனை தென்னாபிரிக்கா ஒரு விக்கட்டை மட்டும் இழந்து பெற்றனர். மகத்தான வெற்றி தென்னாபிரிக்காவிற்கு. அது மட்டுமல்ல தொடரையும் கைப்பற்றிவிட்டனர்.

  • மைக்கல் ஹசி, மத்யூ ஹைடன் துடுப்பாட்ட பெறுதிகள் மிக மோசமாக உள்ளது. பந்து வீச்சில் பிரெட் லீ இடையில் காயப்பட்டு அதிக நேரம் பந்து வீசவில்லை.

  • ஆஸ்திரேலியாவில் வைத்து தென்னாபிரிக்கா பெற்ற முதலாவது தொடர் வெற்றி இது.

  • ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் 1991-92 பருவகாலத்தில் மேற்கிந்தியரிடம் 2-1 என தோற்ற பின்னர் ஒருதொடரை இழப்பது இதுவே 17வருடத்தின் பின் முதல் தடவை.
  • கடைசியாக விளையாடிய 10 தொடர்களில் தென்னாபிரிக்கா இன்னமும் ஒரு தொடரை தன்னும் தோற்கவில்லை.

  • இந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் ஸ்மித் 15 போட்டிகளில் 1656 ஓட்டங்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். பந்து வீச்சில் டேல் ஸ்ரைன் 13 போட்டிகளில் 74 விக்கட்டுக்கள் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியர் காலம் அஸ்தமித்து கொண்டு வருகிறதா என எண்ணத் தோன்றுகிறது. தோல்வியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா அண்மைக்காலமாக தடுமாறியே வருகிறது.

தென்னாபிரிக்காவும் இந்தியாவும் பெரும் எழுச்சி கண்டுள்ளன. அடுத்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் தொடரின் எல்லாப் போட்டிகளையும் வென்ற White Wash வெற்றி. இது ஆஸ்திரேலியாவின் முதலாம் ஸ்தானத்தை தகர்க்கலாம். அடுத்த போட்டி சிட்னி மைதானத்தில் புதுவருடத்தில் ஜனவரி 3. இந்த வருடம் ஆஸ்திரேலியர்களுக்கு பெரும் சோதனை வருடம். இந்தையாவிடம் தொடர் தோல்வி. இப்போ தென்னாபிரிக்காவிடாம். மீண்டும் ஆஸ்திரேலியா துளிர்க்குமா? அல்லது வாடிவிடுமா?

வெள்ளி, 26 டிசம்பர், 2008

ஆழிப்பேரலை தந்த ஆறாத்துயர்.....!















ஆழிப்பேரலை அடித்து இன்றுடன் 4 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும் அது தந்த வடுக்களும் துயரங்களும் இன்னமும் ஆறாமல் மனங்களில் உள்ளது. மீள் கட்டுமானம் இன்றியும் எமது மக்கள் இன்னும் சொல்லொனாத்துயரத்துள். அதன் நினைவாக இந்தப்பதிவு.

ஏய் சுனாமியே !
நின்னை நினைக்கையில்
நெஞ்சு வெடிக்குது.
அன்னை தமீழீழம்
ஆ... வென்று அலறுது.
இதற்கு முன் எப்போதும் - உனை
அறிந்திலோம்
இனிமேல் ஒருபோதும் - உனை
மறக்கிலோம்.

இந்தமண்ணில் இனவாதம்
கால் நூற்றாண்டில்
காவு கொண்டதில் பாதியை – நீ
கால் மணி நேரத்துள்
கவர்ந்து சென்றாயே!
சொத்தோடு சேர்த்து
எம்மினத்தை சுத்தமாய்
துடைத்து விட்டாய்.

ஆர்ப்பரிக்கும் கடலே!
உனைஅம்மா கடல்தாயே – என
ஆராதனைகள் செய்தோமே
இன்று
ஐயோ என அழவைத்த
அரக்கியாகி விட்டாயே!
பெற்றதுகளை, பெற்றவர்களை
பிரித்துச்சென்று – மற்றோரை
பித்தராக்கி விட்டாயே!
கட்டடங்கள், களஞ்சியங்கள்
கல்விச்சாலைகள்
கல்வீடுகள், களிமண்வீடுகள் - என
எல்லாம் கரைத்து - இன்று
கண்ணீரைத் தந்தாயே!

வந்து பார் !

பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரை - இன்று
பொலிவிழந்து போச்சு.
இதுவரையும் இனிமேலும்
நிம்மதியும் இல்லை.
நித்திரையும் இல்லை.

ஒரு புறம்
இனவாதம் எம்மை
அணுஅணுவாய் அழிக்க
இயற்கை நீயோ – எம்மை
அப்படியே முழுங்கினாயே!
பிஞ்சுகள் , காய்கள்,கனிகள் - என்று
மொத்தமாய் உண்டுவிட்டு
மிச்சமாய் மரத்தை - ஏன்
விட்டு வைத்தாய்?
வெஞ்சமராடி வெற்றிகள் பெற்றது - உனக்கு
பிடிக்கவில்லையா?

ஏ கடலே!
இத்துடன் நிறுத்து!!
இனியும் வேண்டாம் இந்த அழிவு.
அந்நியர் ஆக்கிரமிப்பால்
அழிந்து அழிந்து
நொந்து போனது எம்மினம்.
இனவாதத்துடன்
போட்டி போட்டு – இயற்கையே
நீயும் வதைக்காதே!
கடல் தாயே!
எம்மை வாழவிடு
என்றும் உமைப் பணிவோம்!

(2004 ம் ஆண்டின் சுனாமிக்கு பின்னரான மீட்புப்பணியில் நின்ற பின்னர் ஏற்பட்ட தாக்கத்தில் கிறுக்கியது....)

இதில் இருக்கும் பாடல் தாயகத்தில் இருந்து மலர்ந்த ஒரு பாடல். எத்த்னை பாடல்கள் சுனாமிக்கு என வந்தாலும் இந்தப்பாடல் என் மனதை எப்போதும் பிழியும்.
பாடியவர் : வசீகரன்
பாடல் : கலைப்பருதி
இசை : இசைப்பிரியன்
Get this widget Track details eSnips Social DNA

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

அசத்தியது தென்னாபிரிக்கா.................! அச(சை)ந்தது ஆஸ்திரேலியா.................!!

இது கிரிக்கட். இறுதிப்பந்து வரை எதையும் சொல்லமுடியாதாம். உண்மைதான். இன்று ஆஸ்திரேலியாவின் 'பேர்த்' இல் உள்ள 'வகா - (WACA- Western Australia Cricket Association)மைதானத்தில் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு அபார வெற்றியை பெற்றுள்ளது. இது ஆஸ்திரேலியர்களின் டெஸ்ட் நிலையை சற்று ஆட்டம் காண செய்துள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என் இரண்டிலும் அசத்தி வந்த ஆஸ்திரேலியா இப்போதெல்லாம் சரிவுகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் ஆரம்ப துடுப்பாட்ட முதுகெலும்பாகிய மத்யூ ஹைடன் அண்மைக்காலமாக சொதப்பியே வருகிறார். இது ஆஸ்திரேலியர்களுக்கு பெரிய தலையிடி. அவர் நல்ல நிலைக்கு (போர்ம்) திரும்பாதது கவலையே. அதேபோல மைக்கல் ஹசி யினதும் பொண்டிங்கினதும் பெறுபேறு இந்தப்போட்டியில் சோபிக்கவில்லை. இது அவர்களை துடுப்பாட்டத்தில் பெரிதும் சரிவை கொடுத்தது. ஹைடன் (12,4) , பொண்டிங் (0,32) , ஹசி (0,8). ஆனாலும் இரண்டு இன்னிங்ஸ்சிலும் பின்வரிசை வீரர்களின் பொறுப்பான(?) தடாலடி ஆட்டம் அவர்களைக் காப்பாற்றியது. குறிப்பாக விக்கட் காப்பாளர் பிராட் ஹடின் பெற்ற 46+94 மற்றும் ஜேசன் கிறேசா பெற்ற 30* + 32 என்பவை முக்கியமானது. பொதுவாக சொன்னால் ஆஸ்திரேலியர்கள் துடுப்பாட்டத்தில் பெரிதாக சாதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

முதல் இன்னிங்ஸ்சில் பந்துவீச்சில் மக்காயா என்ரினி 4விக்கட்டுக்களை சாய்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேல் ஸ்ரைன் 2 விக்கட்டுக்களை பெற்றார்.

தென்னாபிரிக்காவும் ஆஸ்திரேலியர்களுக்கு நாம சளைத்தவர்கள் அல்ல என முதல் இன்னிங்ஸ்சில் தடுமாறினர். ஆனால் அவர்கள் வலுவான நிலையில் இருந்தனர். அதாவது ஒரு நிலையில் 234-3. ஆனால் பின்னர் மிச்சல் ஜோன்சனின் வேகம் அவர்களை நிலைகுலைய வைத்தது. 281 ற்கே ஆட்டமிழந்துவிட்டனர். கலிஸ்-63, டிவில்லியேர்ஸ்-63, ஸ்மித்-48, அம்லா-47. ஜோன்சன் தனது சிறப்பு பெறுதியாக வெறும் 61 ஓட்டங்களை கொடுத்து 8 விக்கட்டுக்களை அள்ளி எடுத்தார். இப்போ ஆஸ்திரேலியா 94 ஓட்டங்கள் முன்னிலையில்.

இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் ஆஸ்திரேலியா துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. ஒரு கட்டத்தில் 162/7 என்ற மோசமான நிலையில் இருந்தனர். அப்பொழுது அவர்கள் 256 ஓட்டங்கள் மட்டும் முன்னிலையில் இருந்தனர். பின்னர் ஹடின் பின்வரிசை சகபாடிகளுடன் இணைந்து அசத்தி ஆஸ்திரேலியாவை 319 வரை உயர்த்தி வெற்றிக்கான இலக்கை 414 என நிர்ணயித்தார். பந்து வீச்சை பொறுத்தவரை எல்லோரும் தம்பங்கை சிறப்பாகவ்வே செய்தனர்.

வெற்றி இலக்கு 414. தென்னாபிரிக்கா ஒருவித நம்பிக்கையுடன் களமிறங்கியது. மக்கன்ஸி (2+10) மீண்டும் ஏமாற்ற, மீண்டும் ஸ்மித் மற்றும் அம்லா ஜோடி இணைந்து ஆஸ்திரேலியாவை மிரட்டியது. சிறப்பாக ஆடினர். பொண்டிங் ஜோகன்னர்ஸ்பேர்க் 438 ஓட்டங்களை வாழ்வில் மறக்கமாட்டார். அந்த உணர்வை மீண்டும் பெறத்தொடங்கினார் போலும். மனுஷன் களத்தில் விரல் நகங்களை கடித்து துப்பிய வண்ணமே இருந்தார் (போட்டிக்கு முன்னர் வளர்ப்பாரோ?). இந்த ஜோடி 153 ஓட்டங்களை பகிர்ந்தது. இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்னாபிரிக்கா இப்போது 179-3. இப்போது கலிசும் டிவில்லியர்ஸ்சும் தலையிடி கொடுத்தனர். இந்த ஜோடியும் அபாரமாக ஆடி வெற்றியை நோக்கி பயணித்தது. 124 ஓட்டங்களை இணைப்பாக பெற்றதும் கலிஸ் ஆட்டமிழந்தார். அப்போது நிலை 303-4. பரபரப்பான சூழலில் தனது கன்னி போட்டியில் விளையாடும் போல் டும்னி டீவில்லியர்ஸ் உடன் இணைந்து அபாரமாக ஆடி வெற்றியை எட்டினர். டிவில்லியர்ஸ் அற்புதமான சதம் பெற்றார்(106*). இவ்வேளை டும்னியோ வெற்றிக்கான ஓட்டங்களை பெற்றதோடு தனது அரை சதத்தையும் எட்டினார்(50*). வெறும் 4 விக்கட்டுக்களை மட்டும் இழந்து அவர்கள் தமது வெற்றி இலக்கான 414 இனை எட்டினர். ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் தென்னாபிரிக்கா அதிர்ச்சி வைத்தியம் பார்த்தனர். எதிர்பாராத ஆனால் அற்புதமான வெற்றி தென்னாபிரிக்காவிற்கு. இரண்டு இமாலய இலக்குகளை தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெற்று சாதனை படைத்துள்ளது. ஒன்று ஜோகன்னஸ்பேர்க்கில் பெற்ற 438. மற்றையது இன்று. ஆனால் முதலாவது ஒருநாள் போட்டியில். இரண்டாவது டெஸ்ட் போட்டியில்.

டிவில்லியர்ஸ்சின் அற்புதமான துடுப்பாட்டத்திற்கும் அவரது அபாரமான களத்தடுப்பிற்குமாக ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

* டெஸ்ட் வரலாற்றில் 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெற்ற இரண்டாவது பெரிய வெற்றி. முதலாவது மேற்கிந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 418 இனை சென்ற்.ஜோன்ஸ் அன்ரிகுவாவில் பெற்றது.

*ஸ்மித் இப்போது 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெற்ற சாராசரி ஆனது கிரிக்கட் வரலாற்றில் மூன்றாவது நல்ல பெறுதி. முதலாவது ஜெவ்ரி போய்கொட், மற்றும் சுனில் கவாஸ்கர். ஆனால் ஸ்மித் 4வது இன்னிங்ஸ்சில் 3 சதம் பெற்றுள்ளார். இந்த 3 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வென்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளும் எப்போதும் விறுவிறுப்பானவை என அண்மைக்காலப் போட்டிகள் நிரூபித்துள்ளன. அதற்கு சிகரமாக இந்தப் போட்டி அமைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்கா இப்போது 1-0 என்று முன்னிலை. ஆஸ்திரேலியா அசத்துமா? அல்லது அமிழ்ந்து போகுமா பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்தது 'பொக்சிங் டே' (டிசம்பர் 26) போட்டி மெல்பேர்னில் நடைபெறும்.


மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்......!

புதன், 17 டிசம்பர், 2008

ராகுல் ட்ராவிட்: காலம் முடிகிறதா...?


1996ம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடிய போது இரண்டு புதிய வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஒருவர் சவுரவ் கங்குலி. இன்னுமொருவர் ராகுல் ட்ராவிட். முன்னவர் வங்கதேசம் பின்னவர் கர்நாடக மாநிலம்.

இந்த இருவரும் தமக்கு தந்த பணியை செவ்வனே செய்தனர். கங்குலி ஓய்வும் பெற்றுவிட்டார். ஆனால் ட்ராவிட் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் அதேவேளை அவருக்கான ஓய்வு நேரம் நெருங்குகிறதா? அல்லது கட்டாய ஓய்விற்கு தள்ளப்படுவாரா என்ற பல கருத்துக்கள் எழுந்துள்ளது.

இந்தியாவின் துடுப்பாட்ட சுவர் (BATTING WALL) என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். நிதானமாக தொடங்குவார். பின்னர் களத்தில் இவர் நின்றால் ஓட்டம் ஏறுவது தெரியாது. அதிரடியும் இல்லை. ஆமை வேகமும் இல்லை. நிதானமாக ஓட்டங்களை குவித்து எதிரணியை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவார். இவரால் இந்தியா பெற்ற வெற்றிகள் ஏராளம். ஏன் தனித்து நின்றே வெற்றிகளைக் குவித்து இருக்கிறார். அப்துல் ஜபார் தமிழில் அழகாக சொல்வதானால் மிகச்சிறந்த மட்டையாளர்.

சிறிதுகாலமாகவே ட்ராவிட் உடைய மட்டை ஓட்டங்களை சேகரிக்க தவறுகிறது. காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. இது ட்ராவிட்டுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஏன் தேர்வாளர்களுக்கு கூட சங்கடமாகத்தான் இருக்கிறது. அற்புதமான வீரர். Class is Permanent. Form is Temporary. ட்ராவிட் இடம் எப்போதும் தரம் இருக்கிறது. ஆனால் இப்போது நேரம் இல்லை. நன்றாக ஆடக்கூடியவர். ஆனால் இப்போது முன்பு மாதிரி இல்லை. 2006 ம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கான் சுற்றுப்பயணத்தில் இருந்து இந்த பிரச்சினையை ட்ராவிட் எதிர் கொள்கிறார் என்றுதான் கூறவேண்டும். அதற்கு முன்னதாக மேற்கிந்தியாவிற்கெதிரான தொடரை வராலாற்று வெற்றியாக படைத்ததில் ட்ராவிட்டின் துடுப்பாட்டமும் தலைமைத்துவமும் காரணம்.

2006 இறுதியில் தென்னாபிரிக்கத் தொடரில் இருந்து கடைசியாக சென்னையில் நடந்த இங்கிலாந்திற்கெதிரான போட்டி வரை உள்ள தொடர்களின் பெறுபேறுகள் கொண்ட அட்டவனை கீழே உள்ளது.



மேலுள்ள அட்டவணையில் இருந்து ட்ராவிட்டின் மோசமான பெறுபேறு பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். எல்லா காலத்திலும் எந்த துடுப்பாட்ட வீரனும் சாதிக்க முடியாதுதான். லாறா, சச்சின், பொண்டிங், சங்ககார போன்றவர்களும் சொதப்பித்தான் இருக்கிறார்கள். இவர்களை நினைத்து ரசிகர்களும் கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு தொடர்களுக்கு பிறகு தேறி விடுவார்கள். இப்போது ட்ராவிட் அப்படியும் இல்லை. போர்மில் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவரின் தரமான விளையாட்டிற்காகத்தான் இவ்வளவு நாளும் அணியில் சேர்த்திருந்தார்கள். அவர் மீண்டு வருவார் மீண்டு வருவார் என்றால் ட்ராவிட் மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்.

