யாழ்ப்பாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்ப்பாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 மார்ச், 2012

எங்கள் ஊர் மரடோனா "வெள்ளை"

அது யாழ்.மத்திய கல்லூரி மைதானம். குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகத்துக்கும் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்துக்கும் இடையிலான உதைபாந்தாட்டப் போட்டி. அதில் ஒரு கணம், ஊரெழு கோல் காப்பாளர் நெல்சன் பந்தை அடிக்கிறார். உயர்ந்து வருகிறது, வலது கரையாக நிற்கும் அந்த வீரனை நோக்கி. அவரும் முன்னாலே ஓடுகிறார்.பந்தும் மேலால் வந்து கொண்டு இருக்கிறது. அது தரையைத் தொட முன்னர் அந்த வீரன் மிகத்துல்லியமாக கணித்து பந்திற்கு ஓங்கி உதைக்கிறார். பந்து வேகமாக எதிரணியின் ‘கோல்க்’ கம்பம் நோக்கிச் செல்கிறது. கோல் காப்பாளரால் அந்தப் பந்தைப் பிடிக்கவோ/தடுக்கவோ முடியாது. ஆனால் பந்து கம்பத்தை தொட்டு வெளியே செல்கிறது. ஆம் இப்படி அடிக்கடி தனது தனித்துவமான ஆட்டங்களால் எங்கள் மனதில் ஆழப்பதிந்த பெயர்தான் ‘வெள்ளை’. தர்மகுலநாதன் அவரது இயற்பெயர். 



கிடுகுவேலி:வணக்கம் வெள்ளையண்ணை.
வெள்ளை :வணக்கம் சொல்லுங்கோ..
கிடுகுவேலி : இப்ப உங்களோட கதைக்கலாமோ?
வெள்ளை : ம்ம்ம் கதைக்கலாம...ஆனால் பின்னேரம் ஒரு 'மட்ச்' இருக்கு கென்றிசோட....
கிடுகுவேலி : நீங்களும் விளையாடுறீங்களோ?
வெள்ளை : (ஒரு சின்ன சிரிப்புடன்...).ம்ம்ம் சும்மா விளையாடுறனான்....!!

வெள்ளை பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று அவரோடு தொடர்பு கொண்ட போது நடந்த உரையாடல் இது. வயது 50 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னமும் ஆடின கால் அடங்க மறுத்து காலில் ‘பூட்ஸ்’ போட்டுக் கொண்டு களத்தில். என்னால் நம்பவே முடியவில்லை. சிறுபராயத்தில் நான் பார்த்து பார்த்து பிரமித்த ஒரு விளையாட்டு வீரன். அந்த நாடு முழுவதும் போற்றியிருக்க வேண்டிய ஒரு மகத்தான சாதனை வீரன். ஆனால் அங்கிருந்த அசாதரண சூழல்களும், குடும்ப நிலையும் ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்துக்குள்ளேயே அவரை முடக்கி விட்டது.

இதனை நான் வெறும் வார்த்தைக் கோலங்களுக்காக சொல்லவில்லை. யாழ் மண்ணில் வாழ்ந்து காற்பந்தாட்டப் போட்டிகளை நேசித்தவர்கள் அனைவரும் இதனை நன்கு அறிவர்.

போட்டிக்கு முன் தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறார்
நெஞ்சை நிமிர்த்திய தோற்றம். நெடிய உருவம். நல்ல ஆகிருதி. கட்டுக்குலையாத தேகம். மாநிறம். இவையெல்லாம் அந்தநாட்களில் நான் கண்ட "வெள்ளை" இனது தனித்துவமான அடையாளங்கள். இப்போதெல்லாம் தொலைக்காட்சியூடாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் மெஸ்ஸி, ரொனால்டோ, ரூனி எல்லோரையும் அறியும் முன்னர் எமக்கெல்லாம் சுப்பர் கீரோ என்றால் அது வெள்ளைதான். எங்கள் மண் நன்கறிந்த ஒரு ஒப்பற்ற வீரன். வேகம், விவேகம், லாவகம், எல்லாம் ஒருங்கே வரப்பெற்றவர்.

அந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன். காலையில் எழுந்ததும் 'உதயன்' பத்திரிகையின் கடைசிப்பக்கத்தில் வரும் செய்தியான "இன்றைய ஆட்டங்கள்" பகுதிக்கே கண்கள் செல்லும். அதிலே ஊரெழு றோயல் எதிர் -------- என்று கண்டால் ஏனோ தெரியவில்லை மனதுக்குள் பூரிப்புத்தான். மாலையில் நடைபெறும் ரியுசன், அது எந்த வகுப்பாக இருந்தாலும், அல்லது யாருடைய வகுப்பாக இருந்தாலும் கவலைப்படாமல் 'கட்' அடித்து செல்வது என்று அப்போதே முடிவாகிவிடும். எதிரணி எது என்பது கூட கவலையில்லை. சும்மா சாக்குப் போக்குச் சொல்லி அம்மாவிடம் 20ரூபா வாங்கி மைதானத்துக்குச் சென்று அந்த வீரனின் விளையாட்டை காண்பதில் அவ்வளவு சந்தோசம் இருந்தது. அதுதான் அதியுச்ச மகிழ்வான நேரம் எமக்கு.

