வெள்ளி, 25 செப்டம்பர், 2009

அன்னை மண்ணை அவனும் பிரிந்தான்..!!!

2006.09.25 திங்கட்கிழமை...அன்றைய அவன் பொழுதும் அமைதியாகத்தான் விடிந்தது. வழமைபோல காலையில் பரபரப்பு இல்லை. காரணம் அந்த பொழுதுகள் எல்லாம் யுத்தம் தொடங்கி யாழ்ப்பாணம் சல்லடையாக்கப் பட்டு கொண்டு இருந்த காலம். ஆனால் அன்று இவன் சற்று சிக்கீரமாகவே எழுந்து குளித்து விட்டு அவனது அப்பா வாங்கி வர இருக்கும் ‘உதயன்’ மற்றும் ‘தினக்குரல்’ பத்திரிகைகளுக்காக காத்து இருந்தான். அதில் இன்று கப்பல் புறப்படும் என்ற செய்தியை தேடினான். எங்கும் இல்லை. அப்போது இவனின் நண்பன் வந்தான். அவன் ஒரு மருத்துவன். அவன் சொன்னான். ‘மச்சான் இண்டைக்கு கப்பல் போகுது, நீயும் வாற எண்டால் வா’ என அழைத்தான். இன்றும் அந்தக் கப்பல் பயணத்துக்கென அவன் புறப்பட்டால் அது அவனுடைய 10 வது முயற்சியாக இருக்கும். இதுவரை 9 தடவைகள் முயன்று முயன்று தோற்ற களைப்பு அவனை சோர்வடையச் செய்தது. நண்பன் உறுதி படத்தெரிவித்தான் கப்பல் புறப்படுவதாக. இவனும் புறப்பட தீர்மானித்தான்.

பயணப் பொதியுடன் யாழ்.புகையிரத நிலையம் நோக்கி விரைந்தான். அங்கு ஏராளமான பயணிகள். எப்படி வந்தார்கள் என்று அவனுக்கு வியப்பு. இம்முறை அவன் புதிதாக உத்தியோகத்தர்களுக்கான நிரையில் நின்றான். இதுவரை கப்பல் பயணம் அவனுக்கு அளித்த ஏமாற்றங்கள் , இந்தமுறையும் அவனை நம்பிக்கை இழக்கவே செய்துவிட்டது. இருந்து சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல முயன்றான். அவனது நிரையில் நின்றவர்களை உள்ளே எடுக்கத்தொடங்கி விட்டார்கள். இவனது முறை வந்தது. இதுவரையில் அவனைத் தடுத்து நிறுத்திவந்த இராணுவ மேலதிகாரிகளில் ஒருவரிடமே இம்முறையும் மாட்டிக் கொண்டான். அவர் எங்கே போவதாக சிங்களத்தில் கேட்க இவன் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கண்டி என்று பதிலளித்தான். ஏன் என்று கேட்க மேற்படிப்புக்காக பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற ஒரு கடிதத்தை காட்டினான். இம்முறை அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். துன்பம் என்னவென்றால் இதே கடிதத்தை பல முறை காட்டிய போது அவர்கள் அவனுக்கு சொன்ன பதில் இது புகைப்படப் பிரதி உன்னை எப்படி நம்புவது என்று கேட்டார்கள். இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது போல உனர்வு. அதுவும் பிரபல பேராதனைப் பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதம். என்ன செய்வது எல்லாம் அங்க பிறந்த குற்றம் என்று மனதுக்குள் நினைத்து தன்னை தேற்றி கொண்டு முன்னே நடந்தான். நான்கு பிரதான கொட்டில்கள். ஒவ்வொன்றிலும் வரிசையாக நின்று நின்று முன்னே போக வேண்டும். இப்படி நத்தை போல நகர்ந்து நகர்ந்து இரண்டாவது கொட்டிலுக்கு விரைந்தான். அங்கே பயண அனுமதிப் படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். சகல விபரங்கள், அலைபேசி இலக்கம், எங்கே போகிறான், ஏன், யாருடன் தங்க போகிறான், இப்படி பல விடயங்கள். எல்லாம் அறிந்து படிவம் ஏற்றுக்கொள்ளப் பட்ட உடன் அடுத்த கொட்டில் இராணுவ புலனாய்வுத் துறையினரது. அவர்கள் எல்லோரையும் வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களோடு சில தமிழ்க் குழுக்களும் இருந்தது அவனை கடுப்பாக்கியது. அதிலும் அவர்களது கேள்விகள் அவனை சினத்துக்குள்ளாக்கின.

