வியாழன், 23 ஜூலை, 2009

ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

காலப்பெருவெளியின் ஓட்டத்தில் நாம் கட்டுண்டு அதனோடு அடித்துச் செல்லப்படுகிறோம். கடுகதி வாழ்க்கை. கண்டவருடன் கதைக்க முடியாத நிலை. காரணம். காலத்தின் வேகம். நேற்று நடந்தது போல் உள்ளது ஆனால் இன்று ஒரு வருடம் ஆகிவிட்டது. இரு வருடம் ஆகிவிட்டது என்றெல்லாம் புலம்புகிறோம். எல்லாமே காலம் எம்மை தன்னோடு கடத்தியதால் வந்த மாயம். ஆனாலும் அவ்வப்போது நாம் அன்றாட வாழ்வில் நடந்தவற்றை நினைவு கூறுகின்றோம். சிலவற்றை தவறவிடுகிறோம்.

எங்கே போனாலும், எதை செய்தாலும் இன்றும் பசுமரத்தாணி போல இருப்பது நமது பராய வாழ்வு தந்த பலாச்சுளை நினைவுகள் தான். தனியே இருந்து வானம் பார்த்து அல்லது இயற்கையோடு அளவளாவி நினைத்து பார்க்கின்ற போது அவை கனத்த நினைவுகளாகவும் இருக்கலாம் அல்லது கனிவான நினைவுகளாகவும் இருக்கலாம். அந்த இனிய நினைவுகளால் சிரிப்பும் வரும். சில வேளை விழியோரம் சிறு துளி எட்டியும் பார்க்கும்.

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா....?" இந்தப்பாடல் கேட்காத தமிழ்க்காது இருக்கவே முடியாது. அதுவும் ஈழத்தமிழர்களில் அநேகம்பேர் இந்தப் பாடலை கேட்காவிட்டாலும் இந்த வரிகளை சொல்லி இருப்போம். காரணம் எமது மக்களின் இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளுமே.

வரலாறு படிக்கின்ற பாடசாலைக்காலங்களில் ஒரு பாடம் இருக்கும் தென்மேற்கு நோக்கிய இராசதானி நகர்வு. அதாவது அந்தக்காலங்களில் இலங்கையில் ஆண்ட மன்னர்கள் தமது அரசாட்சியை பல்வேறு காரணங்களுக்காக தென்மேற்கு நோக்கி நகர்த்தினர். ஆக அந்தக்காலத்திலும் இடப்பெயர்வுகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஈழத்தமிழர் கண்ட இடப்பெயர்வுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

சொந்த வீடு, சேர்த்த சொத்து, காலம் காலமாக கட்டிகாத்து வந்த பல முதுசங்கள் எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை. இப்படி இடம்பெயர்ந்து மரங்கள், பாடசாலைகள், உறவினர் வீடு என சென்று இருந்தாலும் நாம் எமது வீட்டில் வசிப்பது போன்று வருமா. இன்றும் உயர்பாதுகாப்பு வலயம் என எமது தாய்நிலங்கள் அபகரிக்கப்பட , அதனை இழந்த அப்பாவி மக்கள் வெறும் குடிசைகளில் தமது வாழ்வைக் கழிக்கின்றனர். குடியிருக்கின்றனர். கேட்பார் எவரும் இல்லை. இவர்கள் செய்த பாவம்தான் என்ன? சொந்த நிலம், தமது உழைப்பு பணத்தில் கட்டிய சொந்த வீடு எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத ஏதிலி நிலை.

--------

அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படப்பாடல். நெஞ்சை நெக்குருக வைத்துவிட்டது. "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டொழிய அருள்வாயோ....." பம்பே ஜெயஸ்ரீ அவர்களின் தேனான குரல். பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் இறவனை இறைஞ்சும் குரல் மூலம் அற்புதமாக அமைந்துள்ளது. மனதைப் பிழியும் ஒரு பாடல். படத்தின் கதைக்கு இந்தப்பாடல் பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது. ஈழத்தமிழனின் துயர் சொல்லும் அருமையான பாடல். இந்தப் படைப்பை எமக்கான படைப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்!
வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ!
புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்!
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

சோறில்லை! சொட்டு மழை நீரில்லை!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்!
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே!

