இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 அக்டோபர், 2009

வாழ்க ”தமில்” - தீபா”வலி”

மூன்று நாட்களிற்கு முன்னர் முகப்புத்தகத்தில் ஒரு நண்பர் இரண்டு நிழற்படங்களை தன்னுடைய முதல் பக்கத்திலே போட்டிருந்தார். பார்த்ததும் ஒரு புறம் சிரிப்பு மறுபுறம் வேதனை. ஏன் என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள் புரியும்.
இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்பான “வெண் தாமரை இயக்கம்” என்ற அமைப்பே இந்தப் பிரசுரத்தினை வெளியிட்டிருக்க வேண்டும். அமைப்பினைப் பொறுத்தவரை அது ஒரு தேசிய அமைப்பு. இலங்கையிலே இருக்கின்ற அனைத்து தேசிய மக்களையும் இணைத்துத்தான் (பெயரளவில்)அது உருவாக்கப்பட்டது. அவர்களுடைய அசட்டைத்தனம் இந்தப் பிரசுரத்திலே அப்பட்டமாக தெரிகிறது. இதன் உள்நோக்கம் (உள்குத்து) என்ன..? என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் தமிழ் மொழியில் பிழையாக, பிரசுரம் ஒன்றை வெளியிட்டால் அதிலே பிழை இருந்தால் எவரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம்தான் மேலோங்கி நின்றிருக்க வேண்டும். ஒரு தேசிய அமைப்பிலே தமிழ் தெரிந்த ஒருவர் இல்லாது இருக்க வேண்டும். அப்படி என்றால் அது ஒரு தேசிய அமைப்பு அல்ல. தமிழர் ஒருவர் இருந்திருந்தால் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான பிரசுரங்கள் வெளியிடும் நேரத்தில் தன்னும் அவர்கள் அந்த தமிழ் அன்பரை நாடியிருப்பார்கள். ஆகவே எதுவாயினும் வேண்டும் என்றே செய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இப்படியான தமிழ் கொலை வெறும் அனாசயமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஏன் தமிழர் கொலையே அவ்வாறு நடக்கும் போது தமிழ் கொலை என்பது பற்றி கதைப்பது அர்த்தமில்லைத்தானே.
ஆனால் இப்படியான சம்பவங்கள் நிறைய இன்னமும் நடந்து கொண்டே இருக்கின்றன. இதனை கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் பார்த்தும் மௌனிகளாக இருக்கிறார்கள் என்று எண்ணும் போது வருத்தமே அதிகமாகிறது. இந்து சமுத்திரத்தின் முத்து என்ற அந்த அழகிய தீவின் அழிவுகளுக்கு காரணங்களில் முக்கியமானது மொழி மீதான வல்லாதிக்கமே.
சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா? திருந்தாவிட்டால்....இந்த பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

******************

தீபாவளி பற்றி அனைவரும் பதிந்தாகிவிட்டது. அடுத்தவர்களுக்கு தீபாவளி ஈழத்தமிழனுக்கோ அது தீபா’வலி’ என்று சொல்லி வலிக்களை தந்த வடுக்களை மீண்டும் ஒருதடவை வருடியாகி விட்டது. ஆனால் தீபாவளி தந்த வடுக்களில் முக்கியமானது. 1987 ம் ஆண்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மீது இந்திய அமைதி காக்கும் படையினரால் (?) நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான ஒரு படுகொலை. அங்கே வைத்தியர்கள், தாதியர்கள், அப்பாவி பொது மக்கள் என பலதரப்பட்டவர்களும் குண்டடி பட்டு கீழே வீழ்கிறார்கள். உயிரையும் விட்டுவிடுகிறார்கள். காலநதி உருண்டோடி கரைசேர்ந்தாலும் ஆறாமல் மனதில் இருக்கக்கூடிய வடுக்கள் இவை. ஆனால் இந்த இந்த வடுக்கள் என்றும் மாறதவை....அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் நினைக்காமல் இருக்கவும் முடியாது. இது தொடர்பாக வலைப்பூவில் உலாவிய போது இந்த இணைப்பு கிடைத்தது. உங்களுடனும் பகிர்ந்து கொகிறேன். அவலங்கள்

புதன், 17 ஜூன், 2009

தோனியும் தோல்விகளும்....!