எல்லாம் விதி என்று நினைத்துக் கொண்டு அவர்களிடம் முகத்தை கொடுத்தான். அவர்களும் அவனைப் போட்டு துளைத்தெடுத்தனர். அந்த பெரிய தடையை தாண்டி அவன் அடுத்த கொட்டிலுக்குள் நகர்ந்தான். அதில் நின்று பார்க்கும் போது அருகே ஓ.எல்.ஆர் சேர்ச் மாதா கோவில் ஒன்று இருந்தது. அவளிடம் இறைஞ்சினான் இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறாயே என.....! அவளும் எம்மைப் போல் ஏதும் செய்ய முடியா நிலையோ என பேரூந்துக்குள் ஏறினான். எல்லோர் முகங்களிலும் ஏதோ ஒரு மகிழ்ச்சி. அவன் மட்டும் அசையவில்லை. ஏனெனில் இதற்கு முன்னர் போனவர்களில் பலபேர் காங்கேசன்துறையில் வைத்து இடம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவன் பொறுமையாக இருந்தான். இதயம் முழுவது குலதெய்வம் நாமம் இரகசியமாக ஒலித்த வண்ணமே இருந்தது. 6 பேருந்துகள் தொடராக பயணித்தது தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை நோக்கி. காலையில் இருந்து எதுவும் இல்லை. வயிறு வாட்டத்தொடங்கியது.

1200 பயணிகள் வரும் வரை யூனியன் கல்லூரிதான். இரவு முழுவதும் அங்கே தங்க வேண்டும். அடுத்தநாள் தான் பயணம். வந்திறங்கியவுடன் மீண்டும் ஒரு பதிவு. அதிலே ஒரு கொடுமை என்னவென்றால், கடலில் பயணம் செய்யும் போது தமக்கு ஏதாவது நடந்தால் தாமே பொறுப்பு என ஒப்பமிட வேண்டும். நமது நாடாம். நமது கடலாம். ஆனால் நாம் போகும் போது எமக்கு ஏதும் நடந்தால் நாமே பொறுப்பு என்ற கையொப்பம். அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். என்னடா இழவு இது. எங்காவது இப்படி இருக்குதா? எல்லாம் போகட்டும். இதுதான் காலம். இரவு ரொட்டியும் பிளேன் ரீயும் தான் உணவு. கண்டபடி உண்ணவும் பயமாக இருந்தது அவனுக்கு. காரணம் மலசல கூட வசதிகள். 1200 பேர் , 6 மலசல கூடம் பெண்களுக்கும் சேர்த்து. இதுதான் தமிழ் மக்களை கவனிக்கும் பண்பு. எம்மவர்களோ இதற்குள்ளும் லக்ஸ் போட்டு குளிப்பது...சிக்னல் போட்டு பல் துலக்குவது என எந்த சலனமும் இல்லாமலும் இருந்தனர். அவனுக்கு இவைகள் மனதிற்குள் சிரிப்பைத்தந்தன. தன்னுடன் வந்த நண்பர்களுடன் சற்று நேரம் கதைத்து விட்டு ஓரமாக கிடந்த ஒரு வாங்கில் படுக்கத்தயாரானான். தீடிரென காதைப்பிளக்கும் சத்தத்துடன் வெடிகுண்டுச்சத்தம். திகைத்து போனான். அவனுக்கு தெரியும் அது யுத்தம் தீவிரமான காலம். ஆனால் அந்த் ‘ஆட்டிலறி’ அடிகளின் ஓசையில் பல குழந்தைகள் வீரிட்டு அழுதன. என்னால் மட்டும் என்ன எவராலும் எதுவும் செய்ய முடியாது என பொருமி விழித்திருந்தான்.