வெள்ளை ஊரெழுவில் பிறந்து, வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திலும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வி கற்கின்ற போதே பாடசாலை அணிக்காக விளையாடியவர். பாடசாலை அணி பல வெற்றிகள் பெறுவதற்கு காரணமாயிருந்தார். 16 வயதை எட்டியதும் கல்லூரி அணி என்பதைத் தாண்டி கழக அணிக்குள்ளும் கால் வைக்கத் தொடங்கிவிட்டார். அது அவருடைய தந்தையார் மற்றும் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட றோயல் விளையாட்டுக் கழகம்தான். சிறுவயதிலேயே அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துவிட்டார். அன்று தொடங்கிய வெள்ளையின் ‘உதைபந்தாட்ட இராச்சியம்’ இன்றும் தொடர்கிறது என்றால் அது மிகையல்ல. இதில் இருந்து வெள்ளையின் விளையாட்டின் அர்ப்பணிப்பையும் தனிமனித ஒழுக்கத்தையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். "றோயல் வெள்ளை" பற்றிக் கதைக்காமல் அந்தக் காலப்பகுதியில் காற்பந்தாட்டத்தை கதைக்க முடியாது.

வெற்றிக்கோப்பையோடு..வெள்ளை
வெள்ளைக்கு பெரும் ரசிகர் பட்டாளம். மற்ற அணி ரசிகர்கள் எல்லாம் தமது அணி விளையாடாத போது வெள்ளையின் விளையாட்டை காண வருவர். உண்மையில் அவர் ஒரு நாயகனாகவே வலம் வந்தவர். அன்று றோயலுக்குப் போட்டி என்றால், மாலையில் அவரை ஒருவர் (கூடுதலாக பாலா அண்ணை - ஊரெழு நண்பர்களுக்கு தெரியும்)மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வருவார். வெள்ளை மைதானத்துக்குள் வந்து விட்டால் ஒரு சிறிய சலசலப்பு. அவரின் வயது முதிர்ந்த ரசிகர்களின் "தம்பி என்ன மாதிரி" என்ற கேள்வியில் நிறைய இருக்கும். குசலம் விசாரிப்பது போலவும் அமையும். அன்றைய போட்டி எப்படி இருக்கப் போகிறது என்றும் அமையும். அவர் மேல் ரசிகர்கள் அவ்வளவு பாசமாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள்.

 வெள்ளை விளையாடினால் எதிரணிக்கு கலக்கமே. எந்தக் கோல் காப்பாளருக்கு எப்படி அடிக்க வேண்டும் என்ற வித்தை நன்கு தெரிந்தவர். அப்போது மிகச்சிறந்த காப்பாளர்களாக பல்கலைகழக அணி அருளும் பாடும்மீன் ரவியும் இருந்தார்கள். ஆனால் அவர்களையும் உச்சி கோல் அடிக்கும் உத்தி வெள்ளைக்கு நன்றாகத் தெரியும். 

வெள்ளை அணியும் மேற்சட்டை (ஜேர்சி) எண் 10. அந்தக்காலம் தொட்டு 10ம் இலக்கம் என்பது உதைபந்தாட்டத்தில் ஒரு 'மஜிக்' இலக்கம். பீலே முதல் மரடோனா..ஏன் இன்றைய மெசி வரை 10ம் இலக்கத்துடனேயே மைதானத்துக்குள் வலம் வருகிறார்கள். அன்று யாழ் மண்ணிலும் இந்தக் கலாசாரம் தொடர்ந்தது. சிறந்த பிரபல வீரர்கள் 10ம் இலக்க மேற்சட்டையே அணிந்திருந்தனர். குருநகர் பாடும்மீன் கொலின், நாவாந்துறை சென்.மேரிஸ் பவுணன், பாஷையூர் சென்.அன்ரனீஸ் றோய் (பெரிய), இளவாலை சென்.கென்றீஸ் ஜெயக்குமார், மயிலங்காடு ஞானமுருகன் சிந்து, பல்கலைக்கழக அணியில் நேசன், என் இந்தப்பட்டியல் நீளும்.

இன்னும் தொழில் முறையாக விளையாடும் எந்த விளையாட்டும் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை. சிறிலங்காவின் தெற்கு பகுதியான கொழும்புவில் இருந்தாலும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இல்லை என்றே சொல்லலாம். எனவே இவர்கள் அனைவரும் பகலிலே தமது அன்றாட வாழ்வாதாரத்துக்கான உழைப்பில் ஈடுபட வேன்டும். மாலையில் கிடைக்கின்ற நேரத்தில் பயிற்சி எடுக்க வேன்டும்.  அப்போதெல்லாம் பயிற்றுவிப்பாளர்களோ, அணிக்கான முகாமையாளர்களோ இல்லை (இப்போதும் அப்படியே). அவர்கள் விளையாடுவதற்கு மைதானம் இருப்பதே பெரிய விடயம். பெரிய அளவில் பயிற்சி என்றில்லை. சும்மா இரண்டு அணிகளாக பிரித்து விட்டு விளையாடுவது. அவ்வளவே, அது தான் அவர்களின் பயிற்சி. இப்படியெல்லாம், குடும்பத்தை பார்த்து, உழைத்து, போதிய பயிற்சி இல்லாமல் விளையாடிய போதும் அவர்களுடைய விளையாட்டில் ஒரு நளினமும் ஈர்ப்புத்தன்மையும் இருந்தது. அநேக மக்கள் அந்தப் போட்டிகளை எல்லாம் மனதார பார்த்து ரசித்தார்கள். குருநகர், பாசையூர், நாவந்துறை வீரர்கள் இரவில் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது. காலையில் அதனை யாருக்கும் விற்று விட்டு, பகலில் தூங்குவது. மாலையில் விளையாட்டு. கடலுக்கு போனவர் திரும்பி வருவரா? மாட்டாரா? என்றிருந்த காலம். இப்படித்தான் வெள்ளையும் ஒரு மரக்கறி வியாபாரி. மதியத்தோடு வீடு வந்து ஓய்வெடுத்துவிட்டு மாலையில் பயிற்சி. 