தென்னாபிரிக்காத் தொடருக்கு முன்னர் அவரது சராசரி 58.75 இப்போது அவரைப் பொறுத்தவரைக்கும் அதளபாதாளம். முன்பு தொடக்கத்திற்குத்தான் அதிக பந்துகளை சந்திப்பார். ஆனால் போகப்போக ஓட்டங்களை குவித்து 100 பந்துக்கான ஓட்டவீதத்தை(Strike Rate)நன்றாக பேணுவார். இப்போது துடுப்பாடும் போது கூட தெரிகிறது. தற்காப்பு ஆட்டமும், பதட்டத்துடனும் கூடிய நிதானமும் கொண்டதாக உள்ளது. சில வேளைகளில் ட்ராவிட் தானா இப்படி துடுப்பெடுத்தாடுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு துடுப்பாட்ட சுவர் சரிகிறது என்று எல்லோருக்கும் கவலை.

தேர்வாளர்களின் தலைவராக இப்போது ஸ்ரீகாந்த். இவர் மனது வைத்தாலே ஒழிய, மற்றபடி இந்த துன்ப நிலை நீடித்தால் ட்ராவிட் அடுத்த தொடருக்கு தெரிவு செய்யப்படுவது சந்தேகமே. ஏனெனில் புள்ளிவிபரங்கள் எல்லாம் ட்ராவிட்டுக்கு எதிராகவே உள்ளன. வரப்போகின்ற போட்டிகள் இந்தியா, இங்கிலாந்தை விட ட்ராவிட்டுக்கு கடும் சோதனையாக இருக்கும். சென்னையில் வெற்றி பெற்றதால் வெற்றி அணியை (WINNING COMBINATION) குலைக்காமல் விளையாடுவார்கள். ஒருவேளை தோற்றிருந்தால் நிலைமை வேறுமாதிரியாக மாறி இருக்கும்.

நல்ல துடுப்பாட்ட வீரனை இந்திய அணி இழக்கிறது என்ற வருத்தம் எல்லோரிடமும் உள்ளது. அதே நேரத்தில் வெளியே நிறைய இளைய வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரோகித் சர்மா, விராத் கோழி, விஜய், பத்ரிநாத், சுரேஷ் றைனா என நிறையவீரர்கள். ட்ராவிட் போல இவர்கள் எல்லாம் வருவார்களா? ட்ராவிட் இடத்தை நிரப்பமுடியுமா? என்றால் வாய்ப்பு கொடுத்துப்பார்த்தால்தான் தெரியும். அதேநேரத்தில் டோனியும் இளம் அணி இளம் அணி என அடம்பிடிப்பதால் தேர்வாளர்களும் அவர் பின்னால் நிறக நேரிடுகிறது. காரணம் இந்தியாவிற்கு எதிர்பாராமல் நிறைய வெற்றிகளைத் தேடித்தந்து விட்டார்

ஒருநாள் அணி. கதையே வேண்டாம் கனவில கூட ட்ராவிட் அந்த இடத்தை நினைக்க முடியாத அளவிற்கு துடுப்பாட்ட வரிசை உள்ளது. இப்போது பந்து ட்ராவிட்டின் துடுப்பை நோக்கி வீசப்படுகிறது. லாவகமாக தட்டிவிட்டு நான்கு ஓட்டத்தைப் பெற்று அணிக்குள் இருப்பாரா? அல்லது கிளீன் போல்ட் ஆகி வாழ்வை முடித்துக்கொள்வாரா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

(மீண்டும் வருவேன் என்கிறாரா? அல்லது போகிறேன் என்கிறாரா?)
மீண்டு வரவேண்டும் அதுதான் எல்லோர் விருப்பமும். மீண்டும் வரும் நேரத்தில் அவரைப் பற்றி மீண்டும் எழுதவேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது.

திங்கள், 15 டிசம்பர், 2008

இந்தியாவின் இமாலய வெற்றி!

இப்போது ஆஸ்திரேலியர்களின் பேச்சு கிரிக்கட்டில் அடிபடுவது குறைந்து கொண்டு வருகிறது. காரணம் இந்தியாவின் அசுர எழுச்சி. 'அட நம்மாளா இப்படி பொழந்து கட்டுறான்' என சில இந்திய ரசிகரே வியக்கும் அளவிற்கு இருக்கிறது. மகிழ்ச்சிதானே. தொடரட்டும் வெற்றிக் குவிப்புகள்.

இங்கிலாந்தின் வெற்றிக் கனவை சேவாக் அடித்து நொருக்கி ஆட்டம் காணவைத்தார். பின்னர் சச்சினும் யுவராஜ் சிங்கும் இணைந்து இந்தா அந்தா இங்கிலாந்து வெல்லுது என்ற போட்டியை இலகுவாக தம்பக்கம் திருப்பி வெற்றிக்கனியை சுவைத்தனர்.

டெஸ்ட் போட்டி வரலாற்றில் மகத்தான வெற்றி. 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெறப்பட்ட நான்காவது பெரிய வெற்றி. இரண்டாவதும் இந்தியாவிடம்தான் உள்ளது.

உண்மையில் சேவாக்கின் அதிரடிதான் போட்டியின் போக்கையே மாற்றியது. 1999ல் இப்படித்தான் பாகிஸ்தனிற்கு எதிராக அதுவுமிதே சென்னையில் நடந்த போட்டியில் சச்சின் இறுதி நேரத்தில் காலை வார இந்தியாவிற்கு ஒரு பரிதாப தோல்வி நிகழ்ந்தது. 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த இந்தியா ஆரம்பத்தில் தடுமாறி பின்னர் சச்சின் மொங்கியா இணை மூலம் வெற்றியை எட்டும் நேரத்தில் 17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 7வது விக்கட்டாக சச்சின் ஆட்டமிழந்தார். பின்னர் என்ன 4 ஓட்டங்களுக்குள் கதை முடிந்துவிட்டது.

இன்றும் வருணனையாளர்கள் அதை திரும்ப திரும்ப சொல்லிக்காட்டினார்கள். ஆனால் சச்சின் இம்முறை தேவையற்ற எந்த விதமான அடித்தெரிவுகளுக்கும் (Shot Selection) ற்கும் போகவில்லை. மிக மிக நிதனாமாக, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் போட்டியை வைத்திருந்தார். Class is Permanent. Form is Temporary. என்பார்கள் ஆனால் இரண்டும் கைவரப்பெற்றவர் சச்சின். இதை இன்று எல்லோரும் அவதானித்திருப்பார்கள். இதே வாசகத்திற்கு ராவிட்டும் பொருத்தம்தான். இப்போது அவரிற்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனிதர் இவ்வளவு மோசமாக ஆடுகிறாரே. எல்லோருக்கும் இது மிகப்பெரிய கவலை. துடுப்பாட்ட சுவர் இடிந்து விழுகிறதா? அல்லது விழுந்து விட்டதா?

இங்கிலாந்து ஏன் தோற்க வேண்டும்? என்ன தவறு செய்தார்கள்? இதை விட எவ்வாறு நன்றாக விளையாட முடியும்? பிளிண்டொவ் நிறையவே மிரட்டுகிறார். பந்துடன் ஜாலங்கள் காட்டுகிறார். இந்தியர்கள் அவரை மதித்தே ஆடினர். ஆனால் அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இன்னமும் கொஞ்சம் வேகமாக விளையாடி ஓட்டங்களை சேகரித்திருக்கலாம்.

மும்பை பயங்கரத்திற்கு பிறகும் இங்கிலாந்து இங்கே வந்து விளையாடி இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பாராட்டு உண்டு.

யுவராஜ் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தப் போட்டியில் வென்றதால் இப்போதைக்கு ராவிட்டின் தலை உருளாது. மீண்டும் இதே அணி மொகாலியில் விளையாடும். ராவிட் அந்தப்போட்டியை தனக்கு சாதகமாக்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நிறைய சாதனைகள் நிறைந்த போட்டியாக இது அமைந்துவிட்டது. இங்கிலாந்து அணியிலும் பெரிதாக மாற்றம் இருக்காது. ஓவே ஷா வின் இடத்தில் அமர்ந்த போல் கொலிங்வூட் தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். எனவே ஷா இப்போதைக்கு வெளியில் இருந்து போட்டியை கண்டுகளிக்க வேண்டியதுதான். கிறீம் சுவானும் நன்றாக கவர்ந்திருக்கிறார். அண்டர்சன் அல்லது ஹார்மிசனுக்கு பதிலாக ஸ்ருவர்ட் புரோட் இற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் ஒரு கிரிக்கட் பதிவில்........!

செவ்வாய், 2 டிசம்பர், 2008

எமது வாழ்வின் பொற்காலம்....!

பொதுவாகவே தமிழர் வாழ்வை இனப்போராட்டம் வெகுவாகவே பாதித்துள்ளது. அவர்கள் இந்த பேரினவாதிகளால் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காது. இருந்த போதும் அவர்கள் விழ விழ எழும் மனவலிமை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த போராட்ட காலங்களில் எல்லாம் மக்கள் தமது கவனத்தையெல்லாம் ஆண்மீகத்திலும், உள்ளூர் விளையாட்டுக்களிலும் செலுத்தினர். குறிப்பாக 1995ம் ஆண்டு அந்த பாரிய இடப்பெயர்வின் முன்னரான காலத்தின் பதிவுகளை மீட்டலாம் என நினைத்தேன்.

