செவ்வாய், 17 நவம்பர், 2009

வெல்லத்தமிழ் இனி மெல்லச்சாகுமா?

அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அவர்களின் நண்பர்களாக இரண்டு குடும்பங்கள். எல்லோரும் சேர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். முழுவதும் ஆங்கிலத்தில்தான். அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் நல்ல புலமையானவர்கள் போல இருந்தது. சரளமாக கதைத்தார்கள். ஒபாமாவின் ‘எபெக்’ வருகை முதல் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் வரை அலசினார்கள். ஆனால் எல்லாம் ஆங்கிலத்தில். அதுவும் அனைவரும் தமிழ்க் குடிமக்கள். இலங்கையில் இருந்து வந்து இங்கே குடியேறியவர்கள். நல்ல பதவிகளில் இங்கே வேலை செய்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் அவர்கள் பேசுவதைக் கண்டதும் மனதுக்கு கவலையாக இருந்தது. ஏன்தான் இவர்கள் இப்படியோ ? இரண்டு சீன மொழி பேசுபவர்கள் சந்தித்தால் அவர்கள் சீன மொழியில் பேசுகிறார்கள். இரண்டு மலாய் மொழி பேசுபவர்கள் சந்தித்தால் மலாய் மொழியில் பேசுகிறார்கள். இரண்டு சிங்கள் மொழி பேசுபவர்கள் சந்தித்தால் சிங்களத்தில் பேசுகிறார்கள். ஆனால் தமிழர்கள் நாமோ....? மொழி ஒரு ஊடகம். எமது மொழியை தெரியாதவர்களுடன் கதைப்பதற்கு அதனை உபயோகிக்கிறோம். அவ்வளவே. தமிழர்களுடன் தமிழில் கதைக்கலாந்தானே? எல்லோருக்கும் எல்லா வார்த்தைகளும் தெரியும் என்பதல்ல. அந்த தெரியாத வார்த்தைகள் ஆங்கிலத்தில் தெரியும் என்றால் அந்த மொழியில் பேசலாம். ஆங்கிலம் ஓரளவு கலப்பதில் தப்பில்லை. ஆனால் முற்றிலுமாக ஆங்கிலத்தில் இரு தமிழர்கள் கதைப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் சாகும் என்ற வாக்கியம் மெய்த்துப்போய் விடும்.

****************

உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) அண்மையில் நடாத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு - 2009 இல் சிங்கப்பூரில் இருந்து பலர் கலந்து கொண்டு தமது புதுமையான படைப்புக்களை - கணினி மூலம் எவ்வாறு தமிழினை மேம்படுத்தலாம் என்ற அடிப்படையில் - அங்கே வெளிக்கொணர்ந்திருந்தார்கள். தமிழ் செம்மொழியாகவும் சிறப்பாகவும் கையாளப்படுகின்ற ஒரு நாடு சிங்கப்பூர் என்றால் அது மிகையல்ல. அத்தகைய தேசத்தில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அங்கே சிறப்பாக தமது படைப்புகளை தெரியப்படுத்தினர். இது தொடர்பாக அவர்களிடம் சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியும் சிறப்பு பேட்டி எடுத்து ஒளிபரப்பினர். பின்னர் அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு சிறப்பு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே சென்ற எனக்கு ஏமாற்றமே. ஒரு 15 பேர் அளவில் வந்திருந்தார்கள். ஏற்பாடு செய்தவர்களும் ஒரு 20 அல்லது 25 பேர் இருக்க கூடிய ஒரு வகுப்பறையையே தெரிவு செய்திருந்தார்கள். ஏற்பாடு செய்தவர்கள் முன்னரே எதிர்பார்த்துத்தான் இருந்தார்களோ தெரியாது இவ்வளவு பேர்தான் வருவார்கள் என்று. ஆனாலும் அவர்களின் அக்கறையான, ஆரோக்கியமான முயற்சிக்கு முதலில் நன்றிகள். ஆனால் அங்கே ஏன் மற்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக தமிழ் கற்பிக்கின்ற “ஆசிரிய மணிகள்”. இந்த இணைய மாநாட்டின் முக்கிய நோக்கமே கணினி மூலம் எவ்வாறு தமிழை இலகுவாக கற்பிக்கலாம் அல்லது எல்லாத் தரப்பினருக்கும் எடுத்துச் செல்லலாம் என்பதே. ஆனால் அதனை கற்பிக்கின்றவர்கள் எவரும் புதிய விடயங்களில் ஆர்வம் காட்டாமை வருத்தத்துக்குரியதே. கற்பிப்பது அவர்கள் பிரச்சினை. ஆனால் இந்த ஆக்கங்களை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கி பணம் செலவழித்து அங்கே சென்று வெளிப்படுத்திவிட்டு வந்தவர்களை ஊக்கப்படுத்தவாவது அவர்கள் வந்திருக்கலாம். பலநூற்றுக்கணக்கான தமிழ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் வரவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம். இப்படியான சில புறக்கணிப்புக்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவு வளர்ச்சியினை மந்தகதியாக்கும். தமிழின் சாவையும் விரைவாக்கும்.

