நல்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஆகஸ்ட், 2009

தேரேறி வருகிறான் நல்லைக் கந்தன்...!

"வெள்ளை மணல் மீதுருண்டு
வேலவனே என்றழுதேன்
எங்கயடா போய் ஒழிந்தாய் முருகா...!"

நல்லூர்....நாவினில் உச்சரிக்கும் போதெல்லாம் உடலில் ஓர் பரவசம். தன்னையறியாமலே உள்ளம் பூரிக்கும். ஏனோ தெரியவில்லை அந்தக்கந்தனை எண்ணும் போதெல்லாம் என்னுள் ஒரு கிறக்கம். இதை அனுபவித்தவர்கள் ஏராளம்.
இன்று நல்லைக்கந்தன் தேரேறி வருகிறான். பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் இந்த தருணம் அலங்காரக்கந்தனாம் ஆறுமுக சுவாமிக்கு வசந்த மண்டப பூசை நிறைவுற்றிருக்கும்.

வசந்த மண்டப பூசை.......வார்த்தைகள் இல்லை விபரிக்க. அற்புதமாக இருக்கும். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கே ஆலயத்துக்கு வந்து அந்த வசந்த மண்டபத்தில் கூடி கந்தவேள் பெருமானின் பூசை பார்க்க காத்திருப்பர். அது சன சமுத்திரம். அழித்தல் தொழில் குறிக்கும் சிவப்பு நிறத்துடன் இருக்கும் சாத்துப்படி. ஆலயக் குருக்கள் மற்றும் ஏனைய அந்தணப்பெருமக்களும் சிவப்பு நிற வேட்டியுடன் நின்றிருப்பர்.

வெள்ளிப்பீடத்தில் வேலவன் எழுந்தருளி அடியவர்களின் தோளில் அசைந்து வருகின்ற காட்சி....காணக் கண் கோடி வேண்டும். அழகனைக் காண கோடி அல்ல பல கோடிக் கண்கள் வேண்டும். தங்கம் தகதகவென மின்னும். சுவாமியின் அருகே நின்றவர்களுக்கு தெரியும் 'சிலிங் சிலிங்' என்ற மெல்லிய ஒலியுடன் பன்னிருகரத்தான் வந்து கொண்டிருப்பான்.

எந்தக் கணமும் பிசகாத சரியாக 7.00 மணிக்கு கோபுர வாசலினூடாக வெளியே வரும் அந்தக்காட்சி அனைவரையும் நெக்குருக வைத்து விடும். தாமரை மலர்கள் சொரிய , அரோகரா ஓசை வானைப் பிளக்கும். மங்கள் வாத்தியங்கள் முழங்கும்.

சனசமுத்திரம் மத்தியில் முருகப்பெருமான் அசைந்து அசைந்து வருவார். "உன்னையல்லாது துணை எவருமுண்டோ வையகம் புகழ் நல்லை வாழ் வடிவேலனே....நீதான் உய்ய வழி காட்ட வேண்டும்" என்ற அடியவர்களின் மனக்குமுறல் மௌனமாகவே இருக்கும். அங்கப் பிரதட்டனை செய்பவர்களும் அடி அழிப்பவர்களும் கற்பூரச்சட்டி எடுப்பவர்களும் காவடிகளும் என அடியவர்களின் நேர்த்திக்கடன் வேலவனின் வீதியில் தீர்க்கப்படும்.

இவ்வளவு அழிவிற்கு பின்னமும் இந்த திருவிழா ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்ற சிலரின் கேள்வி மனதை நெருடாமல் இல்லைத்தான்.

ஆனாலும் கந்தனே நீ " வந்திருந்து பூச்சொரிந்து வாசலிலே கையசைத்தால் வல்ல வினைகள் எல்லாம் அகன்று விடும்". எம்மக்கள் அவலமற்ற அமைதி வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் எமது பிரார்த்தனை இருக்கும். அதுதான் அங்கிருக்கும் அடியவர்களின் இதயத்தில் அடியில் இருக்கும் ஒரு எண்ணமாக இருக்கும்.

ஒருமுறை வானொலி அஞ்சல் நிகழ்வில் இளையதம்பி தயானந்தா அற்புதமாக சொல்லுவார். தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. கற்பூரங்கள் எரிக்கப்படுகின்றன. உடைக்கப்பட்டதும் எரிக்கப்பட்டதுமான எண்ண அலைகளோடு அடியவர்கள் அங்கே காணப்படுகிறார்கள் என....!