யாழ்ப்பாணம் தனித்து விடப்பட்ட மாதிரியொரு உள்ளுணர்வு. அந்த காலங்களில் நடைபெறும் கிரிக்கட் போட்டிகள், உதைபந்தாட்டப் போட்டிகள், கரப்பந்தாட்டப் போட்டிகள், மாட்டுவண்டிச்சவாரி என்பன மக்களின் மனதிற்கு ஒரு ஆறுதலை தந்து யுத்த வடுக்களை ஓரளவேனும் மறக்கச் செய்தது. இப்பதிவில் கிரிக்கட் போட்டிகள் பற்றிய நினைவுகளை வருடுவோம்.

அன்றைய காலங்களில் நிறைய போட்டிகள் நடைபெற்றன. நிறைய தரமான வீரர்கள் இருந்தார்கள். தரமான ஆட்டங்களை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அவையெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது. இதுவும் ஒரு திட்டமிட்ட அழிப்பா என புரியவில்லை. அப்போதைய துடுப்பாட்ட போட்டிகளில் சில அணி வீரர்கள் காற்காப்பு (Pads)களில் கயிறு அல்லது துணி கட்டியே துடுப்பெடுத்தாடுவார்கள். இது அப்போதைய வசதியின்மையை காட்டியது. சில வேளைகளில் ஆட்டமிழந்த வீரர் அரங்கு வந்து தனது காட்காப்பு,கையுறை,துடுப்பு என்பவற்றை கொடுத்தால்தான் புதிய துடுப்பாட்டவீரர் உள்ளே நுழைய முடியும். அப்படியொரு சாபக்கேடு இருந்ததை போட்டிகளை நன்கு கவனித்தவர்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஒரு வீரரே தனக்கு தேவையான எல்லா உபகரணங்களையும் வாங்கக்கூடிய வசதி இருந்தும் விளையாட்டின் தரம் முன்பை விட அதழபாதாளத்திற்குள் போய் விழுந்து விட்டது. ஏன் என்பதை சமபந்தப்பட்டவர்கள் ஆராய வேண்டும். இதற்கு ஒரு சான்று யாழ்ப்பாணத்தின் பிரபல தேசிய பாடசாலை 19வயதிற்குட்பட்டவர் அணிக்கு விளையாடுவதற்கு வீரர்களை தேடி எடுக்க வேண்டிய நிலை. அதிலும் நன்றாக விளையாடக் கூடியவர்கள் அணியை திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதனால் பாடசாலையின் விளையாட்டு முதல்வர்(Prefect of Games- POG) வீரர்களை வெருட்டுவார் "நீ வந்து விளையாடினால்தான் உன்னை க.பொ.த(உ/த) [A/L Exam] பரீட்சை எழுத விடுவோம்." இப்படிதான் அந்த ஆண்டில் அணிக்கு வீரர்கள் தெரிவானார்கள். சிலமாணவர்கள் சிந்திப்பதுண்டு எமது ஒரே ஒரு சொத்து கல்வி. அதிலும் க.பொ.த(உ/த) வாழ்வின் ஒரு மைல்கல். அதை தவறவிட்டால் தமிழனை பொறுத்த வரையில் எல்லாவற்றையும் தவறவிட்ட உணர்வுதான் மிஞ்சும். அப்படிப்பார்க்கின்ற போது அவர்கள் சிந்தனை வாஸ்தவம்தான். ஆனால் 95ற்கு முற்பட்ட காலங்களில் எல்லாம் இவ்வாறில்லை. வீரர்கள் முண்டியடித்துக் கொள்வார்கள். திறமை இருந்தும் வாய்ப்புக் கிடைக்காமல் இருப்பார்கள். இதனால்தான் அன்றைய காலங்களில் ஒரே அணி தனது பெயருடன் 'A' அணி, 'B' அணி என்ற பெயருடன் போட்டிகளில் பங்குபற்றும்.

ஒரு வருடத்தில் நிறைய சுற்றுப்போட்டிகள் நடைபெறும். வருட தொடக்கத்தில் கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் நடாத்தும் விக்ரம்-ராஜன்-கங்கு('கங்கு' நினைவுப் பெயர் 2000ற்கு பின் இணைக்கப்பட்டது) ஞாபகார்த்த சுற்றுப்போட்டி இடம்பெறும். தொடர்ந்து கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் நடாத்தும் KCCC வெற்றிக்கேடயம், ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சுற்றுப்போட்டி, சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் டொனால்ட்கணேஷகுமார் ஞாபகார்த்த சுற்றுப்போட்டி, சில வேளைகளில் சில கழகங்கள் நடாத்தும் சுற்றுப்போட்டிகள் என கிரிக்கட் போட்டிகள் களைகட்டும். இதில் டொனால்ட்கணேஷகுமார் ஞாபகார்த்த சுற்றுப்போட்டி மட்டுமே 50 ஓவர்களை கொண்டதாக அமைந்தது. ஏனையவை எல்லாம் 30 ஓவர்களை கொண்ட போட்டிகள். குறிப்பாக யாழ்.இந்துக் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போது ரசிகர்களின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் நகரின் மத்தியில் இருப்பதால் பல்வேறு தேவைகளுக்கு வருபவர்கள் கூட சற்று நேரம் நின்று போட்டியை கண்டு களித்து ஓரளவு ஆறுதல் அடைவார்கள்.

போட்டிகள் எல்லாமே வார இறுதி நாடகளில் நடைபெறுவதால் மாணவர்களின் வரவும் அதிகமாக இருக்கும். தனியார் கல்வி நிலையங்களில் போட்டி நடைபெறும் போது வரவு குறைவாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக எடிசன் அக்கடமி, மணி கல்வி நிறுவனம், விக்னா கல்வி நிறுவனம், என எல்லாம் சற்று வெறிச்சோடியே இருக்கும். ஒரு சில மாணவர்கள் மட்டும் செல்வார்கள். ஆசிரியர்கள் சில வேளைகளில் தங்கள் பலத்தை காட்ட அன்றைய தினம் அதிகமாக கற்பிப்பார்கள். அன்றைய வகுப்பு குறிப்பு(Notes) பின்னர் எடுக்கலாம். ஆனால் போட்டியில் அடிக்கும் 'சிக்ஸர்' பிறகு காணமுடியுமா என்ன?மைதானத்தினை சுற்றி இருக்கும் மலைவேம்புகளுக்கு கீழ், வீட்டு மதில்களின் மேல், கஸ்தூரியார் வீதியில் அமைந்த அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் மேல், என ரசிகர்களின் இருப்பிடங்கள் பார்க்க அலாதியானது. குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட ரசிகர்களின் அளவுதான் அதிகமாக இருக்கும். அவர்களின் 'சார'க்கட்டும் அவர்களின் நட்புவலைகளும் பார்க்க ஒரு பரவசத்தை தரும். ஒவ்வொருவரும் தமக்கென்று ஒரு அணியை தம்முடைய அணியாக வரித்துக் கொள்வார்கள். பொதுவாக யாழ்.மாவட்ட அணிகள் பாடசாலையை மையமாக கொண்டே இருக்கும். அந்தந்த பாடசாலைகளின் பழைய மாணவர்களே அந்த அணிகளில் அங்கம் வகிப்பார்கள். எனவே மாணவர்களின் ஆதரவு தமது பாடசாலையை பின்புலமாக கொண்ட அணிக்கே இருக்கும். எனவே மாணவர் அல்லாத ரசிகர்கள்தான் முக்கியமாக இருந்தனர்.

அங்கே போட்டிகள் நடைபெறும் போது மணியண்ணை 'காரம்' சுண்டல் (கரம் சுண்டல்) மற்றும் கிளிச்சொண்டு மாங்காய் (வாய் ஊறுகிறதா? அதுதான் மாங்காய்) விற்பார். அவரது தள்ளுவண்டியில் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் கிரிக்கட் போட்டி நடைபெறுவது பொன்ற ஒரு படம் வரையப்பட்டிருக்கும். அவர் விற்கும் அந்த மாங்காய் எல்லாப்பக்கத்திலும் சிறு கீறுகளாக வெட்டி அதற்கு உப்பும் தூளும் கலந்த கலவையை கொட்டி தின்னும் போது நாம் ஏதோ இவ்வுலகில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறோம் என்றதொரு மாய உணர்வு. அப்போதெல்லாம் இதுதான் எமக்கு உலகமாக இருந்தது. என்ன செய்வது எமக்கு அந்த நேரங்களில் எதையும் சிந்திக்கும் ஆற்றல் இருக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீரரை பிடிக்கும். சில வீராகளின் அதிரடி பிடிக்கும். சில வீரர்களின் துல்லியமான பந்து வீச்சு பிடிக்கும்.