அடுத்தநாள் விடியலுடன் பேரூந்துகளில் பயணிகள் அடைக்கப்பட்டு துறை முகத்தை நோக்கி நகர்ந்தனர். பேரூந்துகளின் பக்கம் எல்லாம் கறுப்பு மெழுகு சீலைகளால் அடைக்கப்பட்டு இருந்தது. காரணம் அது உயர்பாதுகாப்பு வலயம். எவரும் எதையும் பார்க்க கூடாது என்பதற்காக. எல்லாம் எமது விதி என எண்ணி புறப்பட்டான். இன்னமும் அவன் மனது சமாதானம் அடையவில்லை. தனக்கு இன்று கூட கப்பலில் ஏற வாய்ப்பு கிடைக்குமா என எண்ணினான். பேரூந்தால் இறங்கிய உடன் மீண்டும் ஒரு சோதனையும் பதிவும். தமிழன் என்றாலே பதிவு சோதனையும் கலந்த வாழ்வுதானா என்றாகி விட்டது. அலைபேசியை ‘சிம் கார்ட்’ வேறாகவும் ‘பற்றறி’ வேறாகவும் பிரித்து வைக்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவை ஏற்று செய்தான். எல்லாம் பிரித்து மேய்ந்தார்கள். தன்னை அனுமதித்துவிட்டார்கள் என்றதும் கொஞ்சம் சந்தோஷப்பட்டவன், கப்பலில் இடம் இல்லை என்று தன்னை திருப்பி அனுப்புவார்களோ என்று மனதிற்குள் பயந்தான். காலை 7.30 மணியளவில் இருந்து காத்திருக்க தொடங்கினான்.
அனல் பறக்கும் வெய்யில். வெட்ட வெளி. பெண்கள் குழந்தைகளை ஒரு தகர கொட்டகைக்குள் இருக்க அனுமதித்தனர். குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. கொண்டு சென்ற சாரம்(லுங்க்) தான் அவனுக்கு உதவியது குடையாக. அவனது பொதியில் எல்லாம் வெயிலில் உருகிய தாரின் அடையாளம். எவ்வளவை பொறுத்தோம். இதை பொறுக்கமாட்டோமா. தண்ணீரை கூட தராமல் காத்திருக்க வைக்கப்பட்டோம். மதியம் 2.30 மணிக்குத்தான் அவர்களுக்கான கப்பல் கரையைத்தொட்டது. அதிலிருந்து வேக வேகமாக பயணிகள் இறக்கப்பட்டனர். அவர்களோடு சீருடையினரும் இறக்கப்படுவதை அவன் அவதானித்தான். இவர்களையும் ஏற்றத்தயாராகினர். பொதிகளைத் தூக்கிக் கொண்டு நிரையில் நின்று நடந்தான். இவர்களோடும் சீருடையினர் ஏற்றப்பட்டனர்.

4500 பேர் பயணிக்கும் கப்பல். 1200 பேர் பயணிகள். மிகுதிப்பேர் இவங்களா என வியந்தான்? எங்களை ஏற்றுகிறோம் என்ற பெயரில் அவங்கள் தங்களை அல்லவா ஏற்றுகிறார்கள். அவர்களை அனுப்ப வேண்டும். அதற்கு பாதுகாப்புக்கு நாம் தேவை போல..! எவரோடு இதைக் கதைக்க முடியும். மனதிற்குள் புழுங்கினான். கடலில் அவனுக்கு இப்படியான கப்பலில் புதிய பயணம். முன்னர் கிளாலி கடல்நீரேரியூடாக பலதடவைகள் சென்று வந்தாலும் இது அவனுக்கு புதியதே. ஆனால் இதையெல்லாம் அனுபவிக்கும் மனநிலையில் அவன் இல்லை. தனது தாய் மண்ணைப் பிரிகிறோம் என்ற கவலையே....! இனி எப்போது மீண்டும் கால் பதிப்பேன் என்ற ஏக்கமே...! கனத்த நெஞ்சத்தோடு நின்ற இவனையும்
சேர்த்து சுமந்து கொண்டு கடலில் நின்ற கப்பல் புறப்பட்டது.