ஒரு உதைபந்தாட்ட வீரன் தனித்துவமாக மிளிர வேண்டுமெனில் அவரிடம் தனிப்பட்ட முறையில் நிறைய திறமைகள் வேண்டும். அணியோடு ஒத்து விளையாடுகின்ற பக்குவம் வேண்டும். வெள்ளை இவற்றிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. ஆனால் இவை தவிர்த்து வெள்ளை களத்திலே ஒரு நல்ல மனிதர். வெள்ளை தப்பான ஆட்டம் ஆடுவது அரிது என்றே சொல்லாம். ஏனைய வீரர்கள் (றோயல் அணி) வெள்ளைக்குப் பயம். யாராவது தப்பான ஆட்டம் ஆடினால், அல்லது நடுவரோடு வாய்த்தகறாறில் ஈடுபட்டால் ‘டேய் விசிலுக்கு விளையாடுங்கடா. சரி-பிழை வெளியால நிக்கிற சனத்துக்குத் தெரியும்’ என தனது வீரர்களுக்குச் சொல்லி உற்சாகப்படுத்துவார். எதிர் அணி வீரர்களோடு முரண்படும் இடம் வரும்போதெல்லாம் தனது அணிவீரர்களை சமாளித்து, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை அடக்கி போட்டி தொடர்ந்து நடக்கக்கூடியவாறு செய்துவிடுவார். இதுதான் வெள்ளையிடம் ஏனைய அணிவீரர்களும் ரசிகர்களும் மரியாதை வைக்கக் காரணம். 

சக வீரர்களுடனும் ரசிகர்களுடனும்
இதுவரை வெள்ளை சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கோல்களை அடித்திருப்பார். இதனை அவரும் உறுதிப்படுத்துகிறார். தனது வாழ்நாளில் இதுவரை ஆயிரம் கோல்கள் அடித்தவரை எமது தேசம் எப்படி கௌரவித்திருக்க வேண்டும்? மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட வீரர். இவரது ஆரம்பகாலத்தில் ஒரு போட்டியில், யங்றோயல் அணி 2-0 என்று முன்னனியில் இருந்தது. போட்டியில் வெள்ளை விளையாடவில்லை. இடதுகாற் பெருவிரல் நகம் விழுந்ததே காரணம். போட்டி முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தது. வெள்ளையின் கால்கள் துடித்தது ஏதாவது செய்ய வேண்டும் என. உள்ளே இறங்கத் தயாரான போது, ஏனையவர்கள் தடுத்தார்கள். நீயும் விளையாடித் தோற்றோம் எனச் சொல்வார்கள். ஆனால் வெள்ளை உள்ளே இறங்கிவிட்டார். இறங்கிய உடனேயே படுசாதுரியமாகவும் வேகமாகவும் ஒரு கோலைப் போட்டார். ஆனால் அடுத்த நிமிடத்தில் மீண்டும் யங்றோயல் அணி ஒரு கோலைப் போட 3-1. றோயல் அணியின் தோல்வி உறுதி என நினைத்திருந்த வேளை வெள்ளையின் மின்னல் வேக ஆட்டம் வெளிப்பட்டது. தனது சகல திறமைகளையும் ஒருங்கே குவித்து ஆட்டம் முடிவடைவதற்குள் 2 கோல்களையும் போட்டார். 3-3 இப்போது. பின்னர் ‘பெனால்டி’ உதை மூலம் றோயல் வென்றது. இதுதான் வெள்ளை. இப்படித்தான் வெள்ளை எல்லோர் மனதிலும் வீற்றிருக்கிறார். 