பொதுவாக அந்தக்கால கட்டத்தில் ஷப்றா, ஜொனியன்ஸ், சென்றலைட்ஸ், பல்கலைக்கழக அணி, ஜொலிஸ்ரார், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி (KCCC) , மானிப்பாய் பரிஷ், பற்றீசியன்ஸ், ஸ்ரான்லி, தெல்லிப்பளை கிறாஸ்கொப்பர்ஸ், மல்லாகம் RDS , வட்டுக்கோட்டை ஒல்ட்கோல்ட்ஸ், மேலும் சில அணிகள் சில சுற்றுப்போட்டிகளுக்காக மட்டும் களம் இறங்கி விளையாடும். ஒவ்வொரு அணியிலும் ஒரு சில பிரபலம் வாய்ந்த வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இப்பொழுது எங்கு இருக்கிறார்களோ தெரியாது. சில வேளைகளில் அவர்கள் கூட இதனை வாசிக்கலாம். அந்த வீரர்கள் எல்லாம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்கள்தான். இவர்களுக்கென்றே சில ரசிகர்கள் வட்டம் இருக்கும். பொதுவாக 40 வயதை தாண்டிய ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்கமுடியாதது. வீரர்கள் ஆட்டமிழந்தால் அவர்களின் பிரதிபலிப்புகள் சுவாரசியமாக இருக்கும். அவர்கள் உச்சு கொட்டுவதும், அவர்களின் ஏமாற்றங்களும் முகத்தில் தெரியும்.


அந்தக்காலத்தில் விளையாடி ரசிகர்களின் இதயம் வென்ற சில பிரபலங்கள் இவை. 1991ம் ஆண்டிற்கு பின்னராக இருந்தவர்களில் எனது ஞாபகத்தில் வந்தவர்கள். சில பிரபலங்கள் நிஜமாகவே ஞாபகங்களுக்கு அப்பால் சென்று விட்டார்கள்.
ஜொனியன்ஸ் அணியில் அப்போது சூரியகுமார்,பிரஷாந்தன், காண்டீபன்,பரிசித்து,நரேஷ், அகிலன்,சிவசுதன், (நரேஷ், அகிலன்,சிவசுதன் இவர்கள் பல்கலைக்கழக அணியிலும் அங்கம் வகித்தவர்கள்) இன்னும் பலர் எனது ஞாபகங்களுக்கு எட்டாமல் உள்ளனர். (தெரிவித்தால் அதனை நன்றியுடன் இணைத்துக் கொள்வேன்).
நினைவுகள் வருடப்படும்......................

வியாழன், 27 நவம்பர், 2008

கண்ணுபடப்போகுதையா....!


தோனி இந்தியாவின் இப்போதைக்கு கிடைத்திருக்கும் ஒரு புதையல். தொட்டதெல்லாம் துலங்குவது போல, கிரிக்கட்டில் வெற்றிகளாக குவிக்கிறார். எங்கேயோ இருந்த இந்தியா, இன்று உச்சானிக்கொம்பில். இப்ப வையுங்கடா உலகக்கோப்பையை நாம ஜெயித்து காட்டுறோம் என்ற நிலை.


பீட்டர்சனால் இனி என்னதான் செய்ய முடியும் என்ற நிலை. இந்த தொடரில் எவராலும் எதையும் செய்ய முடியாது என்று இந்தியா நிரூபித்துள்ளது. துடுப்பாட்டமா அது 8ம் இலக்கம் வரைஇ நீளுகிறது. களத்தடுப்பா பாய்ஞ்சு பாய்ஞ்சு ஜமாய்க்கிறார்கள். பந்துவீச்சா சொதப்பியவர்கள் எல்லாம் இப்போ துல்லியம். யுவராஜ் கூட அசத்துறார்.


போங்கோடா, உங்களோட விளையாட முடியா நம்மால என இங்கிலாந்து வெளியேறினாலும் ஆச்சரியப்பட இல்லை. பிரமாதம். ஆனால் இது தொடர்ந்தும் நீடிக்க வேண்டும்.


20-20 உலகக்கிண்ணம், ஆஸ்திரேலியா விபி கிண்ணம், பாகிஸ்தான் தொடர்,இலங்கைத் தொடர், என எல்லாம் வெற்றிகளே! இடையில் ஆசியக்கிண்ணம் தவிர.


நல்ல முகமைத்துவம். களத்தடுப்புக்கு பாயும்புலி ரொபின் சிங், பந்துவீச்சுக்கு Slow Ball Specialist வெங்கடேஷ் பிரசாத், பயிற்சியாளர் கரி கிர்ஸ்டன் என எல்லோரும் ஆலோசனைகளை மைதானத்துக்கு வெளியே வழங்க உள்ளே வீரர்கள் பொழந்து கட்டுகிறார்கள்.


இந்தியர்கள் எல்லோரும் நல்ல போர்மில் உள்ளார்கள். இவர்களுக்கு முன்னால் இங்கிலாந்தின் பந்துவீச்சு எடுபடவில்லை. இந்தியர்கள் பிளிண்டொவ் இற்கு மட்டும் கொஞ்சம் மரியதை கொடுத்து விளையாடுகிறார்கள். ஆனாலும் ஓட்டவிகிதம் எகிறும் போது அவரும் வாங்கிக்கட்டுகிறார்.


சஹீர்கான் நிஜமாகவே மிரட்டுகிறார். அவரது முன்னேற்றம் அசர வைக்கிறது. ஆஸ்திரேலியர்களையே மிதித்தவர்களுக்கு அதுவும் அவர்களது கோட்டைக்குள் மற்றவர்கள் எல்லாம் காற்தூசிக்கு சமம்.


வலுவான் அணி இப்போது இந்தியா. இந்த போக்கில் போனால், ஆஸ்திரேலியர்களின் ஒன்னாம் நம்பர் கனவுக்கு ஆப்புத்தான்.


சஹீர்கான் களத்தடுப்பினை சக பந்துவீச்சாளருக்கு ஒழுங்கமைக்கும் போது தோனி வழிவிடுகிறார். மற்ற அணித்தலைவர்கள் விட்ட தவறுகளை இவர் சீர் செய்கிறார்.


ஒரு நாள் போட்டி என்று வந்துவிட்டல் தோனி நன்றாக ஆடுகிறார். அடிக்க வேண்டிய இடத்தில் முழங்கியும், ஆறுதலான் நேரத்தில் அமைதியாகவும் ஆடுகிறார். நேரத்திற்கு தகுந்த ஆட்டத்தினை இப்போது தோனி கையாளுகிறார்.


சரி இவை தொடருமா....? தொடர வேண்டும் என்பதே எல்லோர் விருப்பமும். ஆனால் இந்திய கிரிக்கட் வீரர்கள் எப்பொழுது சொதப்புவார்கள் என தெரியாது. பொறுத்த நேரத்தில் கோட்டை விட்டு விட்டு ரசிகர்களிடம் கல்லெறி வாங்குவார்கள். பார்ப்போம் வெற்றிப்பயணம் எதுவரை என. ஆஸ்திரேலியா தற்பொழுது அடங்கிவிட்டது. இவர்கள் அதை தொடர்வார்களா...? இதுதான் இப்போதுள்ள வலுவான வினா.....!

திங்கள், 24 நவம்பர், 2008

பொறுப்பற்ற ஆட்டம்....!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி நேற்று பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா டக்வேர்த்-லூயிஸ் முறையில் 19 ஓட்டங்களால் வென்றது தெரிந்ததே.

உண்மையில் இந்தியா இந்த தொடர் முழுவது நன்றாக விளையாடி வரும் நிலையில் இங்கிலாந்து அணியும் மோசமாகவே விளையாடி வருகிறார்கள்.

நேற்றைய ஆட்டம் இங்கிலாந்திற்கு வாழ்வா சாவா போட்டி. என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியிடம் இருந்த போட்டியை அவர்களாகவே இந்தியாவிடம் தாரைவார்த்துக் கொடுத்தனர்.

டக்வேர்த்-லூயிஸ் முறையில் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 198. அதுவும் 22 ஓவரில். இது ஒரு கடின இலக்குத்தான். ஆனால் 20-20 போட்டிகளில் நன்றாக பரிச்சயம் உள்ள வீரர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆரம்ப ஜோடிகள் பெல்-போபரா இணை மிக மோசமாக விளையாடியது. இதுதான் போட்டியின் திசையை மாற்றியது என நான் கருதுகிறேன். 6 ஓவரில் வெறும் 21ஓட்டங்கள் தான். பீட்டர்சன் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆரம்ப இணையின் விளையாட்டு உத்தி தாக்குதல் பாணியில் அமையவில்லை. அடித்து ஆட முயன்று ஆட்டமிழந்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். அடிக்க முனைந்து ஆட்டமிழந்தார் என்பர். ஆனால் அவர்கள் இருவரும் அந்த உத்திக்கு எத்தணிக்கவே இல்லை. போபரா ஆட்டமிழக்க பின்னால் வந்த ஓவே ஷா வும் மெதுவாகவே ஆரம்பித்தார். இவை பின்னால் வந்த வீரர்களுக்கு அழுத்தம் கூட்டுவதாகவே அமைந்தது.
அருமையான வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். இந்தியாவிற்கு 5வது பந்து வீச்சாளர் பகுதிநேரப்பந்து வீச்சாளரே. அதையும் அவர்கள் பெரிதாக பயன்படுத்தவில்லை.