ஒரு போட்டி என்று வந்துவிட்டால் ஒருவர் தோற்றுத்தான் ஆக வேண்டும். அதுதான் நியதி. எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்த தோனி இப்போது அண்மைக்காலமாக சரிவுகளை சந்தித்து வருகிறார். ஒரு தொடர் தோற்றதும் இதனை சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம். தோனியை எல்லோரும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினார்கள். அப்பா நீதான் எங்கள் தெய்வம். எம்மை காக்க வந்த காவல் வீரன் என்பது போல வாழ்த்தியும் புகழ்ந்தும் தள்ளினர். ஊடகங்கள் அவரின் புகழை பலூனை ஊதி ஊதி தள்ளுவது போல பெரிதாக்கினர். இன்று வசை பொழிய தொடங்கிவிட்டனர். அதிர்ஷ்டம் தோனியை கைவிட ரசிகர்களும் கைவிட தொடங்கி விட்டார்கள் போலும். இங்கிலாந்துடனான போட்டிக்கு பின்னர் எரித்த கொடும்பாவி ரசிகர்களின் எண்ணங்களை சொல்லும்.

தோனியால் இந்தியா பல வெற்றிகளை பெற்றது. அவுஸ்திரேலியாவில் நீண்ட ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டித்தொடரை கைப்பற்றி கோப்பையை கொண்டு வந்தார். ஆனால் அதற்கு பின்னர் இரண்டு இறுதிப்போட்டிகளில் சொதப்பிவிட்டார். ஆனால் சில தொடர்களில் இந்தியாவிற்கு வெற்றியை குவித்தார். இப்போது நிலைமை கொஞ்சம் தலைகீழ்.

ஐபிஎல் போட்டிகளிலும் தோனியின் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் சரிந்தே இருந்தது. பின்னர் ஒருவாறாக தேறி அரை இறுதி வரை வந்தது. ஆனால் தோனியின் துடுப்பாட்டம் மந்தமாகவே காணப்பட்டது. இப்பொழுது அவரது அதிரடிகள் பெரிதாக இல்லை. காரணம் தெரியாது(பால் கிடைப்பதில்லை போலும்).
அவர் ஒரு அதிரடி துடுப்பாட்ட வீரர். அவ்வளவே. நல்ல துடுப்பாட்ட வீரரா? யோசித்துத்தான் சொல்ல வேண்டும். அவரது அடிகளை பார்ப்பவர்களுக்கு தெரியும், சிலவேளைகளில் பாடசாலை மட்ட வீரர்கள் ஆடுவது பார்க்க சிறப்பாக இருக்கும். பலம் ஒன்று உள்ளது. அது மட்டும்தான் அவருக்கு அதிக அளவில் கை கொடுக்கிறது. 20-20 போட்டிகளில் அவரின் 100 பந்துகளுக்கான ஓட்டவிகிதமும் அண்ணளவாக 100 தான். பெரிதாக துடுப்பாட்டத்தில் சாதிக்கவில்லை என்று சொல்லலாம். சில வீரர்களின் முட்டாள்தனமான முடிவு சில போட்டிகளை மாற்றி எதிரணிக்கு வெற்றியை தாரை வார்த்து கொடுக்கும். அதன்மூலம் சிலர் புகழ் அடைந்தனர் என்பதற்கு தோனியின் முதலாவது 20-20 போட்டி கோப்பை இறுதி போட்டியை சொல்லலாம். (இப்படித்தான் 1999 ல் குலூஸ்னர் பார்த்த அடி முட்டாள்தனமான செயல் தென்னாபிரிக்காவை பாதித்தது).

இந்தியாவின் பெரிய பலமே துடுப்பாட்டம்தான். அதுவும் பெரிதாக இந்த தொடரில் சோபிக்கவில்லை. தோனியோடு சேர்ந்து அவருக்கு பின்னால் இளம் அணி இளம் அணி என்று அலைந்த தேர்வாளர்கள் இனி என்ன செய்வார்கள்.

இதற்கிடையில் விரேந்தர் ஷேவாக் உடன் முறுகல் என்ற கதையும் உள்ளது. இது எவ்வளவு உண்மை என்று தெரியாது. எல்லாம் சேர்ந்து தோனியை வாட்டி வதைக்கின்றன. களத்தில் எடுக்கும் முடிவுகளில் குழப்பம். அணித்தெரிவுகளில் குழப்பம் (இதை விட நல்ல அணி எவ்வாறு எடுப்பது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) என்றெல்லாம் விமரிசனம் பலவாறாக உள்ள நிலையில் தோனி நிலை கவலைக்கிடமே. ஆனால் அவருக்கோ அவர் தலைமைப்பதவிக்கோ இப்போதைக்கு எந்த ஆபத்தும் அண்மையில் இருக்காது.