உதைபந்தாட்டத்தில் ‘ஸ்லிப்’ அடிப்பது என்பது ஒரு கலை. ஆனால் எப்படியோ தெரியாது, எந்த அணிவீரர்களாலும் வெள்ளைக்கு ‘ஸ்லிப்’ அடிக்க முடிவதில்லை. பாடும்மீன் கழகத்தில் விசயன் அல்லது சிலிப்பன் ( ‘ஸ்லிப்’ அடிப்பதால் அந்தப் பெயர்) கூட வெள்ளையை வீழ்த்தியது இல்லை. மிக லாவகமாக பாய்ந்து சென்று விடுவார். நீங்கள் கோல் அடிக்கச் சிரம்ப்பட்ட கோல்காப்பாளர் யார் என்றால், பாடும்மீன் ரவி, முன்னர் இருந்த முஸ்லீம் லீக் முனாஸ் என்பவர்களைச் சொல்கிறார். உங்கள் காலத்தில் விளையாடிய உங்களைக் கவர்ந்த சிறந்தவீரர்கள் யார் என்றால்..மெலிதாகப் புன்னகைத்து, நிறையப் பேர் இருக்கிறார்கள் என்கிறார் அடக்கத்தோடு. பழகுவதற்கு பண்பானவர். போட்டிகள் பற்றிய அவரது கதையை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் சொல்லும் விதம் “ஹைலைட்ஸ்” பார்ப்பது போல இருக்கும். 

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெற்றிக் கோப்பைகள்
இன்றும் தன்னால் ஆன பணியை உதைபந்தாட்டத்துக்கு செய்து வருகிறார். தனது மூன்று மகன்களை முன் வரிசையில் ஆடவிட்டு களத்தில் பின்வரிசை வீரராக வெள்ளை இன்றும் விளையாடுகிறார். றோயல் பல வெற்றிக் கோப்பைகளை வென்றிருக்கிறது. அவை இன்றும் அவருடைய வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அனைத்தும் 1996 இற்குப் பின்னர் கிடைத்தவை. காலத்தின் ஒரு கோலமான இடப்பெயர்வு வெள்ளையையும் பாதித்தது. அவரது நிழற்படங்கள், அவர் பற்றிய பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டார். 

இளம் வீரர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டால், அதே அடக்கமான புன்னகையுடன், ‘நான் என்ன சொல்ல...ஆனால் விசிலுக்கு விளையாட வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். எதிரணி வீரர்களோடு வாக்குவாதத்திலோ, கைகலப்பிலோ ஈடுபடக்கூடாது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நீண்ட பயிற்சி அவசியம்’ எனச் சொல்கிறார். அண்மையில் ஒருநாளில் மூன்று போட்டிகள் விளையாட வேண்டியிருந்ததாம். எல்லா வீரர்களும் களைத்திருக்க தன்னால் ஓரளவு தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்தது என கொஞ்சம் பெருமையோடே சொல்கிறார் 1963 இல் பிறந்து 48வயதான வெள்ளை. இதுதான் வெள்ளையின் யாரும் அறிய முடியா இரகசியம்.

வெள்ளை பற்றி எதிரணியில் விளையாடியவர்கள் நிறையச் சொல்வார்கள். அண்மையில் ஒருவரைக் கேட்ட போது பொறாமையாக இருக்கிறது, இந்த வயதிலும் விளையாடுகிறாரே என்றார். அவரும் ஒரு சிறந்த வீரராக இருந்தாலும் மனம் திறந்து வெள்ளையைப் பாராட்டினார். அதுதான் வெள்ளை.

வெள்ளை பற்றி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் அவர் தொடர்பாக ஒரு ஆவணப்படம் கூட எடுக்கலாம். படித்தவர் முதல் பாமரர் வரை எவர் எல்லாம் உதைபந்தாட்டத்துக்கு ரசிகரோ அவர்கள் எல்லாம் வெள்ளைக்கும் ரசிகரே. அவரது இயற்பெயரை இரசிகர்கள் மறந்திருப்பார்கள். ஆனால் ‘வெள்ளை’ என்கின்ற பெயரை மறக்கவோ யாழ்ப்பாண உதைபந்தாட்ட வரலாற்றில் இருந்து மறைக்கவோ முடியாது. 

நன்றி : வினோ, சிவகரன், சிவரதன் (தகவல் சேகரிப்பில் உதவியவர்கள்)

புதன், 7 அக்டோபர், 2009

மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

“கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா...” இந்தப் பாடலை உச்சரிக்காத நா இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பெற்ற ஒரு அருமையான பாடல். ஆனந்த பைரவி இராகத்தில் ஆரம்பமாகி அமைந்த ஒரு ராகமாலிகா. இந்தப் பாடலை பாடியவர் தென்னிந்திய பிரபல பின்னனிப் பாடகர் ரி.எம்.சௌந்தரராஜன். இதை எழுதியவர் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர்.
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்....பாடல்
இன்றுதான் அவர் எம்மை பிரிந்த நாள் ( 08.10.2003 ) இசையுலகும் நடன உலகும் அதிர்ந்து நின்ற நாள். ஈழதேசம் மிகப்பெரிய ஒரு மஹாவித்துவானை இழந்த நாள். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் மூழ்கி அதிலிருந்து முத்துக்களை மட்டுமே எமக்கு தந்த இயலிசைவாரிதி மறைந்தநாள். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடல்கள் இயற்றுவதாகட்டும் எல்லாத்துறையிலும் தனது பன்முக ஆளுமையை வெளிப்படுத்திய சாகித்ய சாகரம் வீரமணி ஐயாவின் நினைவுதினப் பதிவு இது.