பீட்டர்சன் துடுப்பாடும் போது பட்தட்டம் தெரிகிறது. அணித்தலைவர் என்ற சுமை அவரது துடுப்பாட்டத்தை இந்தத்தொடரில் வெகுவாகவே பாதித்துவிட்டது. 3ம் இலக்க வீரராக பிளிண்டொவ் இனை இறக்கி பீட்டர்சன் கொஞ்சம் பின்னாலே வந்திருக்கலாம். அவர் செய்கிறாரோ இல்லையோ ஏனைய வீரர்களுக்கு மனதில் தைரியத்தை கொணர்ந்திருக்கும்.

அதிர்ஷ்டம் இல்லை என்பதைவிட இங்கிலாந்து போட்டியில் சிறந்த திட்டமிடல் இல்லாததால் கோட்டை விட்டது. மீண்டு ஒரு வெற்றி இந்தியர்க்கு. இது தொடரை அவர்கள் வசமாக்கிவிட்டது.

மீண்டும் ஒரு கிரிக்கட் பதிவில்........!

வியாழன், 28 ஆகஸ்ட், 2008

நல்லைக் கந்தனின் தேர்த்திருவிழா......


'நல்லூரான் திருவடியை
நான் நினைத்த மாத்திரத்தில் - எல்லாம்
மறப்பேனடி கிளியே!
இரவு பகல் காணேனடி கிளியே!!'

- நற்சிந்தனை, சிவயோக சுவாமிகள்

எங்கள் நல்லூர் கந்தனுக்கு தேர். இருபத்துமூன்று நாட்களும் எப்படி போனது என்று தெரியவில்லை. நேற்றுத்தான் கொடியேறியது போல் உள்ளது. இன்றே அடியவர்கள் பரபரக்கத்தொடங்கி இருப்பார்கள். காலை தேர். விடிய எழும்ப வேணும். அழிவான்கள் இன்னும் ஊரடங்கு சட்டம் பற்றி சொல்லவில்லை. காலையே அங்கே போய்விடவேணும். வசந்தமண்டபத்தில் முன்னுக்கு இருந்து அழகன் ஆறுமுகசுவாமியை பார்க்க வேணும். அழித்தல் தொழிலுக்கு என்று அவதரித்த முகூர்த்தம். தேருக்கும், சூரசங்காரத்திற்கும் மட்டுமே வெளி வீதிவருவான். அந்த அழகனை கண்குளிர காண வேணும். கைகூப்பி தொழவேணும். கண்சொரிய வேண்ட வேணும். எத்தனை எண்ணங்கள். எத்தனை எதிர்பார்ப்புகள். இன்றே எல்லா ஆயத்தங்களை அடியவர்களும் ஆலய நிர்வாகமும் நிறைவேற்றுவர். சில வேலைகள் மாலை சப்பரத்திருவிழா முடிந்த பின்னர்தான் செய்யலாம். அவை சற்றே கிடப்பில் கிடக்கும்.

வெளியே தேர் தூசிகள் துடைக்கப்பட்டு, கழுவி சகலமும் முடிந்து இருக்கும். இனி புன்னியாவாகனம். அது சப்பரம் முடிந்த பின்னர். சப்பரம் இருப்புக்கு வரும். சுவாமிகள் உள்ளே போனதும், தருமண்ணை வருவார். தனக்கேயுரிய குரலில், "வாங்கோடாப்பா சப்பரத்தை பின்னுக்கு இழுத்துவிடுவோம்" என அழைப்பார். எல்லோரும் 'ஒரு கை' பிடிக்க சப்பரம் அசைந்து தேர்முட்டிக்கு பின்னால் நகர்த்தப்படும்.

உள்ளே இளைஞர்கள் ஆறுமுகசுவாமி வீற்றிருக்கப்போகும் வெள்ளி சிம்மாசனத்திற்கு கொம்பு(சுவாமியை துக்குவதற்கு பாவிக்கும் மரம்) கட்டி குருக்கள் ஐயாவின் கிரியைக்காக அந்த பீடத்தை சுற்றி அமர்ந்திருப்பர். குருக்களும் வந்து தன்னுடைய கிரியைகளை அந்த சிம்மாசனத்திற்கு செய்வார். முடிந்ததும் சிம்மாசனம் உள்ளே போகும். அங்கு ஆறுமுகசுவாமிக்கு அழகிய சிவப்பு நிறம் கொண்ட சாத்துப்படி நடக்கும். ஆலய தொண்டர்களும் பரபரப்பாக இயங்குவர். அடியவர்களும் ஆலயத்தை பெருக்கி சுத்தப்படுத்தி தங்களால் ஆன உதவிகளை செய்வர்.

நேர்த்திக்கு காவடி எடுப்பவர்கள் எல்லோரும் தங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருப்பர். காவடிக்கென மேளம்,நாதஸ்வரம் எல்லாம் பிடிப்பது சிரமமாக இருக்கும். அதிக கேள்வி இருக்கும். பறவைக்காவடி, தூக்குக்காவடி, செதில்காவடி, பால்க்காவடி என இன்னும் நிறைய அணிவகுக்கும் கந்தனை நோக்கி. அதிகாலை வீதியால் பிரதட்டை செய்து அல்லது பிரதட்டை காவடியுடன் சில அடியவர்கள் ஆலயம் நோக்கி விரைவர். கற்பூரச்சட்டி தூக்குபவர்கள் அதற்கான பொருட்களை தேடி முடித்திருப்பர்.

சப்பரத்திருவிழா முடிந்ததும் தேர்த்திருவிழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கும். அவையும் நிறைவுற்றால் சரி. அடியவர்கள் வீடேகுவர். நாளை தேர்த்திருவிழாவிற்கான அருச்சனைப் பொருட்களை சரிபார்ப்பர். தேர்முட்டிக்கு என இரண்டு தேங்காய்கள் எடுத்து வைப்பர். கோபுர வாசலில் உடைக்க ஒரு தேங்காய் என வகுப்பர். எல்லோரும் அதிகாலை எழும்ப வேணும் என்பதால் வேளைக்கே படுக்கை செல்வர்.

அதிகாலை 3 மணிக்கு எல்லாம் எழுந்து விடுவார்கள். குளித்து சுத்தமான ஆடை அணிந்து அடியவர்கள் சாரை சாரையாக ஆலயம் விரைவர். கால் கழுவி "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என இருகை கூப்பி அந்த தூலலிங்கத்தை வழிபடுவர். தேர்முட்டிக்கு முன்னால் தேங்காய்கள் மலைபோல குவிக்கப்பட்டிருக்கும். பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். உள்ளே சென்றால் அடியவர்கள் அலைமோதுவார்கள். நேரத்திற்கு வந்தும் இவ்வளவு சனமா என எண்ணும் அளவிற்கு உள்ளே பக்தர் கூட்டம் இருக்கும். வசந்த மண்டபத்திற்கு நேரே எல்லோரும் காத்திருப்பார்கள். போக்கு வரவிற்கென சிறிய பாதை தவிர மிகுதி இடங்களில் எள் கூட மண்ணைத்தொடமுடியாது. காத்திருப்பர் கந்தனை தொழுவதற்கு. அடி அழிப்பவர்கள் ஒருபுறம். பிரதட்டை செய்பவர்கள் மறுபுறம். வெளிவீதியும் அந்த அதிகாலை நேரத்திலேயே அமளிதுமளிப்படும்.

பள்ளியறைப்பூசை 3 திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களுடன் தொடங்கும். பின்னர் காலைப்பூசை. அது முடிந்ததும் வசந்தமண்டபத்திற்கு நேரே பின்னால் உள்ள கதவுகள் திறக்கப்படும். உள்ளே வரமுடியாதவர்கள் அழகுக்குமரனை வெளிவீதியில் நின்று வழிபடலாம். அந்த நேரத்தில் வெளிவீதியிலும் சனம்தான். பிரதட்டை செய்தவர்கள் அந்த வேப்ப மரத்தின் கீழே காத்திருப்பர். வடம் பிடிக்க வேணும். சிதறுதேங்காய் உடைக்கவேணும். இதுதான் அவர்களின் எண்ணம். சரியாக 6.30 மணிக்கு, மணி ஒலிக்க, அரோகரா ஓசை வானை பிழக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, அந்தோ.... அந்த முருகவேற்பெருமானின் வசந்தமண்டப திரைவிலகும். அப்பப்பா...அப்பப்பா...என்ன அழகு. எத்தனை அழகு. கோடிக்கண் வேண்டும் அந்தக் குமரனைக்காண. நிச்சயமாக அன்பு மேலீட்டால் ஆனந்தக்கண்ணீர் சொரியும். சொரிய வேணும். பிரபல தவில், நாதஸ்வர வித்துவான்கள் அங்கே காணமழை பொலிந்து கொண்டிருப்பர். ஆறுமுகசுவாமி என்பதால் ஆறு குருக்கள்மார் நின்று ஆறுமுகத்திற்கும் தீபாராதனை செய்து கொண்டிருப்பர். அற்புதமான அழகு. "அழகனை காண ஆயிரம் கண் வேண்டும்....." என்ற பாடல் தான் நினைவுக்கு வரும். அழித்தலை தேர்த்திருவிழா குறிப்பதால் குருக்கள்மார் எல்லோரும் சிவப்பு நிறத்திலேயே வேட்டி உடுத்திருப்பர். சாத்துப்படியும் சிவப்பாகவே இருக்கும்.