இந்த வலைப்பூக்களில் ஒரு பதிவிலே தோனிக்கு அதிர்ஷ்டம் மட்டுமே உள்ளது என்று எழுதிய ஒருவர், பின்னர் சொன்னார் இதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். என்னை அடிக்க வருவார்கள். ஏன் வம்பு நான் ஒதுங்குகிறேன் என்றார். அவர் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

அடுத்து மேற்கிந்திய தொடர். அதுவும் அவர்கள் மண்ணில். பார்ப்போம் சாதிப்பாரா என்று. இது ஒன்றும் தோனிக்கு எதிராக எழுதிய பதிவல்ல. ஆனால் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களுக்கான பதிவு. அவ்வப்போது தோல்விகள் வரத்தான் செய்யும். தாங்கித்தான் ஆக வேண்டும். விமரிசங்கள் கடுமையாக வரும். புகழ்ந்து புகழ்ந்து எழுதிய ஊடகங்கள் தோல்வியை சந்தித்த உடன் காலில் போட்டு மிதிப்பது போல எழுதுவார்கள். கங்குலியிடம் இருந்து இதை படிக்க வேண்டும். எனவே இந்தியா நன்றாக விளையாடக்கூடிய அணி. அவர்களைப்போல அணி உலகில் இல்லை. ஏனெனில் எப்பொழுது வெல்வார்கள். எப்பொழுது கவிழ்ப்பார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது. எதிர்பாராத நேரத்தில் அடித்து நொருக்கி ஆட்டம் போடுவார்கள். ஆனால் எதிர் பார்க்கின்ற நேரத்தில் காலை வாரிவிடுவார்கள். அதுதான் இம்முறையும் ரசிகர்களுக்கு நடந்துள்ளது.

இதுதான் கிரிக்கட். அதிலும் இதுதான் இந்திய கிரிக்கட்...!

புதன், 17 டிசம்பர், 2008

ராகுல் ட்ராவிட்: காலம் முடிகிறதா...?


1996ம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடிய போது இரண்டு புதிய வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஒருவர் சவுரவ் கங்குலி. இன்னுமொருவர் ராகுல் ட்ராவிட். முன்னவர் வங்கதேசம் பின்னவர் கர்நாடக மாநிலம்.

இந்த இருவரும் தமக்கு தந்த பணியை செவ்வனே செய்தனர். கங்குலி ஓய்வும் பெற்றுவிட்டார். ஆனால் ட்ராவிட் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் அதேவேளை அவருக்கான ஓய்வு நேரம் நெருங்குகிறதா? அல்லது கட்டாய ஓய்விற்கு தள்ளப்படுவாரா என்ற பல கருத்துக்கள் எழுந்துள்ளது.

இந்தியாவின் துடுப்பாட்ட சுவர் (BATTING WALL) என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். நிதானமாக தொடங்குவார். பின்னர் களத்தில் இவர் நின்றால் ஓட்டம் ஏறுவது தெரியாது. அதிரடியும் இல்லை. ஆமை வேகமும் இல்லை. நிதானமாக ஓட்டங்களை குவித்து எதிரணியை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவார். இவரால் இந்தியா பெற்ற வெற்றிகள் ஏராளம். ஏன் தனித்து நின்றே வெற்றிகளைக் குவித்து இருக்கிறார். அப்துல் ஜபார் தமிழில் அழகாக சொல்வதானால் மிகச்சிறந்த மட்டையாளர்.

சிறிதுகாலமாகவே ட்ராவிட் உடைய மட்டை ஓட்டங்களை சேகரிக்க தவறுகிறது. காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. இது ட்ராவிட்டுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஏன் தேர்வாளர்களுக்கு கூட சங்கடமாகத்தான் இருக்கிறது. அற்புதமான வீரர். Class is Permanent. Form is Temporary. ட்ராவிட் இடம் எப்போதும் தரம் இருக்கிறது. ஆனால் இப்போது நேரம் இல்லை. நன்றாக ஆடக்கூடியவர். ஆனால் இப்போது முன்பு மாதிரி இல்லை. 2006 ம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கான் சுற்றுப்பயணத்தில் இருந்து இந்த பிரச்சினையை ட்ராவிட் எதிர் கொள்கிறார் என்றுதான் கூறவேண்டும். அதற்கு முன்னதாக மேற்கிந்தியாவிற்கெதிரான தொடரை வராலாற்று வெற்றியாக படைத்ததில் ட்ராவிட்டின் துடுப்பாட்டமும் தலைமைத்துவமும் காரணம்.