சைவமும் தமிழும் தழைத்தோங்கும் இணுவையம்பதியில் 1931ம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ம் திகதி இந்த பூவுலகில் கால் பதித்தார். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். படிக்கும் காலத்திலேயே தன்னுடைய கலைத்திறமையை வெளிக்காட்டி மிகவும் ஆணித்தரமாக தன்னுடைய காலை கலை உலகில் பதித்தார். 1947 ம் ஆண்டு 16 வது வயதில் பாடசாலையில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் “மனோகரா” நாடகத்தில் பெண்வேடமிட்டு நடனமாடி பல முகபாவங்களை காட்டி நடித்தார். அரங்கத்தில் இருந்தோர் எல்லாம் மெய்சிலிர்த்து பார்த்துக் கொண்டு இருந்தனர். பார்த்துக் கொண்டு இருந்த கல்லூரி அதிபர் உடனேயே அலுவலகத்திற்கு சென்று “சகல துறைகளிலும் மிளிர்ந்த மாணவன்” என்ற ஒரு வெள்ளிப்பதக்கத்தை அந்த மேடையிலேயே வீரமணி அய்யாவிற்கு சூட்டி மகிழ்ந்தார். வளர்ந்து பட்டப்படிப்புக்காக சென்னை வந்தார். விஞ்ஞான மானி பட்டம் படிக்கவே வந்தார். ஆனால் புலன்கள் எல்லாம் இசையிலும் நடனத்திலும் சென்றது. உலகமே போற்றும் இசை மேதை பாபநாசம் சிவன் மற்றும் எம்.டி. இராமநாதன் ஆகியோரை தனது இசைக்கான குருவாகவும், கலாஷேத்திரத்தில் புகழ்பூத்த நாட்டிய மேதை ஸ்ரீமதி ருக்மிணி தேவி அருண்டேல், சாரதா ஆகியோரை நாட்டியத்துக்கான குருவாகவும் வரித்து கொண்டு இசையிலும், நடனத்திலும் தனது திறனை செவ்வனே வெளிப்படுத்தினார்.
சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயா

இவ்வண்ணம் பயின்று வரும் காலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வர ஆலய கற்பாகம்பாள் மீது கொண்ட பக்தி காரணமாக உருவானதுதான் ”கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..” என்ற சாகித்தியம். மிகப்பிரபல்யமான ஒரு பாடல். வெளிவந்த ஆண்டு 1956. ரி.எம்.எஸ் அவர்களின் குரல் கேட்பவரை நெகிழச்செய்யும். இந்தப் பாடலிற்கு வயலின் வாசித்தவர் உலகம் போற்றும் குன்னக்குடி வைத்தியநாதன். இவ்வளவு காலமாகியும் பாடல் இன்றுவரை இதயத்துள் கூடாரமிட்டு ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு முறை வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள் வீரமணி ஐயா அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். நீங்கள் இயற்றிய பாடல்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ரி.எம்.எஸ் பாடிய எத்தனையோ பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன், ஏன் நீங்கள் இயற்றிய இந்தப்பாடல் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று. வீரமணி ஐயா அவர்கள் ஒரு கணம் ஆடிப்போனார். பின்னர் சுதாரித்துக் கொண்டு சொன்னாராம் இவ்வாறு... “நான் அந்தப் பாடலை இயற்றி என்னுடைய குருநாதர் பாபநாசம் சிவனிடம் காட்டினேன். அவரும் ராகத்திற்கு ஏற்றாற்போல் பாடிப் பார்த்துவிட்டு... ‘சிற்பம் நிறைந்த சிங்கார கோயில் கொண்ட...’ என்ற வரியில் ஏதோ ஒன்று தவறவிடப்பட்டது போன்ற உணர்வு வருகிறது. நான் ஏதாவது மாற்றம் செய்யலாமா? என்று கேட்டார். நானும் அதற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க பாபநாசம் சிவன் அவர்கள் “சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோவில் கொண்ட..” என்று ‘உயர்’ என்ற சொல்லை சேர்த்தார். சேர்த்த அந்த உயர் என்ற சொல்லால் பாடலை யாத்த எனக்கு உயர்வைத் தந்தது. பாடலைப் பாடிய ரி.எம்.எஸ் ற்கு உயர்வைத்தந்தது. பாடலுக்கு வயலின் வாசித்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு உயர்வைத்தந்தது”. குருவின் அந்த ஆசீர்வாதமே அவரை இந்தப் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது என்றால் மிகையல்ல. இதனை இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றும் போது சொல்லி மகிழ்ந்தார். நேரடியாகவே என் காது பட கேட்டேன். அநேகமாக அதுதான் அவர் கலந்து கொண்ட இறுதி விழாவாக இருந்திருக்க வேண்டும்.
டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் தம் கைப்பட வீரமணி ஐயர் பற்றி எழுதியது