வசந்தமண்டப பூசை முடிந்ததும் கொடித்தம்ப பூசை நடைபெறும். அதற்கு பின்னர் ஆறுமுகசுவாமி தேரிற்கு எழுந்தருழுவார். அடியவர்களுக்குள் ஒரே அடிபாடு அழகனைத் தூக்குவதில். பெரியவர்கள் அதனை ஒழுங்கு படுத்துவர். தருமண்ணை தன் கையில் சிறிய ஒலிபெருக்கி வைத்திருந்து அடியவர்களை வழிவிலக்குவார். தவில்,நாதஸ்வர வித்துவான்கள் தேர் மல்லாரி பொழிவார்கள். 30 செக்கண்டுகள் கூட ஒருவர் சுவாமியை காவ அனுமதிக்கப்படமாட்டார்கள். எல்லோரும் எம்பெருமானை தோளிலே சுமக்கவேணும் என்பதே காரணம்.

இங்கே வெளிவீதியில் தேர்முட்டிக்கு முன்னால் பார்த்தால் தேங்காய்கள் மலையென இருக்கும். நிறைய இளைஞர்கள் தயாராக இருப்பார்கள் அதனை உடைப்பதற்கு. சரியாக காலை 7.00 மணி கோபுர வாசலின் ஊடாக கந்தவேற்பெருமான் வருவார். கொள்ளை அழகு. அழகு என்ற சொல்லுக்கு முருகா என்று அழவேணும் போல இருக்கும். இப்பொழுதுதான் புகைப்படங்களும், வீடீயோக்களும் கந்தனை உள்வாங்கிக் கொள்ளும். கோபுரவாசல் கடந்து முன் மண்டப வாயில் கடக்கும் போது அங்கே சில அன்பர்கள் அந்த மண்டபத்தின் கூரையில் நின்று அழகிய ரோஜா மலர் இதழ்களை சொரிவார்கள். பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். அங்கே படார்,சடார்,கடார் என சத்தம் கேட்கும். பார்த்தால் தேங்காய்கள் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கும். சில சமயங்களில் விளையாட்டாக ஒரு சில மண்டைகளும் உடைந்து இரத்தம் எட்டிப்பார்க்கும் தேர்த்திருவிழாவை. ஒரு தேங்காயை ஒரு கையில் வைத்துக்கொண்டு மறுகையில் இன்னொரு தேங்காய் எடுத்து உடைத்து வரும் இளநீரை தம் தலையில் ஊற்றி ஆனந்தம் அடைவார்கள். தெரிந்தவர்கள் யாராவது இதில் கலந்து கொள்ளாமல் அருகில் இருந்தால் அவர்களுக்கும் அபிஷேகம் நடக்கும். அந்த இடம் ஒரு சில நிமிடங்களில் சேறும் சகதியுமாகிவிடும். ஈரத்துக்குள் காலில் சிரட்டைகள் குத்தும். வெட்டும். இரத்தம் ஒடும். எல்லாம் கந்தனுக்கே அடைக்கலம் என இருப்பார்கள். சுவாமி தேரிலே ஏறியதும். தீபாரதனை காட்டப்படும். பின்னர் சுற்றியிருந்த வடத்தினை பின்னே நீட்டுவார்கள். அடியவர்களின் தலைக்கு மேலாக வடம் வரும். அதைப்பிடிக்க அலைமோதும் கூட்டம். இங்கே தேங்காய்கள் உடைக்கப்பட்டு முடிந்ததும், அதை ஆலய தொண்டர்கள் கடகங்களில் பொறுக்கி உடனேயே அப்புறப்படுத்தி இருப்பார்கள்.
தேரிற்கு முன்பாக பெரிய காண்டாமணி 'டாங்' 'டாங்' என்ற ஓசையுடன் பின்னாலே தேர் வருகிறது என்பது போல முன்னாலே செல்லும். தேர் இழுக்க தயாரனதும் சில அடியவர்கள் தேரோடும் வீதி பிரதட்டை செய்வார்கள். அடி அழிக்க இருப்பார்கள். குருக்கள் ஐயா மணிஅடித்ததும் தேரில் இருக்கும் சிறு மணிகள் ஒலிக்க அரோகரா ஓசை முழங்க ஆறுமுகப்பெருமான் அழித்தல் தொழிலுக்கு புறப்படுவார். பின்னாலே பிரதட்டை செய்யும் அடியவர்கள், அடி அழிக்கும் பெண்கள், கந்தனை நினத்து பஜனை செய்பவர்கள் என ஒரே பக்தி மயம். இவர்களை எல்லாம் ஒழுங்கு படுத்திக்கொண்டு பாடசாலை சாரணர் அணி, பரியோவான் முதலுதவிப்படை, நலன்புரிச்சங்கம் போன்றன மக்களை நெறிப்படுத்திக் கொள்வார்கள். கைகளை கோர்த்து அரணாக நின்று நேர்த்தி செய்யும் அடியவர்களுக்கு பெரும் உதவி புரிவார்கள்.

தேர் இழுக்கும் அடியவர்கள் நெருக்கியடித்து முண்டியடித்து ஒரு கையால் மட்டும் பிடித்து இழுக்கக்கூடியாதாகவே இருக்கும் . அப்படி இழுத்துத்தான் தேர் இருப்புக்கு வரும். நினைத்தால் ஆச்சரியம்தான். சில நேரங்களில் விரலால் தொட்டுவிட்டாலே போதும் என்று அடியவர்கள் தொட்டு ஆனந்தம் அடைவார்கள்.

தேர் இருப்புக்கு வந்ததும் கோவில் ஆதீனகர்த்தாவின் மகன் பச்சை சாத்துவார். அதன் போது தேர் முட்டியில் நாதஸ்வர தவில் வித்துவான்கள் முழங்குவார்கள். குருக்கள் பஞ்சாராத்தி காட்டும் போது திரை விலகும். ஆறுமுகசுவாமியை அடியவர்கள் தூக்கி வரும் அழகு பேரழகு. பச்சை திருவாசி. பச்சை மாலை. அழித்தல் செய்து ஆக்ரோஷத்துடன் இருக்கும் ஆறுமுகனுக்கு குளிர்மையாக பச்சை சாத்துப்படி.

சுவாமி மீண்டும் வசந்தமண்டபம் போகும் போது வித்தியாசமாக "இசற்" வடிவிலே மெதுவாக ஆடி ஆடி எல்லாப்பக்கமும் உள்ள அடியவர்களுக்கு அருளியவாறு கோபுர வாசலால் உள்ளே நுழைந்து, பின்னர் வசந்த மண்டபத்திற்கு நேரே உள்ள பின்வாசலுக்கு சென்று மீண்டும் வசந்த மண்டபம் ஏகுவார். கந்தனின் பேரழகு காணக்கிடைக்காத ஒரு அரிய காட்சி. ஒருதடவை வாழ்வில் சென்று பார்த்தால் மீண்டும் மீண்டும் காணத்தூண்டும் அழகிய காட்சி.

இதற்கு பின்னர்தான் நிறைய காவடிகள் எல்லாம் வரும். அடியவர்கள் தங்கள் நேர்த்திகளை முடித்துக் கொள்வார்கள். 9.00 மணிக்கு முன்னர் திருவிழா முடிந்திருக்கும். வெளியூர் அடியவர்கள் நேரம் ஆக ஆக வந்து அருச்சனை செய்வார்கள். இது மாலை தேரடி வீதி பார்க்கும் உற்சவம் வரை தொடரும்.

2007 ம் ஆண்டு தேர்த்திருவிழா ஒளிப்படங்களை கானாபிரபாவின் வலைப்பூவில் பார்க்க இங்கே சொடுக்கவும்.

2008 ம் ஆண்டு நல்லக்கந்தன் திருவிழாப் படங்களைக்காண இங்கே சொடுக்குங்கள்

படங்கள் : நன்றி கானாபிரபா

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

நல்லூர் கந்தன் திருவிழா 2008

ஈழத்தமிழரின் ஒரு பெரும் கலாச்சார விழாவாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை(06.08.2008) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இதுவரையில் முடிந்திருக்கும். அதுதான் நல்லூரின் முகாமைத்துவ சிறப்பம்சம்.