‘விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா...!’

மூன்று வருடங்கள் கடந்தும் இதே ஏக்கத்தோடும்...மனக்குமுறலோடும் அவன் இன்றும் இருக்கிறான்...என்றாவது அன்னை மண்ணில் அடி வைப்பேன் என்ற எண்ணத்தோடு...!!! காத்திருப்புத்தானே வாழ்க்கை.

புதன், 9 செப்டம்பர், 2009

முதிர்கன்னி.....!

அண்மைக்காலமாக மனதில் அடிக்கடி ஒலிக்கின்ற ஒரு பாடல், ‘சொல்லாயோ வாய்திறந்து...வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய்திறந்து....’ மோகமுள் படத்தில் வரும் ஒரு அருமையான பாடல். ஜானகியின் குரல் மனதை பிழிகிறது. பல விருதுகளைக் பெற்றாலும் நாவல் படமாக்கப்பட்ட விதத்தில் சில விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு பெண்ணின் அதுவும் முதிர்கன்னி ஒருவரின் மனநிலையை, அவளின் உணர்வலைகளை வெளிக்காட்டுகின்ற ஒரு அற்புதமான பாடல். வாலியும் தன்பங்கிற்கு வார்த்தைகளில் கோலம் போட்டு அந்த உணர்வுகளின் விம்பமாக வரிகளை வடித்திருக்கிறார்.




முதிர்கன்னி...இன்று எமது சமூகத்தில் இருக்கின்ற ஒரு பிரச்சினை. ஒரு பெண் தன்னுடைய உணர்ச்சிகளுடன் போராடும் போராட்டம். எவருக்கும் தெரியாத இரகசிய வேதனை. வெளியே சொல்லமுடியாததும் உள்ளே எதுவும் செய்ய முடியாததும் ஆன ஒரு உளவியல் யுத்தம்.

‘கோயிலை இடிச்செண்டாலும் குமரை கரை சேர்க்க வேண்டும்’ இது அந்தநாட்களில் எம்மவரிடையே உலாவந்த ஒரு சொல்லாடல். இந்த ஒன்று போதும் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது எவ்வளவுதூரம் முக்கியம் என்பதற்கு. எங்கள் ஊரில் சொல்வார்கள் அக்கா இருக்க தம்பி மணம் செய்து கொண்டால்....குமர் வீட்டுக்க இருந்து மூச்சு விட இவன் ஏன் இப்படி செய்தவன்.. இப்படி எல்லாம் சொல்வது எங்கள் ஊரில் இருக்கின்ற பெண்கள்தான். அவர்களுக்குத்தானே எம்மை விட வலிகளின் வேதனை அதிகம் தெரியும். அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணலாம்...அல்லது அந்தக் கற்பனை மூலம் காட்சிப்படுத்தலாம்.. ஆனால் எப்பொழுதும் எம்மால் உணரமுடியாது.

எனக்கு தெரிந்த ஒரு இலட்சாதிபதி, தன்னுடைய பணத்தை முன்வைத்து தன்னுடைய மகளுக்கு டாக்குத்தர் அல்லது எஞ்சினியர் அல்லது அக்கவுண்டன் அல்லது படித்த மாப்பிள்ளை தேடித்திரிந்தார். இதுவரை அகப்படவில்லை. இது 30 வருடங்களாக தொடர்ந்து, இன்று அந்த பெண் 50 வயதை கடந்துவிட்டாள். விடயத்தை ஊன்றிப் பார்த்தால், அவருடைய வரட்டு கௌரவமும், அந்த பணத்திமிரும் தான் காரணமாக தெரிகிறது. அவருடைய அந்த நினைப்பால் இன்றும் அந்தப் பெண் மணவாழ்வின் சுகம் அனுபவிக்காமல் இருக்கிறாள்.