வீரமணி ஐயா அவர்கள் பலதுறை கலைஞர். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடலாக்கம் ஆகட்டும் இவர் இறுதிக்காலம் வரை அதில் புதுமைகளை செய்து கொண்டு இருந்தார். நடனத்தில் புதிய புதிய முத்திரைகளை உருவாக்குவதிலும், இசையில் புதிய ராகங்கள், சாகித்தியங்கள் இயற்றுவதிலும், இராகங்களுக்கு பாடல்கள் இயற்றுவதிலும், கோவில்களுக்கு பாடல்கள் என அவர் எப்பொழுதும் தான் சார்ந்த கலைக்கு தொண்டாற்றி கொண்டே இருந்திருக்கிறார். இராகங்களுக்கு பாடல் இயற்றுவதை தமிழில் “வாக்கேயகாரர்” என்று சொல்லுவார்களாம். யாழ்ப்பாணம் தந்த மிகப்பெரும் வாக்கேயகாரரை நாம் இழந்து இற்றைக்கு 6 வருடங்கள் ஆகிவிட்டன. கர்நாடக இசையிலே 72 மேளகர்த்தா ராகங்களுக்கான பாடல்கள் இயற்றி இசை உலகை தன்பக்கம் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்தார். காரணம் இப்படி 72 மேளகர்த்தா இராகங்களுக்கும் பாடல்கள் இயற்றியவர்கள் கோடீஸ்வர ஐயர், ராமசுவாமி தீக்‌ஷிதர், மகாவைத்தியநாதர், போன்ற சிலரே. இதனால்தான் இவர்பால் அனைவர் கண்ணும் திரும்பியது.
கர்நாடக சங்கீத மேதை டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா வீரமணி ஐயர் பற்றி அனுப்பிய வாழ்த்து

கர்நாடக சங்கீத உலகில் பாலமுரளிகிருஷ்ணா ஒரு சகாப்தம். அவர்கள் ஒருமுறை 1980 ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் வந்த போது இவரது வாக்கேயகாரத் திறனை அறிந்து வியந்து நாலு சுரத்தில் இராகம் அமைத்துப் பாடமுடியுமா என கேட்டார். அடுத்த கணமே வீரமணி ஐயா ‘ஸகமநிஸ’ என்ற ஆரோகணத்தையும் ‘ஸநிமகஸ’ அவரோகணத்தையும் கொண்ட ‘ஜெயம்’ என்ற இராகத்தை உடனேயே ஆக்கி ஆதி தாளத்தில் “ஜெயமருள்வாய் ஜெகதீஸ்வரா / ஜெயகௌரி மணாளா - தயாளா” என்ற கீர்த்தனையை உடனே இயற்றினார். வாயடைத்து நின்ற பாலமுரளிகிருஷ்ணா பாராட்டுப்பத்திரம் வழங்கி விட்டு சென்றார்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரமணி ஐயர் பற்றி இயற்றிய வெண்பா

தான் ஒரு மேம்பட்ட கலைஞன் என்று அவருக்கு வித்துவச்செருக்கு என்றைக்குமே இருந்ததில்லை. சிறுவர்களுடன் சேர்ந்து பரராஜசேகரப்பிள்ளையார் வீதியில் ஆடி மகிழ்வார். அவர்களை கைகளால் தாளம் போட வைத்து ஆட்டுவித்து மகிழ்வார். இதைவிட பெரிய பண்பு இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் தன்மை. சக கலைஞனை மதிக்கும் தன்மை. நான் தான். தான் தான். என்ற மமதை அற்ற மாமனிதர். இதற்கு சிறந்த உதாரணமாக, இவர் தொடர்பாக நல்லூர் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களுடன் உரையாடிய சமயம் அவர் பகிர்ந்து கொண்டது. ஒருநாள் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்தில் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி மற்றும் உதயநாதன் குழுவினருடன் பாலமுருகனும் வாசித்து கொண்டிருந்தார். ‘கனகாங்கி’ இராகத்தை நாதஸ்வரத்தில் வாசித்துக் கொண்டிருந்தாராம். அந்த இராகத்துக்கான கீர்த்தனை தொடர்பான சகல நெளிவு சுளிவுகளை முன்னரே வீரமணி ஐயா அவர்களிடம் படித்திருந்தார் பாலமுருகன். அன்று அந்த கடினமான இராகத்தை வாசித்து கொண்டு இருக்க, திடீரென ஆலயத்துக்குள் குளித்து உடல் துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட வீரமணி ஐயா நுழைந்து கையில் கொண்டு வந்த ஒரு பதக்கத்தை பாலமுருகனுக்கு அணிவித்து விநாயகரில் சாத்தி இருந்த அறுகம்புல் எடுத்து கையில் கொடுத்து.. “நீ நீடுழி வாழணும் நல்லா இருக்கணும்டா கண்ணா, இன்னும் இன்னும் நிறைய வாசித்து புகழ் அடையணும்” (அவர் சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அவரோடு பழகியவர்கள்) என்று வாழ்த்திவிட்டு அந்த இடத்தை விட்டும் நீங்கிவிட்டார். அந்த நாதஸ்வர இசை அவரை ஈர்த்துவிட்டது. அடடா இப்படி வாசிக்கிறானே என்று தான் நின்ற கோலத்தையும் மறந்து ஈர வேட்டியுடன் வந்து வாழ்த்திய பண்பு எந்தக் கலைஞனுக்கும் வராது. கலைஞனை அவனது நிகழ்ச்சி முடியும் முன்னர் வாழ்த்துவது அல்லது விமர்சிப்பது என்பது அந்தக் கலைஞன ஊக்கபடுத்துவதோடல்லமால் மேன்மேலும் வளர உதவும். அந்த வாழ்த்திய தருணத்தை கண்டு பாலமுருகன் திகைத்து போனாராம். இன்றும் அதை நினைக்கும் போது நெகிழ்ந்தும் உணர்ச்சி வசப்பட்டும் போய்விடுகிறார்.