இன்று நல்லூர் வாழ் மக்கள் வீதிகளையும், வீடுகளையும் பெருக்கி சுத்தப்படுத்தி நாளை அந்த கொடியேற்றும் நாளிகைக்காக காத்திருப்பர். யாழ்ப்பாண மாநகர சபையும் தன் பங்கிற்கு வீதிகளை சுத்தப்படுத்தி ஆங்காங்கே கழிவுப்பொருட்களை இட சிறிய தொட்டிகளை வைத்து சுத்தத்தை பேண நடவடிக்கை எடுப்பர். கச்சான், சிறு தீன் பண்டங்களை விற்பனை செய்வோர் தமக்கான இடங்களை யாழ்.மாநகர சபையிடம் இருந்து வாடகைக்கு பெற்று சிறு சிறு கொட்டில்களை தமது ஒரு மாத வியாபாரத்திற்காக தயார் செய்வார்கள். ஆங்காங்கே தண்ணீர்ப்பந்தல் அமைப்பதற்கு பொதுமக்கள் ஈடுபடுவார்கள். சிறுவர்கள் பெரும் கனவுடன் காத்திருப்பர் தாம் இம்முறை நிறைய விளையாட்டுப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று.

இது ஒருபுறம் இருக்க இன்று நல்லூர் ஆலயத்திற்கு நாளை கொடியேற இருக்கின்ற 'கொடிச்சீலை' நல்லூர் முடமாவடியில் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள கதிர்காமசுவாமி ஆலயத்தில் இருந்து வீதிவலமாக எடுத்து வரப்படும். பின்னராக வைரவர் சாந்தி இடம்பெற்று அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டிருக்கும்.
இவை எல்லாம் விட பிரதட்டை செய்யும் வீதிக்கு இன்றே யாழ்.மாநகர சபை சுத்தமான வெள்ளை மணல் கொண்டு வந்து கொட்டி அதை பரவி கிருமிகளை அழிக்க மருந்து அடித்து துப்பரவாக வைத்திருப்பர்.

யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகள் இன்று தமது தொண்டர் படைகளை சேவைக்கு அமர்த்தியிருப்பர். சாரணர் அணி, பரி.யோவான் முதலுதவிப்படையணி, செஞ்சிலுவைச்சங்க அணி என எல்லோரும் காத்திருப்பர்.

பாடசாலை அல்லாமல் இருக்கும் சேவைக்கழகங்கள் ஆன இலங்கை செஞ்சிலுவைச்சங்கம், யாழ்ப்பாணம் நலன்புரிச்சங்கம், யாழ்.பரி.யோவான் முதலுதவிப்படை என எல்லோரும் சேவை புரிய தயாராக இருப்பர்.

யாழ். மாநகர சபையும் வீதித்தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்து வசதியினை சுலபமாக்குவர். நல்லூரில் உள்ள சனசமூக நிலையங்கள் சைக்கிள் பாதுகாப்பு நிலையங்கள் அமைத்து ஒரு சிறிய கட்டணத்துடன் வாகனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருப்பர்.
இளைஞர்கள் தங்களுக்குள் கதைக்க தொடங்கியிருப்பார்கள். "மச்சான் நாளை நல்லூர் கொடி இனி 25நாளுக்கு ஒண்டும் இல்லையடா (எது இல்லை)." சிறிய கவலையுடன் அதை மகிழ்ச்சியாக தெரிவிப்பர். "என்னமாதிரி நாளை பிரதட்டை செய்கிறியா? என ஒருவர் கேட்க "ஓமடாப்பா, செய்வம் எண்டு இருக்கன், நாளைவரை உயிரோடு இருந்தால் அல்லது காணாமல் போகாமல் இருந்தால் செய்வேன்டா" என ஒருவன் சொல்வான். இன்னொருவன் "கொஞ்சம் நேரம் சிக்கலடாப்பா, அப்ப தினத்துக்கு தினம் செய்வோம் எண்டு இருக்கேன்" என்பான் இன்னொருவன். இம்முறை காவடி எடுக்கிற ஒரு எண்ணம் இருக்கு மச்சான் எல்லாம் கை கூட வேணும் என உரைப்பான் மற்றுமொருவன். ஆலயத்திற்கு சென்றவர்களுக்கு தெரியும் எங்கு பார்த்தாலும் இளைஞர்களின் பக்தி சற்று தூக்கலாகத்தான் தெரியும்.

இவர்கள் இப்படி என்றால் மகளிர் அணி தங்களுக்குள் கொஞ்சம் வித்தியாசமாக பேசுவார்கள். தாங்கள் அடி அழிக்க போவதாகவும், ஒரு சிலர் தாம் அதிகாலை சென்று (ஆமி விட்டால்) உள்வீதியில் செய்வதாகவும், வேறு சிலரோ தாம் வெளிவீதியிலும் செய்வதாக எண்ணம் இருப்பதாகவும், எதோ அந்த நேரம் உள்ளபாடு என தம்முள் அலசும் நேரம், கொஞ்சப்பேர் தமது 25நாள் சேலை,அணிகலன்கள் பற்றி விவாதிப்பர்.

நாளை அதிகாலை பள்ளியெழுச்சிப் பூசையுடன் அடியவர்கள் அங்க பிரதட்டை செய்ய தொடங்கி இருப்பார்கள். அடியவர்கள் செய்யும் அந்த பிரதட்டை காண்பதற்கு மிக அழகாக இருக்கும். ஒரு குழுவாக அல்லது தனியொருவராக தமது பிரதட்டை காரியத்தை செய்து முடிப்பார்கள். குழுவாக செல்வோரில் முன்னால் செல்பவர் பாதை காட்டுபவராகவும் இடைநடுவில் செல்பவர் 'அரோகரா' என்று ஓசை எழுப்பிய படி செல்ல அவருக்கு இசைவாக எனையோர் அதனை சொல்வர்.

"முருகனுக்கு அரோகரா,
கந்தனுக்கு அரோகரா,
அழகனுக்கு அரோகரா,
அப்பனுக்கு அரோகரா,
வள்ளிமணவாளனுக்கு அரோகரா,
ஞானபண்டிதனுக்கு அரோகரா,
ஈசன் உமை பாலனுக்கு அரோகரா,
பழனியாண்டவருக்கு அரோகரா,
அலங்காரக் கந்தனுக்கு அரோகரா,
அன்னதானக் கந்தனுக்கு அரோகரா,
அபிஷேகக் கந்தனுக்கு அரோகரா,
வேலுக்கு அரோகரா,
மயிலுக்கு அரோகரா,
வேல் வேல் வெற்றிவேல்,
வேலும் மயிலும் வேலாயுதம்,
அரோகரா அரோகரா"

என ஒரு கிரமமாகச் செய்வர். இதோ சில கானொளிக்காட்சிகள்...... காட்சித்துண்டு -01

காட்சித்துண்டு -02
காட்சித்துண்டு - 03
தொடங்கும் போது எல்லோரும் வேட்டியை மடித்துக்கட்டி அதற்கு மேல் தமது சால்வையை கட்டி பிரதட்டை செய்ய தயாராகுவர். சிலர் வேட்டியை கொடுக்கு போல கட்டுவர். பின்னர் கோபுர வாசலுக்கு நேரே நின்று கந்தனை வணங்கி கீழே விழுந்து கும்பிட்டு அரோகரா என தொடங்குவர். அப்படியே வீதி வழியே வந்து தேர்முட்டியை சுற்றி வந்து அப்படியே தூலலிங்கமாகிய இராஜகோபுர வாசலுக்கு வந்து கும்பிட்டு எழும்புவர். பின்னர் வேட்டியின் கட்டுக்களை அவிழ்த்து மீண்டுமொருமுறை வீதியை சுற்றி வருவர். வரும்போது மேற்கு வீதியில் தேநீர் கொடுப்பார்கள். அதனை அருந்தி விட்டு அப்படி சுற்றி வந்து கும்பிட்டு ஆலயத்திற்கு முன்னால் உள்ள மணலில் இருந்து உரையாடுவர். இந்த 25நாளும் மிக அற்புதமான நாட்கள் என்பர்.
இவை எல்லாம் நான் சொல்வது 3ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலைமையில் திருவிழாவிற்கு முதல் நாள் உள்ள எதிர்பார்ப்பு. இப்போதுள்ள நிலமை எல்லோரும் அறிந்ததே. இதுவரை பாதுகாப்பு படையினர் நல்லூர் தொடர்பாக வாய் திறக்கவில்லை. பார்ப்போம் பொறுத்திருந்து.
கந்தனை அழுது தொழுவதற்கு பக்தர்கள் தாயார். எம்மை காப்பாற்று. எமக்கான ஒரு நிம்மதி வாழ்வை தா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.
நாளை யாழ்ப்பாணம் களைகட்டும். 10மணிக்கு கொடியேற்றம்.
சென்றமுறை கானா பிரபா வின் பதிவு மிக அற்புதமானது.அரிய கருத்துக்களை தந்த கானா பிரபாவிற்கு நன்றிகள். அதற்கு செல்ல......
=========ஒளிப்பதிவில் உள்ள தெளிவின்மைக்கு வருந்துகிறோம். இது 2007ம் ஆண்டு எடுக்கப்பட்டது.