சில இடங்களில் பெண்களின் அழகு, குறைபாடுகள், ஊனம் என்பன இவற்றிற்கு காரணமாக இருந்தாலும் அதையும் தாண்டி எந்த ஒரு குறையும் இல்லாதவர்கள் கூட இன்றும் முதின்ம வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் முன்வைக்கப்படுகின்ற ஒரு முக்கியமான குற்றச்சாட்டு ஆண்கள் கேட்கும் சீதனம். ஆனால் அதை கொடுக்கின்ற அளவிற்கு வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் சில விட்டுக்கொடுக்காத தன்மைகளால் அந்த திருமணங்கள் தள்ளிப்போய் பெண்கள் காணும் திருமணம் என்ற கனவு சிதைந்து விடுகிறது.

நன்றி : ஷீ-நிசி கவிதைகள் வலைப்பூ

தற்காலத்தில் வேலைக்கு போகின்ற பெண்கள் தங்களுடைய சொந்தக்காலில் நிற்கிறார்கள். வேலைகளில் பதவி உயர்வு மற்றும் சில சலுகைகள் காரணமாக திருமணங்களை தள்ளிப் போடுகிறார்கள். அது அவரவர் விருப்பம். அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் இவர்கள் நாலு இடங்களுக்கு சென்று படித்து, நாலு இடம் பார்த்து ஒரு பட்டறிவு பெற்ற நிலையில் உதிர்க்கும் வார்த்தைகளில் முக்கியமானவை ‘திருமணம் மட்டுமா வாழ்க்கை, எங்களால் திருமணம் இல்லாமல் வாழமுடியும்....’ என்பதாக அமைகிறது. இந்தக் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால் கிராமத்தில் பாமரனாக இருந்து கல்வியறிவு போதாத நிலையில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலைகளை மட்டும் செய்து கொண்டு நான்கு சுவர்களுக்குள் தங்களையும், தங்கள் எண்ணங்களை மட்டும் அகன்ற வானில் சிறகடிக்க விட்டு விட்டு இன்றும் மணநாளிற்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், வேலைசெய்பவர்கள் தங்கள் புலன்களை வேறு இடத்தில் செலுத்தி சில உளப்பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வார்கள். இவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது மிகப்பெரிய விடயம். அதைக் கனவாக நினைத்தே வாழ்கிறார்கள்.

சில இடங்களில் தாய், தந்தையர் ஒவ்வொரு காரணங்களை சொல்லி திருமணங்களை தட்டிக்கழிக்கின்ற போது அவர்கள் தாங்களாகவே தங்கள் மனதுக்கு பிடித்த ஒருவரை பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டு போய்விடுவார்கள். சமூகம் அவனுக்கோ அல்லது அவளுக்கோ மிக உயரிய விருதான ‘ஓடுகாலி’ விருதை வழங்கிவிடும். திருமணம் எனக்கு வேண்டாம் என்ற அந்தப் பெண்கள் சொல்லியிருந்தால் எவராலும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் பெற்றோரின் சில அசமந்தப் போக்கும், அவர்களின் வீணான பிடிவாதங்களும் இளம் கன்னிகளை முதிர்கன்னி என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. வீட்டுக்காரரை நம்பியோ அல்லது இந்த சமூகத்தை நம்பியோ எந்த வாழ்வுக்குள்ளும் புக முடியாத பெண்கள் இறுதியில் சாதி, மத, வயது எந்த வேறுபாடுமின்றி ஒரு ஆண்மகனுடன் சென்று தன்னுடைய புதிய வாழ்வை தொடங்கும் சந்தர்ப்பங்கள் எங்கள் கண் முன்னே நாம் பார்த்திருக்கிறோம்.

