செவ்வாய், 18 மே, 2010

இது இங்கே மலிவு....!!!

"இஞ்சே உங்க யாரையும் ஒரு ரெண்டு வேலைகாரரைப் பிடிக்கலாமே?” என்று தனக்குத் தெரிந்த ஒரு ஐயாவிடம் கேட்டாள் லட்சுமி. “எங்கயனை பிடிக்கப் போறாய் இந்த நேரத்தில...அது சரி என்னத்துக்கு மோனை?” என்ற ஐயாவிடம் . “ஒரு பங்கர்* வெட்ட வேணும் அப்பு, காசு கூட எண்டாலும் குடுக்கலாமனை, குறைஞ்சது ஒராளைத் தன்னும் பிடிச்சுத் தரமாட்டியளே...?” என்றவளிடம் “பாப்பம் உதில சந்திக்குத்தான் போறன், ஆரும் நிண்டால் கூட்டியாறன்......” என்று சொல்லி வெளிக்கிட்டார் ஐயா.

“ப்ச்ச்ச்...” என்றபடி நகர்ந்தாள் லட்சுமி. வீடு இல்லை. பத்தோடு பதினொன்றாக எல்லோருடனும் அவள் இருந்தாள். “ச்சீ ஒரு வேலைக்காரரையும் பிடிக்க முடியல...இந்த ஊட்டுக்க** வெட்டினாத்தான் உண்டு...இல்லாட்டி பாழ்படுவார் தொடங்கிடுவானவை..” என புறுபுறுத்தவளிடம் வந்தார்கள், அருகில் இருந்த மணியத்தாரும் மனைவி கமலாவும். ”என்ன பிள்ளை என்ன ஆச்சு..” என்று வாடிய முகத்துடன் இருந்த லட்சுமியிடம் கேட்டார் மணியண்ணை. “ஒரு பங்கர் வெட்ட ஆள் தேடினால் ஒருத்தரும் கிடைக்கல...இந்த அமைதிக்குள்ள வெட்டி முடிச்சிடோணும்.....” என்றாள் லட்சுமி. “ஏன் பிள்ளை அவர் எங்க..? நீங்கதானே ஒரு பங்கர் வெட்டி வச்சிருந்தனியள் .....அதுக்கு என்ன நடந்தது ..?” என கேட்டாள் கமலா.

கமலாவை விளித்து பார்த்துவிட்டு....எங்கோ பார்த்தபடி சொன்னாள், “ நேற்றைக்கு இரவு என்னை பங்கருக்குள்ள இருக்க சொல்லிப்போட்டு மனுசன் வெளியாலை வந்தவர். அந்த நேரம் பார்த்து கூவிக்கொண்டு வந்த ஷெல் அவருக்கு பக்கத்துல விழுந்தது போல.....அவர் அதிலையே .........” என்று இழுத்தாள். எந்த சலனமும், துக்கமும் இன்றி சொன்ன அவளின் கண்களில் நீர் உருண்டு கன்னத்தில் வழிந்தது. விம்மல்கள் எதுவும் இல்லை. உதடு துடித்து அழுகை எதுவும் இல்லை. ”அதுக்குள்ளயே அவரை புதைச்சுப் போட்டன். இப்ப ரெண்டு பிள்ளையளையாவது காப்பாத்த வேணும் அதுக்கு புது பங்கர் வெட்ட வேணும்” என்றவளைப் பார்த்து விறைத்து, விக்கித்து நின்றனர் மணியண்ணையும் கமலாவும்....!

* பங்கர் - பதுங்குகுழி
** ஊட்டுக்க - இடைவெளிக்குள் (வட்டாரச்சொல்)

மே 18 முள்ளிவாய்க்காலில் மரணமடைந்த அனைத்து ஈழத்தமிழ் உறவுகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்....!!!!!

2 கருத்துகள்:

புழுதிப்புயல் சொன்னது…

இது கதையல்ல .. நிஜம்... எல்லாத்துக்கும் களம் பதில் சொல்லும் எண்டு சொல்லுறாங்களே, இதுக்கும் பதில் சொல்லுமா????

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வேதனையைப் பகிர்கிறேன்!

கருத்துரையிடுக