வேராகி, ஐம்புலனும் வேறாகி,
பொன்னுலகம் சேறாகி போகமாட்டோம்!
எம் தஞ்சை, யாம் பிறந்த பொன்தஞ்சை,
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும், சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே! வெம் புலித்தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ!
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வைரமுத்துவின் வைர வரிகள். வைரமுத்து இந்தப் பாடலை எழுதுவதற்கு அருகதை உடையவரே. ஏற்கனவே "கன்னத்தில் முத்தமிட்டால்.." படத்தில் வந்த 'விடை கொடு எங்கள் நாடே...' பாடலை ஈழத்தமிழ் இனத்தின் அவலத்திற்காக எழுதியவர். மீண்டும் அவருக்கு அரிய சந்தர்ப்பம். நான் நினைக்கிறேன் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக இந்தப்பாடல் எழுதிக் கொண்டிருந்த சமயம் ஈழத்தில் தமிழினம் சொல்லொனாத் துன்பத்தை சந்தித்துக்கொண்டிருந்தது. அந்த பாடலுக்கு மனதில் ஈழ அவலமும் சோழநாடும் கருவாக வைரமுத்து அவர்களுக்கு தோன்ற பாடல் பிறந்திருக்க வேண்டும். இப்போது கேட்கும் போதெல்லாம் இதயத்தை பிசைகிறது.

அதே 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் வருகின்ற மற்றொரு பாடல் 'தாய் தின்ற மண்ணே...' எனத்தொடங்குகிறது. வைரமுத்துவின் வைர வரிகளுக்கு குரல் விஜய் யேசுதாஸ். அருமையான இசை. விழியோரம் கசியும் நீரை தவிர்க்க முடியவில்லை.

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா........!
------------------
ஒவ்வொரு இடப்பெயர்வும் ஆறாத ரணம்தான். பெரும் வலிகளையே தந்தது.
'வைகைல ஊர் முழுக
வல்லோரும் சேர்ந்தெழுக
கைப்பிடியாய் கூட்டி வந்து
கரைசேர்த்து விட்டவளே'
என வைரமுத்து பாடி ஒருமுறை மேடையிலேயே கண்ணை கசக்கி நா தளுதளுத்தார். அவரைப்போலவே எமக்கு ஒன்றல்ல, நூறு இருக்கின்றன. எதை சொல்வது. ஏன் இப்பொழுது இறுதியாக இந்த வன்னி மக்கள் பட்ட அவலம் உலகில் வேறு எவனும் பட்டிருக்க முடியாது. அந்த மக்களின் மனோபலத்திற்கு முன்னால் நான் மண்டியிடுகிறேன். வானிலே இரண்டு மழை. ஒன்று எறிகணை மழை, இரண்டு விண்ணில் இருந்து வருண பகவானின் கண்ணீர் மழை. எல்லாம் தாங்கி இன்றும் ஏதிலிகளாக யாருமற்ற அனாதைகளாக முட்கம்பி முகாமுக்குள் வாழும் அந்த மக்களுடன் ஒப்பிடும் போது நாம் என்ன சந்தித்தோம். அந்த அவலங்களுடன் ஒப்பிடும் போது எமக்கிருந்த சொந்தப் பிரச்சினைகள் எல்லாம் சொத்தைப் பிரச்சினைகள்.


பிறந்த மனிதன் வாழும், ஏன் உண்ணும் உரிமை கூட மறுக்கப்பட்ட ஒரு கேவலமான இனமாக இந்த தமிழினம் இருக்கிறது. இவர்களின் இதயம் எவ்வாறு இருக்கும். எத்தனை கொடுமைகளை சந்தித்து இருக்கிறார்கள். எத்தனை வலிகளை தாங்கி கொண்டு இருக்கிறார்கள். சென்னை மரீனா கடற்கரையில் அண்ணா சமாதியிலே ஒரு வரி உண்டு. "எதையும் தாங்கும் இதயம் இங்கே அமைதியாக உறங்குகிறது". அண்ணாவை தெய்வமாக மதிப்பவர்கள் என்னை மன்னியுங்கள். ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் தன்னுடைய இதயத்தில் தாங்கியதை விடவா அண்ணா தாங்கிவிட்டார்.

முகாமில் வாழும் இல்லை இல்லை வாடும் மக்களே உங்களுக்கு முன்னால் நாம் கால் தூசிக்கு சமன். உங்கள் முகங்களை நேருக்கு நேர் பார்க்கும் அருகதை அற்றவர் நாம். விடியாத இரவென்று வானில் ஏதும் உண்டா என்ற அதே வைரமுத்துவின் வரிதான் மீண்டும் நினைவில் நிழலாடுகிறது.