ஆண்களும் இந்த இடங்களில் நிறையவே பிழைவிடுகிறார்கள். தேவையற்ற முறையில் சீதனம் கேட்பது. அது கிடைக்கவில்லை என்றால் எந்த சமரசமும் இன்றி திருமணம் வேண்டாம் என்பது. இவைகள் எல்லாம் அந்தப் பெண்களின் உளவுரணை வெகுவாக பாதிக்கின்றது. பெண்ணைப் பெற்றவர்கள் வறுமையானவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களிடம் அதிகமாக சீதனம் கேட்டு அவர்களை மேலும் சிக்கலாக்குகிறார்கள். இந்த விடயங்களில் அந்த பெண்ணோ அல்லது அவர்களைப் பெற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. ஆண்களாக திருந்தாவிட்டால் இந்த சீதனப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நண்பன் ஒருவனிடம் இது சம்பந்தமாக உரையாடிய போது, அவன் பகிர்ந்து கொண்டான், தன்னுடைய உறவினர் ஒருவர் காலம் பிந்தி செய்து கொண்ட திருமணம் மூலம் பெற்றுக் கொண்ட குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்ததாகக் கூறினான். மருத்துவரிடம் இது தொடர்பாக ஆராய்ந்தால் அது பிந்திய திருமணத்தால் ஏற்பட்டது என்று தெரிவித்துவிட்டாராம். இன்னொரு நண்பனின் மனக்குமுறல் இது...இது சரியா அல்லது பிழையா என்பது பற்றி இங்கு நான் விவாதிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அது சரி என்றே சொல்வேன். அவனின் மணமகாத ஒரு உறவுக்காரப் பெண். அந்தப்பெண் யாருடனாவது களவாக உறவு வைத்திருக்கிறார் என்பதை அறிந்தால் நான் மகிழ்வடைவேன் என்றான். அவனின் எண்ண ஓட்டத்தை என்னால் ஊகிக்க முடிந்தது. காரணம் அந்தப்பெண்ணின் திருமணத்திற்காக அவனின் குடும்பம் அலைந்த அலைச்சல். ஒவ்வொரு திருமண முயற்சியிலும் தோல்விகள். அதனால் அந்தப் பெண் சந்தித்த திருமண ஏமாற்றங்கள். இவை எல்லாம் அவனின் மனதில் இப்படி ஒரு எண்ணத்தை தோற்றுவித்துவிட்டது.

==நிலாரசிகனின் கவிதைகள்
வலைப்பூவில் இருந்து ஒரு சில காட்டமான வரிகள்...======

முப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு
தெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு

மூணுமுடிச்சு மட்டும் கிடைக்கலையே
ஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே

பூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்
பூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்?

===
ஆறாம் திணை தந்த இன்னொரு வலி......
மார்கழி தோறும்
நோன்புகள் இருந்து
மணாளன் நோன்பைத்
தொடர்கிறாயே அக்கா..!

அகவை நாற்பதைத்
தாண்டியபின்னுமா
புரியவில்லை
நோன்பின் சிறப்பு.?

இது எனது நண்பர்கள் மூலமாக நான் கேட்டறிந்த கதைகளும், எனது உறவுகளிலே இன்னும் முதிர்கன்னியாக இருக்கும் அந்த பெண்களுமே எண்ணத்தில் எழுந்த கருக்கள். மனதிலே ஆழமாக கிடந்த ஒரு ஆதங்கம். ஆங்காங்கே இவற்றை பார்த்துப் பார்த்து வளர்ந்திருக்கிறோம். சாத்திரம் பார்த்து திருமணம்...குறிப்பு பொருந்தவில்லை அதனால் ஒன்றும் சரிவருதில்லை என்ற எண்ணம்....இந்த வட்டத்துக்குள் இருந்து வெளியே வர நாம் முயற்சிக்காத வரைக்கும், சீதனம் என்ற சமூக வியாதி அழியாத வரைக்கும் இந்த வேதனைகளை நாம் கண்டுகொண்டே வாழ வேண்டும்.