இவர் பெற்ற பட்டங்கள் ஏராளம். இங்கே அவற்றை தருவதற்கு போதிய இடம் இல்லை. ஆனால் அவரை யாழ்ப்பாணப் பல்கலைகழகம் சிறுமைப்படுத்தி விட்டது என்று என்னுடைய சிற்றறிவு சொல்கிறது. அவரை சிறுமைப்படுத்தி தன்னையே தாழ்த்திக் கொண்டு விட்டது. காரணம் உலகம் போற்றுகின்ற ஒரு ஒப்பற்ற கலைஞனுக்கு இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 1999 ம் ஆண்டு வெறும் கௌரவ முதுகலைமாணி(M.A) பட்டம் மட்டுமே வழங்கியிருந்தது. என்னைப் பொறுத்த வரை, எந்தவிதத்தில் அவர் குறைந்தவர் ‘கலாநிதி’ பட்டம் பெறுவதற்கு என தெரியவில்லை. இதே அடிப்படையில் கௌரவிக்கப்படாத ஒரு கலைஞன் அளவெட்டி நாதஸ்வர வித்துவான் கலாசூரி என்.கே பத்மநாதன். அவர் இறந்த பின்னர் அவருக்கு அந்த கலாநிதி பட்டத்தை வழங்கி மேலும் ஒரு முறை தான் இன்னமும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிற்கிறேன் என்று நிரூபித்தது. நான் சிந்திப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அதற்கான காரணத்தை அறியத்தந்தால் நன்றாக இருக்கும்.

2002 ம் ஆண்டளவில் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒன்றினை நடாத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த வீரமணி ஐயர் அவர்கள் மெய்மறந்து அந்த நிகழ்ச்சியினை ரசித்தார். அந்த நிகழ்ச்சிக்கு அனுசரனையாளர்களாக இருந்த இலங்கை வங்கியினர் தமது வங்கி பற்றி ஒரு பாடலை எழுதித்தருமாறு கேட்டனர். நீங்கள் எழுதித்தந்தால் தாங்கள் அதனை நித்யஸ்ரீ மூலம் பாடுவிப்போம் என்று கூற, வீரமணி ஐயரும் தமக்கே உரித்தான விதத்தில் உடனடியாக பாடலை எழுதிக்கொடுத்தார். நித்யஸ்ரீ அவர்களும் சவாலாக எடுத்து அதனை மேடையிலேயே உடனே பாடி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதுதான் வீரமணி ஐயா. சீர்காழி அவர்களுடன் சுட்டிபுரம் அம்மன் கோவிலில் நிகழ்ச்சிக்காக சென்ற போது காருக்குள்ளேயே பாடல் எழுத அதனை சீர்காழி மேடையில் பாடினார். இப்படியான நிகழ்வுகள் ஐயா அவர்களுக்கு அடிக்கடி நிகழ்ந்தது.

ஒரு கலைஞனை கௌரவிக்கும் பண்பு வளர்ந்து சென்றால் கலைகள் காக்கப்படும். அதனை பலரும் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து இப்படியான நிகழ்வுகளுக்கு ஆதரவு நல்க வேண்டும். 1971 காலப்பகுதிகளில் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழக உருவாக்கம் தொடர்பான ஒரு கூட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நடனம், இசை, சித்திரம் என்பன சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தி அதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வீரமணி ஐயா என்று யாழ்ப்பாணப் பல்கலைகழக சமஸ்கிருதத் துறை தலைவர் கலாநிதி.வி.சிவசாமி ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். இன்று அவர் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கடைசிவரை தான் சார்ந்த கலைகளை தன் தாய்மண்ணிலே பரப்புவதற்கு அவர் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருந்தார். இன்றும் அவற்றை அவருடைய துணைவியார் ஸ்ரீமதி சுசீலாதேவி தனித்து நின்று செய்து கொண்டு இருக்கிறார்.

அழகு தமிழில் புகுந்து விளையாடி அற்புதமான படைப்புக்களை தந்ததோடு மட்டுமல்லாமல் நடனத்துறையிலும் தமக்கென ஒரு தனியிடத்தை அமைத்து அந்த பாதையில் நிறைய மாணாக்கர்களை பயணிக்கவைத்து தமிழ் பேசும் நல்லுலகிற்கு அரும்பெரும் சேவையாற்றியுள்ளார். அவர் வழி வந்த பலர் இன்றும் பேரும் புகழோடும் இசையுலகில் இருக்கின்றார்கள் என்பது ஐயா அவர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய புகழே. சாகித்திய சாகரம் இன்று எம்மோடு இல்லை. அவர்களை நினைவு கூர்ந்து அவரது படைப்புக்களை நாம் பேணிப் பாதுகாத்து அதனை இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படியான ஒரு நேரத்தில் அவர்களது பாடல்களை உள்ளூர் கலைஞர்கள் தவிர்ப்பது ஏன் என்று விளங்கவில்லை. அப்படி ஒரு பாடலை பாடி மேடையை அலங்கரிப்பதில் அவர்களுக்கு என்ன இடைஞ்சல் என்றும் தெரியவில்லை. நாமே அவற்றை வளர்ப்பதற்கு முன்னிற்கவில்லை என்றால் மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும். இந்த விடயத்தை வட-இலங்கை சங்கீத சபையினருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