உண்மைதான் கண்ணீரோடும் அவலங்களோடும் அலையும் ஈழத்தமிழன் இப்போது தண்ணீருக்குள் முகாம்களில் மிதக்கிறான். அவலம் அழிவில்லாமல் தொடர்கிறது. ஒன்றும் வேண்டாம் கந்தவேளே....! அது வேண்டாம் இது வேண்டாம் எமக்கு எதுவும் வேண்டாம்...! எம் கண் முன்னால் நிகழும் இந்த அவலம் அகலட்டும். "கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம்...' இன்று கூற்றுவர்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் எம்மினத்தவரை காப்பாற்றாதா? என்றே எண்ணுகிறோம்.

முருகா காப்பாற்று...! முழுவினைகளும் அகலட்டும்....!! அவலமற்று அமைதி வாழ்வு மலரட்டும்!!!

தேர்த்திருவிழா பற்றிய ஒரு அருமையான பாடல்......
பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்
இசை : இசைவாணர் கண்ணன்
பாடல் : புதுவை இரத்தினதுரை

திங்கள், 27 ஜூலை, 2009

நல்லூர் கந்தனுக்கு கொடி...!


அலைகடல் சூழும் ஈழநாட்டின் தலையெனத் திகழும் யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற பதியில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம்தான் நல்லூர்க் கந்தசுவாமி கோவில். தமிழ்க்கடவுள் முருகன். யாழ்ப்பாண அரசாட்சி காலங்களில் எல்லாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சிறப்பு மேலோங்கித்தான் இருந்தது. இது தொடர்பாக கானாபிரபா 2007 ம் ஆண்டு 25 நாட்களும் சிறப்பு பதிவிட்டிருந்தார். அதனை பார்வையிட......!

ஏனோ தெரியவில்லை நல்லூர்க்கந்தனுக்கு திருவிழா என்றதும் மனது குதூகலிக்கிறது. இனி 25 நாட்களும் ஒரே கொண்டாட்டம்தான். அனைத்து மக்களும் பால் வயது என எந்த வர்க்க பேதமுமின்றி ஒன்று கூடும் ஒரு ஈழநாட்டு கலாசார நிகழ்வுதான் நல்லூர்க் கந்தனின் வருடாந்த உற்சவம். ஒரு படி மேலாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்களும் இங்கே அதிகமாக ஒன்று கூடுவார்கள்.

ஆலயச் சூழல் எங்கும் ஒரே பக்திமயமாகத்தான் இருக்கும். அப்படித்தான் ஆலய சுற்றாடலும் அமைந்து இருக்கிறது. அதிகாலை 4 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை ஆலயம் அமைந்த பகுதிகள் பெரும் அமளியாகவே இருக்கும். அங்க பிரதட்சனை, அடி அழிப்பு என அதிகாலையிலேயே பக்தர்கள் கூடிவிடுவர். காலை நேரம் மிக ரம்மியமாகவே இருக்கும். அலுவலகங்கள் செல்வோர், பாடசாலை மாணவர்கள் என எல்லோரும் காலைப் பூசையில் கலந்து கொள்வர். காரணம் அவர்களால் பகற் திருவிழாவினை கண்டு களிக்க முடியாது. ஆனால் மாலைநேரம் எல்லோரும் அங்கே கூடுவர். மனதிற்கு இதமான பொழுதில் முருகவேற் பெருமான் தன் துணைவியர் வள்ளி தெய்வயானை சமேதராக திருவீதியுலா வருகின்ற காட்சி அற்புதமாக இருக்கும்.

நல்லூர் ஆலயத்தினை எல்லோரும் ரசிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நேரத்தினை கடைப்பிடிக்கும் பாங்கு. எல்லாமே சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தேறிவிடும். இதையெல்ல்லாம் நெறிப்படுத்துபவர் ஆலயத்தின் ஆதீன்கர்த்தாவாக இருக்கின்ற மாப்பாண முதலி மரபில் வந்த சண்முகதாச மாப்பாண முதலியார் அவர்கள். அவர் மூப்படைந்தாலும் மகனின் உதவியுடன் ஆலயத்தினை திறம்பட முகாமைத்துவம் செய்து வருகிறார்.

மாலை வேளைகளில் ஆலய வீதிகளில் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கங்கள், இசைக்கச்சேரிகள் என கலை கலாசார நிகழ்வுகள் ஒரு புறம். மறுபுறம் சிறிய சிறிய பெட்டிக் கடைகள், சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், குளிர்களி (ஐஸ்கிறீம்) நிலையங்கள் என எங்கும் மக்களை கவரக்கூடிய வகையில் வணிக நிறுவனங்கள் அமைந்திருக்கும்.

இன்று காலை சரியாக பத்து மணிக்கு கொடித்தம்ப மரத்தில் வேலவனின் கொடி ஏறிவிடும். இனி 25 நாட்களும் கோலாகலமும் குதுகலமும்தான்.

கடந்த வருட திருவிழாவிற்காக கிடுகுவேலி தாங்கிய பதிவு
இங்கே....!

"பஞ்சம் படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி.."