******************

சங்கீத இசைக்கச்சேரி மேடைகள் எல்லாவற்றிலும் அநேக தமிழ்ப் பாடகர்களால் வேற்று மொழிப்பாடல்கள் பாடுவது என்பது வழமையான ஒன்றாகிவிட்டது. இசைக்கு மொழியேது என்பது உண்மைதான். ஆனால் சபையறிந்து பாடுவது என்பது ஒரு நல்ல பாடகருக்கு அழகு. அப்போதுதான் அந்த அரங்கினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இல்லையேல் அரங்கம் சலசலக்கத் தொடங்கிவிடும். முற்றிலும் தமிழர்கள் நிறைந்த அரங்கிலே பிற மொழிக் கீர்த்தனைகளை பாடுகின்ற சங்கீதப் பெருமக்களை என்ன சொல்வது? பிறநாடுகளை விடுங்கள். இலங்கையில் கம்பன் கழகம் நடாத்துகின்ற இசைவேள்வியில் பாடுவதற்கு வருகின்ற இந்திய கர்நாடக சங்கீத வித்துவான்கள் எல்லாம் தெலுங்கு கீர்த்தனைகள் உட்பட பிற மொழிப்பாடல்களை பாடுவதற்கு தயங்குவதில்லை. அந்த அரங்கம் முழுவதும் தமிழ் பேசும் நல்லுள்ளங்கள் மட்டுமே இருக்கும். சிறிது நேரத்தில் அவர்கள் குசுகுசுக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனை ஏன் அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல ஏற்பாட்டாளர்களும் இதிலே சிரத்தை எடுப்பதில்லை. பெரிய வித்துவான் வந்து இசைநிகழ்ச்சி நிகழ்த்தினால் போதும் எப்படி, எதை பாடவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதில்லை. இதற்குமப்பால் முன் வரிசையில் இருந்து தாம் ஏதோ பாரிய இசை ஞானத்துடன் இருப்பதாக நினைத்து தலையாட்டி, தாளம் போடுவது அவர்களை இன்னும் அங்கீகரிப்பதாகவே இருக்கும். இப்படி தமிழ்ப் பாடல்களை மறந்து சென்றால் தமிழ்ப் பாடல்கள் காலப்போக்கில் காணாமலே போய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு யார் மணிகட்டுவது. கலைஞர்களும் திருந்தவேண்டும். ஏற்பாட்டாளர்களும் இதிலே முன்னின்று உழைத்து தமிழ்ப் பாடல்களைப் பாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மெல்ல இனிச்சாவதை எவரும் தடுக்க முடியாது.
இந்தப் படத்தினை உருவாக்கி அனுப்பி உதவிய நண்பர் கு. அசோக்பரன் அவர்களுக்கு நன்றிகள்..!