16 கருத்துகள்:

தங்க முகுந்தன் சொன்னது…

அருமையாகத் தமிழரின் உணர்வுகளை அப்படியே சொல்லியுள்ளழுர்கள்! அகதி என்று ஓரு நாட்டில் அவமானங்களுடன் வாழுவதைவிட சொந்த ஊரில் சாவதை நான் பெருமையாக நினைக்கின்றேன்! நன்றி - தங்கள் சொற் தமிழுக்கு!
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா....?" எனக்குப் பிடித்த நான் ஒவ்வொரு நாளும் கேட்கும் அருமையான பாடல்

கானா பிரபா சொன்னது…

பாடல்களினூடு வலிக்கும் நிஜத்தை சொன்னீர்கள், புலம் பெயர்ந்து பாதுகாப்பான ஒரு வாழ்வில் இருந்தாலும் வெறுமையாகப் போன வாழ்க்கையும் எம் இனத்துக்கு வாய்த்திருக்கிறதே :(

ஆ.ஞானசேகரன் சொன்னது…

உணர்வுகளை அப்படியே சொல்லியுள்ளீர்கள் நண்பா. பாடலும் அப்படியே... நல்ல பகிர்வு நன்றி

கிடுகுவேலி சொன்னது…

//..தங்க முகுந்தன் said...
அகதி என்று ஓரு நாட்டில் அவமானங்களுடன் வாழுவதைவிட சொந்த ஊரில் சாவதை நான் பெருமையாக நினைக்கின்றேன்...//

தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம் இதுதான் எல்லோர் எண்ணங்களும். வரவிற்கு கருத்துக்கும் நன்றிகள் முகுந்தன்.

கிடுகுவேலி சொன்னது…

//... கானா பிரபா said...
புலம் பெயர்ந்து பாதுகாப்பான ஒரு வாழ்வில் இருந்தாலும் வெறுமையாகப் போன வாழ்க்கையும் எம் இனத்துக்கு வாய்த்திருக்கிறதே....//

உண்மைதான். எல்லோர் ஏக்கமும் இதுதான். இவ்வாறு ஆகிவிட்டதே என்றுதான். நடைப்பிணமாக கழியும் நாட்கள் விடியும் ஒருநாள்.

கிடுகுவேலி சொன்னது…

//..ஆ.ஞானசேகரன் said...

உணர்வுகளை அப்படியே சொல்லியுள்ளீர்கள்.....//

வணக்கம் ஞானசேகரன் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றிகள்.

ஹேமா சொன்னது…

கதியால் கனநாளுக்குப் பிறகு உங்கள் வேலிப்பக்கம்.நொந்து கிடக்கும் மனசை இன்னும் நோவாக்க இரண்டு பாடல்கள்.அழுவதைத் தவிர வேறு வழி இல்லை.எப்பத்தான் எம் வேதனைகள் தீரப்போகுது.

வலசு - வேலணை சொன்னது…

//
விடியாத இரவென்று வானில் ஏதும் உண்டா?
//
இந்த நம்பிக்கை மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதுவும் எத்தனை நாளைக்கோ?

கிடுகுவேலி சொன்னது…

//...ஹேமா said...

நொந்து கிடக்கும் மனசை இன்னும் நோவாக்க இரண்டு பாடல்கள். அழுவதைத் தவிர வேறு வழி இல்லை.எப்பத்தான் எம் வேதனைகள் தீரப்போகுது....//

தீரும் என்ற நம்பிக்கைகள் இன்னமும் அணையாமல் இருக்கின்றன. பார்ப்போம். நன்றியும் வணக்கமும் ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

//...வலசு - வேலணை said...

//
விடியாத இரவென்று வானில் ஏதும் உண்டா?
//
இந்த நம்பிக்கை மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதுவும் எத்தனை நாளைக்கோ?....//

எமது அவலங்கள் அகலும் வரை எமது நம்பிக்கைகளும் அகலக்கூடாது. நன்றி வலசு வருகைக்கும் கருத்துக்கும்.