2006 இறுதியில் தென்னாபிரிக்கத் தொடரில் இருந்து கடைசியாக சென்னையில் நடந்த இங்கிலாந்திற்கெதிரான போட்டி வரை உள்ள தொடர்களின் பெறுபேறுகள் கொண்ட அட்டவனை கீழே உள்ளது.



மேலுள்ள அட்டவணையில் இருந்து ட்ராவிட்டின் மோசமான பெறுபேறு பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். எல்லா காலத்திலும் எந்த துடுப்பாட்ட வீரனும் சாதிக்க முடியாதுதான். லாறா, சச்சின், பொண்டிங், சங்ககார போன்றவர்களும் சொதப்பித்தான் இருக்கிறார்கள். இவர்களை நினைத்து ரசிகர்களும் கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு தொடர்களுக்கு பிறகு தேறி விடுவார்கள். இப்போது ட்ராவிட் அப்படியும் இல்லை. போர்மில் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவரின் தரமான விளையாட்டிற்காகத்தான் இவ்வளவு நாளும் அணியில் சேர்த்திருந்தார்கள். அவர் மீண்டு வருவார் மீண்டு வருவார் என்றால் ட்ராவிட் மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்.

தென்னாபிரிக்காத் தொடருக்கு முன்னர் அவரது சராசரி 58.75 இப்போது அவரைப் பொறுத்தவரைக்கும் அதளபாதாளம். முன்பு தொடக்கத்திற்குத்தான் அதிக பந்துகளை சந்திப்பார். ஆனால் போகப்போக ஓட்டங்களை குவித்து 100 பந்துக்கான ஓட்டவீதத்தை(Strike Rate)நன்றாக பேணுவார். இப்போது துடுப்பாடும் போது கூட தெரிகிறது. தற்காப்பு ஆட்டமும், பதட்டத்துடனும் கூடிய நிதானமும் கொண்டதாக உள்ளது. சில வேளைகளில் ட்ராவிட் தானா இப்படி துடுப்பெடுத்தாடுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு துடுப்பாட்ட சுவர் சரிகிறது என்று எல்லோருக்கும் கவலை.

தேர்வாளர்களின் தலைவராக இப்போது ஸ்ரீகாந்த். இவர் மனது வைத்தாலே ஒழிய, மற்றபடி இந்த துன்ப நிலை நீடித்தால் ட்ராவிட் அடுத்த தொடருக்கு தெரிவு செய்யப்படுவது சந்தேகமே. ஏனெனில் புள்ளிவிபரங்கள் எல்லாம் ட்ராவிட்டுக்கு எதிராகவே உள்ளன. வரப்போகின்ற போட்டிகள் இந்தியா, இங்கிலாந்தை விட ட்ராவிட்டுக்கு கடும் சோதனையாக இருக்கும். சென்னையில் வெற்றி பெற்றதால் வெற்றி அணியை (WINNING COMBINATION) குலைக்காமல் விளையாடுவார்கள். ஒருவேளை தோற்றிருந்தால் நிலைமை வேறுமாதிரியாக மாறி இருக்கும்.

நல்ல துடுப்பாட்ட வீரனை இந்திய அணி இழக்கிறது என்ற வருத்தம் எல்லோரிடமும் உள்ளது. அதே நேரத்தில் வெளியே நிறைய இளைய வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரோகித் சர்மா, விராத் கோழி, விஜய், பத்ரிநாத், சுரேஷ் றைனா என நிறையவீரர்கள். ட்ராவிட் போல இவர்கள் எல்லாம் வருவார்களா? ட்ராவிட் இடத்தை நிரப்பமுடியுமா? என்றால் வாய்ப்பு கொடுத்துப்பார்த்தால்தான் தெரியும். அதேநேரத்தில் டோனியும் இளம் அணி இளம் அணி என அடம்பிடிப்பதால் தேர்வாளர்களும் அவர் பின்னால் நிறக நேரிடுகிறது. காரணம் இந்தியாவிற்கு எதிர்பாராமல் நிறைய வெற்றிகளைத் தேடித்தந்து விட்டார்