வீரமணி ஐயா பற்றி குறிப்பிடுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் பதிவு நீண்டு விடும் என்ற காரணம் ஒருபக்கம் இருக்கிறது. மீண்டும் ஒருதடவை ஒரு அந்தப் பெரும் கலைஞனை மனதிலே போற்றி, மண்ணிலே கலை வளர்க்க எம்மாலான காரியங்களை செய்ய வேண்டும்.

வாழ்க ஐயா நாமம்..!! வளர்க அவர் புகழ் !!!

நன்றி : திருமதி சுசீலாதேவி வீரமணி ஐயர் , வசந்தி வைத்திலிங்கம், பூலோகநாதன் கோகுலன்

திங்கள், 27 ஜூலை, 2009

நல்லூர் கந்தனுக்கு கொடி...!


அலைகடல் சூழும் ஈழநாட்டின் தலையெனத் திகழும் யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற பதியில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம்தான் நல்லூர்க் கந்தசுவாமி கோவில். தமிழ்க்கடவுள் முருகன். யாழ்ப்பாண அரசாட்சி காலங்களில் எல்லாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சிறப்பு மேலோங்கித்தான் இருந்தது. இது தொடர்பாக கானாபிரபா 2007 ம் ஆண்டு 25 நாட்களும் சிறப்பு பதிவிட்டிருந்தார். அதனை பார்வையிட......!

ஏனோ தெரியவில்லை நல்லூர்க்கந்தனுக்கு திருவிழா என்றதும் மனது குதூகலிக்கிறது. இனி 25 நாட்களும் ஒரே கொண்டாட்டம்தான். அனைத்து மக்களும் பால் வயது என எந்த வர்க்க பேதமுமின்றி ஒன்று கூடும் ஒரு ஈழநாட்டு கலாசார நிகழ்வுதான் நல்லூர்க் கந்தனின் வருடாந்த உற்சவம். ஒரு படி மேலாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்களும் இங்கே அதிகமாக ஒன்று கூடுவார்கள்.

ஆலயச் சூழல் எங்கும் ஒரே பக்திமயமாகத்தான் இருக்கும். அப்படித்தான் ஆலய சுற்றாடலும் அமைந்து இருக்கிறது. அதிகாலை 4 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை ஆலயம் அமைந்த பகுதிகள் பெரும் அமளியாகவே இருக்கும். அங்க பிரதட்சனை, அடி அழிப்பு என அதிகாலையிலேயே பக்தர்கள் கூடிவிடுவர். காலை நேரம் மிக ரம்மியமாகவே இருக்கும். அலுவலகங்கள் செல்வோர், பாடசாலை மாணவர்கள் என எல்லோரும் காலைப் பூசையில் கலந்து கொள்வர். காரணம் அவர்களால் பகற் திருவிழாவினை கண்டு களிக்க முடியாது. ஆனால் மாலைநேரம் எல்லோரும் அங்கே கூடுவர். மனதிற்கு இதமான பொழுதில் முருகவேற் பெருமான் தன் துணைவியர் வள்ளி தெய்வயானை சமேதராக திருவீதியுலா வருகின்ற காட்சி அற்புதமாக இருக்கும்.

நல்லூர் ஆலயத்தினை எல்லோரும் ரசிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நேரத்தினை கடைப்பிடிக்கும் பாங்கு. எல்லாமே சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தேறிவிடும். இதையெல்ல்லாம் நெறிப்படுத்துபவர் ஆலயத்தின் ஆதீன்கர்த்தாவாக இருக்கின்ற மாப்பாண முதலி மரபில் வந்த சண்முகதாச மாப்பாண முதலியார் அவர்கள். அவர் மூப்படைந்தாலும் மகனின் உதவியுடன் ஆலயத்தினை திறம்பட முகாமைத்துவம் செய்து வருகிறார்.

மாலை வேளைகளில் ஆலய வீதிகளில் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கங்கள், இசைக்கச்சேரிகள் என கலை கலாசார நிகழ்வுகள் ஒரு புறம். மறுபுறம் சிறிய சிறிய பெட்டிக் கடைகள், சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், குளிர்களி (ஐஸ்கிறீம்) நிலையங்கள் என எங்கும் மக்களை கவரக்கூடிய வகையில் வணிக நிறுவனங்கள் அமைந்திருக்கும்.

இன்று காலை சரியாக பத்து மணிக்கு கொடித்தம்ப மரத்தில் வேலவனின் கொடி ஏறிவிடும். இனி 25 நாட்களும் கோலாகலமும் குதுகலமும்தான்.

கடந்த வருட திருவிழாவிற்காக கிடுகுவேலி தாங்கிய பதிவு
இங்கே....!

"பஞ்சம் படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி.."