அருண்மொழிவர்மன் சொன்னது…

வலிகளை அருமையாகப் பதிவுசெய்துள்ளீர்கள்... இதில் பெரிய சோகம் என்னவென்றால் புலம் பெயர் நாடுகளில் இந்த அகதி முகாம் மககளின் அவலம் பற்றி பெரிய அளவில் கதையாமல் இப்போதுவரை மே மாத மத்தியில் என்ன நடந்தது என்று மட்டும் கதைத்துக் கொண்டிருப்பது. “தெருவெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு, வெளளை வேட்டி” என்றூ ஒரு கவிஞன் சற்று ஆவேசமாக 30 ஆண்டுகளின் முன்னர் சொன்னதை இன்றும் நிரூபித்துவருகிறார்கள் எம்தமிழ் மக்கள்.
பாட்ஷா திரைப்படத்தில் “பேசாம இருந்தா இந்தியன் செத்திடுவான்” என்ற வசனம் வரும், அதை தமிழன் என்றூ மாற்றிவிடலாம் என்று நினக்கிறேன். பேச்சிலேயே புணர்வின்பம் அடைந்துவிடும் மகள் அல்லவா எம்மவர்கள்.... அது போல வாய் பேச்சாலேயே விடுதலை வாங்கலாம் என்று முட்டாள்தனமாக கனவு காண்கிறார்கள்..... கழுதைக்கு காமம் கத்தினா தீரும் என்று சரியாக தான் சொல்லியிருக்கின்றார்கள்...

உங்கள் கட்டுரையில் ஒரே ஒரு விடயத்தை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
”. ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் தன்னுடைய இதயத்தில் தாங்கியதை விடவா அண்ணா தாங்கிவிட்டார். ”
என்று எழுதியுள்ளீர்கள். இதை எழுதும்போது சரியாக சிந்தித்துத்தான் எழுதினீர்களா என்று தெரியவில்லை..

அண்ணா தமிழ்நாடு பற்றிய சில அருமையான கனவுகளை கண்டவர். தந்து அரசியல் வாழ்வின் உச்சக்கட்டத்திலேயே “தம்பி வா, தலைமை ஏற்க வா” என்று நெடுஞ்செழியனை அழைத்து பதவியை தந்தவர். அவர் அமைத்த தி. மு. கவும் அதன் வழி வந்த அதிமுக, மதிமுக என்றெல்லா க க களும் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ போன்ற கோமாளிகள் கையில் சிக்குண்டு சிதைவதை கண்டு அவர் மனம் அழுந்துவதை விட அதிகமாகவா எம்மவர்களோ, பலஸ்தீனியர்களோ, இல்லை எவராவதோ தாங்கியிருப்பார்கள்...??????????????

கிடுகுவேலி சொன்னது…

//..அருண்மொழிவர்மன் said...

வலிகளை அருமையாகப் பதிவுசெய்துள்ளீர்கள்... இதில் பெரிய சோகம் என்னவென்றால் புலம் பெயர் நாடுகளில் இந்த அகதி முகாம் மககளின் அவலம் பற்றி பெரிய அளவில் கதையாமல் இப்போதுவரை மே மாத மத்தியில் என்ன நடந்தது என்று மட்டும் கதைத்துக் கொண்டிருப்பது. “தெருவெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு, வெளளை வேட்டி” என்றூ ஒரு கவிஞன் சற்று ஆவேசமாக 30 ஆண்டுகளின் முன்னர் சொன்னதை இன்றும் நிரூபித்துவருகிறார்கள் எம்தமிழ் மக்கள்.
பாட்ஷா திரைப்படத்தில் “பேசாம இருந்தா இந்தியன் செத்திடுவான்” என்ற வசனம் வரும், அதை தமிழன் என்றூ மாற்றிவிடலாம் என்று நினக்கிறேன். பேச்சிலேயே புணர்வின்பம் அடைந்துவிடும் மகள் அல்லவா எம்மவர்கள்.... அது போல வாய் பேச்சாலேயே விடுதலை வாங்கலாம் என்று முட்டாள்தனமாக கனவு காண்கிறார்கள்..... கழுதைக்கு காமம் கத்தினா தீரும் என்று சரியாக தான் சொல்லியிருக்கின்றார்கள்...

உங்கள் கட்டுரையில் ஒரே ஒரு விடயத்தை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
”. ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் தன்னுடைய இதயத்தில் தாங்கியதை விடவா அண்ணா தாங்கிவிட்டார். ”
என்று எழுதியுள்ளீர்கள். இதை எழுதும்போது சரியாக சிந்தித்துத்தான் எழுதினீர்களா என்று தெரியவில்லை..