ஒருநாள் அணி. கதையே வேண்டாம் கனவில கூட ட்ராவிட் அந்த இடத்தை நினைக்க முடியாத அளவிற்கு துடுப்பாட்ட வரிசை உள்ளது. இப்போது பந்து ட்ராவிட்டின் துடுப்பை நோக்கி வீசப்படுகிறது. லாவகமாக தட்டிவிட்டு நான்கு ஓட்டத்தைப் பெற்று அணிக்குள் இருப்பாரா? அல்லது கிளீன் போல்ட் ஆகி வாழ்வை முடித்துக்கொள்வாரா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

(மீண்டும் வருவேன் என்கிறாரா? அல்லது போகிறேன் என்கிறாரா?)
மீண்டு வரவேண்டும் அதுதான் எல்லோர் விருப்பமும். மீண்டும் வரும் நேரத்தில் அவரைப் பற்றி மீண்டும் எழுதவேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது.

திங்கள், 15 டிசம்பர், 2008

இந்தியாவின் இமாலய வெற்றி!

இப்போது ஆஸ்திரேலியர்களின் பேச்சு கிரிக்கட்டில் அடிபடுவது குறைந்து கொண்டு வருகிறது. காரணம் இந்தியாவின் அசுர எழுச்சி. 'அட நம்மாளா இப்படி பொழந்து கட்டுறான்' என சில இந்திய ரசிகரே வியக்கும் அளவிற்கு இருக்கிறது. மகிழ்ச்சிதானே. தொடரட்டும் வெற்றிக் குவிப்புகள்.

இங்கிலாந்தின் வெற்றிக் கனவை சேவாக் அடித்து நொருக்கி ஆட்டம் காணவைத்தார். பின்னர் சச்சினும் யுவராஜ் சிங்கும் இணைந்து இந்தா அந்தா இங்கிலாந்து வெல்லுது என்ற போட்டியை இலகுவாக தம்பக்கம் திருப்பி வெற்றிக்கனியை சுவைத்தனர்.

டெஸ்ட் போட்டி வரலாற்றில் மகத்தான வெற்றி. 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெறப்பட்ட நான்காவது பெரிய வெற்றி. இரண்டாவதும் இந்தியாவிடம்தான் உள்ளது.

உண்மையில் சேவாக்கின் அதிரடிதான் போட்டியின் போக்கையே மாற்றியது. 1999ல் இப்படித்தான் பாகிஸ்தனிற்கு எதிராக அதுவுமிதே சென்னையில் நடந்த போட்டியில் சச்சின் இறுதி நேரத்தில் காலை வார இந்தியாவிற்கு ஒரு பரிதாப தோல்வி நிகழ்ந்தது. 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த இந்தியா ஆரம்பத்தில் தடுமாறி பின்னர் சச்சின் மொங்கியா இணை மூலம் வெற்றியை எட்டும் நேரத்தில் 17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 7வது விக்கட்டாக சச்சின் ஆட்டமிழந்தார். பின்னர் என்ன 4 ஓட்டங்களுக்குள் கதை முடிந்துவிட்டது.

இன்றும் வருணனையாளர்கள் அதை திரும்ப திரும்ப சொல்லிக்காட்டினார்கள். ஆனால் சச்சின் இம்முறை தேவையற்ற எந்த விதமான அடித்தெரிவுகளுக்கும் (Shot Selection) ற்கும் போகவில்லை. மிக மிக நிதனாமாக, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் போட்டியை வைத்திருந்தார். Class is Permanent. Form is Temporary. என்பார்கள் ஆனால் இரண்டும் கைவரப்பெற்றவர் சச்சின். இதை இன்று எல்லோரும் அவதானித்திருப்பார்கள். இதே வாசகத்திற்கு ராவிட்டும் பொருத்தம்தான். இப்போது அவரிற்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனிதர் இவ்வளவு மோசமாக ஆடுகிறாரே. எல்லோருக்கும் இது மிகப்பெரிய கவலை. துடுப்பாட்ட சுவர் இடிந்து விழுகிறதா? அல்லது விழுந்து விட்டதா?

இங்கிலாந்து ஏன் தோற்க வேண்டும்? என்ன தவறு செய்தார்கள்? இதை விட எவ்வாறு நன்றாக விளையாட முடியும்? பிளிண்டொவ் நிறையவே மிரட்டுகிறார். பந்துடன் ஜாலங்கள் காட்டுகிறார். இந்தியர்கள் அவரை மதித்தே ஆடினர். ஆனால் அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இன்னமும் கொஞ்சம் வேகமாக விளையாடி ஓட்டங்களை சேகரித்திருக்கலாம்.

மும்பை பயங்கரத்திற்கு பிறகும் இங்கிலாந்து இங்கே வந்து விளையாடி இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பாராட்டு உண்டு.

யுவராஜ் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தப் போட்டியில் வென்றதால் இப்போதைக்கு ராவிட்டின் தலை உருளாது. மீண்டும் இதே அணி மொகாலியில் விளையாடும். ராவிட் அந்தப்போட்டியை தனக்கு சாதகமாக்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நிறைய சாதனைகள் நிறைந்த போட்டியாக இது அமைந்துவிட்டது. இங்கிலாந்து அணியிலும் பெரிதாக மாற்றம் இருக்காது. ஓவே ஷா வின் இடத்தில் அமர்ந்த போல் கொலிங்வூட் தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். எனவே ஷா இப்போதைக்கு வெளியில் இருந்து போட்டியை கண்டுகளிக்க வேண்டியதுதான். கிறீம் சுவானும் நன்றாக கவர்ந்திருக்கிறார். அண்டர்சன் அல்லது ஹார்மிசனுக்கு பதிலாக ஸ்ருவர்ட் புரோட் இற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் ஒரு கிரிக்கட் பதிவில்........!

திங்கள், 24 நவம்பர், 2008

பொறுப்பற்ற ஆட்டம்....!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி நேற்று பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா டக்வேர்த்-லூயிஸ் முறையில் 19 ஓட்டங்களால் வென்றது தெரிந்ததே.

உண்மையில் இந்தியா இந்த தொடர் முழுவது நன்றாக விளையாடி வரும் நிலையில் இங்கிலாந்து அணியும் மோசமாகவே விளையாடி வருகிறார்கள்.

நேற்றைய ஆட்டம் இங்கிலாந்திற்கு வாழ்வா சாவா போட்டி. என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியிடம் இருந்த போட்டியை அவர்களாகவே இந்தியாவிடம் தாரைவார்த்துக் கொடுத்தனர்.

டக்வேர்த்-லூயிஸ் முறையில் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 198. அதுவும் 22 ஓவரில். இது ஒரு கடின இலக்குத்தான். ஆனால் 20-20 போட்டிகளில் நன்றாக பரிச்சயம் உள்ள வீரர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆரம்ப ஜோடிகள் பெல்-போபரா இணை மிக மோசமாக விளையாடியது. இதுதான் போட்டியின் திசையை மாற்றியது என நான் கருதுகிறேன். 6 ஓவரில் வெறும் 21ஓட்டங்கள் தான். பீட்டர்சன் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆரம்ப இணையின் விளையாட்டு உத்தி தாக்குதல் பாணியில் அமையவில்லை. அடித்து ஆட முயன்று ஆட்டமிழந்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். அடிக்க முனைந்து ஆட்டமிழந்தார் என்பர். ஆனால் அவர்கள் இருவரும் அந்த உத்திக்கு எத்தணிக்கவே இல்லை. போபரா ஆட்டமிழக்க பின்னால் வந்த ஓவே ஷா வும் மெதுவாகவே ஆரம்பித்தார். இவை பின்னால் வந்த வீரர்களுக்கு அழுத்தம் கூட்டுவதாகவே அமைந்தது.
அருமையான வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். இந்தியாவிற்கு 5வது பந்து வீச்சாளர் பகுதிநேரப்பந்து வீச்சாளரே. அதையும் அவர்கள் பெரிதாக பயன்படுத்தவில்லை.

பீட்டர்சன் துடுப்பாடும் போது பட்தட்டம் தெரிகிறது. அணித்தலைவர் என்ற சுமை அவரது துடுப்பாட்டத்தை இந்தத்தொடரில் வெகுவாகவே பாதித்துவிட்டது. 3ம் இலக்க வீரராக பிளிண்டொவ் இனை இறக்கி பீட்டர்சன் கொஞ்சம் பின்னாலே வந்திருக்கலாம். அவர் செய்கிறாரோ இல்லையோ ஏனைய வீரர்களுக்கு மனதில் தைரியத்தை கொணர்ந்திருக்கும்.

அதிர்ஷ்டம் இல்லை என்பதைவிட இங்கிலாந்து போட்டியில் சிறந்த திட்டமிடல் இல்லாததால் கோட்டை விட்டது. மீண்டு ஒரு வெற்றி இந்தியர்க்கு. இது தொடரை அவர்கள் வசமாக்கிவிட்டது.

மீண்டும் ஒரு கிரிக்கட் பதிவில்........!