அண்ணா தமிழ்நாடு பற்றிய சில அருமையான கனவுகளை கண்டவர். தந்து அரசியல் வாழ்வின் உச்சக்கட்டத்திலேயே “தம்பி வா, தலைமை ஏற்க வா” என்று நெடுஞ்செழியனை அழைத்து பதவியை தந்தவர். அவர் அமைத்த தி. மு. கவும் அதன் வழி வந்த அதிமுக, மதிமுக என்றெல்லா க க களும் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ போன்ற கோமாளிகள் கையில் சிக்குண்டு சிதைவதை கண்டு அவர் மனம் அழுந்துவதை விட அதிகமாகவா எம்மவர்களோ, பலஸ்தீனியர்களோ, இல்லை எவராவதோ தாங்கியிருப்பார்கள்...?????????????//

நன்றி அருண்மொழிவர்மன்....! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். உங்களின் அண்ணா மீதான பார்வை அப்படி இருக்கிறது. எனது பார்வை இப்படி இருக்கிறது. நீங்கள் திராவிட கட்சி அழிவதைப் பார்க்கிறீர்கள். நான் ஒரு இனம் அழிவதை பார்க்கிறேன். அது அவர்களுக்கு அது பெரிதாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை...இப்படி மக்கள் அவலங்களை சந்தித்தது அண்ணா சந்தித்த சோதனைகளோடு ஒப்பிடவே முடியாது. வேதனைகளின் குறியீடு. அவலங்களின் அச்சுப்பதிப்பு. இதுதான் ஈழத் தமிழர்களின் நிலை.

M.Thevesh சொன்னது…

பொதுவக திராவிட(இந்திய)தமிழர்கட்கு
தலைவன் மேல் உள்ள பத்தி கூடுதலா னது.அந்த தலைவனை வனங்கும் பண்பாடுதான் நண்பர் அருண் மொழிவர்மனின்
நோக்கில் ஈழத்தமிழர் துயரின் பரிமாணத்தை அறிந்து கொள்ள முடியாமைக்குரியகாரணம்.அந்த வலியை ஈழத்தமிழனால் மட்டுமே மனப்பூர்வமாக உணர முடியும்.
உயிர் உள்ளவரை தீராதது இந்தவலி.

கிடுகுவேலி சொன்னது…

//.... Thevesh said...
பொதுவக திராவிட(இந்திய)தமிழர்கட்கு
தலைவன் மேல் உள்ள பத்தி கூடுதலா னது.அந்த தலைவனை வனங்கும் பண்பாடுதான் நண்பர் அருண் மொழிவர்மனின்
நோக்கில் ஈழத்தமிழர் துயரின் பரிமாணத்தை அறிந்து கொள்ள முடியாமைக்குரியகாரணம்.அந்த வலியை ஈழத்தமிழனால் மட்டுமே மனப்பூர்வமாக உணர முடியும்.
உயிர் உள்ளவரை தீராதது இந்தவலி....//

ஈழத்தமிழன் உணரும் வலி தீராததுதான். வாழ்வு விடியும் வலிகள் அகலும் என்ற நம்பிக்கைதான் இப்போது எல்லோர் நெஞ்சிலும் இருக்க வேண்டும்.

அருண்மொழிவர்மன் சொன்னது…

அண்ணாவை முன்னிறுத்தி நான் சொன்ன அந்த இறுதி இரண்டு வசனங்களும், அதை தொடர்ந்த கேள்விக்குறிகளும் முழுக்க நக்கல் நோக்கிலேயே செய்யப்பட்டவை. அதை புரிந்து கொள்ளமுடியாமல் போனதற்கு நான் எழுதிய விதம் காரணமாக இருந்திருக்குமோ தெரியாது. ஒரு இன்ம் அழிந்ததைவிட கொடுமையாக இவர்கள் செய்யும் கோமாளித்தனம் இருக்கின்றது என்றூ சொல்ல வந்தேன்.... அது புரியாமல் என்னையும் தலைவனை தூக்கி கொண்டாடும் பண்பாடின் வழிவந்தவன் என்று பொருள்பட எழுதப்பட்டு இருக்கிறது.

அதை விடுத்து அந்த மக்களின் துயரம் அண்ணாவின் துயரம் என்றெல்லாம் உரையாடல்களை வளைப்பதும் வளர்ப்பதும் அவசியமற்றது.

Thenammai Lakshmanan சொன்னது…

பாடல் கேட்டதும் இதயம் பெயெர்ந்து விட்டது போல் ஆகிவிட்டது

நடைப்பிணமாக கழியும் நாட்கள் விடியும் ஒருநாள்

உண்மைதான் நண்பரே

கருத்துரையிடுக